வடமாநில கொள்ளையன் என்கவுண்டரில் சுட்டுக்கொலை- காவல் ஆணையர் அருண் விளக்கம்
- அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை.
- கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
சென்னையில் 8-க்கும் மேற்பட்ட பெண்களிடம் நகைகளை பறித்த கொள்ளையன் நேற்று நள்ளிரவு தரமணி ரெயில் நிலையம் அருகே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்நிலையில் வடமாநில கொள்ளையன் என்கவுண்டர் செய்யப்பட்டது குறித்து காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சென்னையில் நேற்று சைதாப்பேட்டையில் ஆரம்பித்து காலை 6 மணி முதல் 7 வரை செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்தன.
* தாம்பரத்தில் இதேபோன்று நகை பறிப்பு சம்பவங்கள் நடந்ததால் உடனடியாக காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்தது.
* கடைசி நேரத்தில் வந்து விமானத்தில் ஏறுபவர்கள் குறித்து கண்காணிக்குமாறு முன்பே ஏர்போர்ட் அதிகாரிகளிடம் கூறி இருந்தோம்.
* அதிகாலை விமானத்தில் வந்த இருவரும் உடைகளை மாற்றினார்களே தவிர ஷூவை மாற்றவில்லை. அதுவும் ஒரு ஆதாரமானது.
* ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தில் அமர்ந்திருந்த கொள்ளையர்களை விமான நிலைய அதிகாரிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
* செயின் பறிப்பு கொள்ளையர்கள் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுள்ளனர்.
* நேற்று பிடிக்கப்பட்ட கொள்ளையர்கள் மீது மும்பையில் 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
* ஒருவன் முந்தைய நாள் இரவும், மற்ற இருவரும் அடுத்த நாள் அதிகாலையும் சென்னைக்கு வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
* ஒருவன் முன்னதாக வந்து பைக் உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்த பின்னர் மற்ற இருவர் அடுத்த நாள் வந்து கைவரிசை.
* கடந்தாண்டு சென்னையில் நடந்த 34 செயின் பறிப்பு சம்பவங்களில் 33-ல் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளன.
* நேற்று நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் இரானி கொள்ளையர்கள். இவர்கள் இதற்கு முன்பு சென்னையில் கொள்ளைகளை அரங்கேற்றினரா என தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
* சென்னையில் கொள்ளையன் சாலையில் பைக் ஓட்டிய வேகத்தை பார்க்கும்போது இதற்கு முன்பே வந்ததுபோல் தான் உள்ளது.
* கைது செய்யப்பட்டவர்கள் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
* அனைத்து நகைகளையும் மீட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.