ஓய்வுபெற்ற SI கொலை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
- நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
- காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை:
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டவுனை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர்முகம்மதுவும் கைது செய்யப்பட்டார். நூர்நிஷாவை பிடிக்க பெண் போலீசார் அடங்கிய தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகீர்உசேன் பிஜிலி கொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க எடுத்துள்ளது.
இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி., நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அந்த பகுதியில் வக்பு நிலத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி உள்ளார்.
இதனால் சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்த விவகாரம் குறித்து 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு டி.ஜி.பி. மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.