தமிழ்நாடு

பஸ்சில் இருந்து இறக்கி பிளஸ்-1 மாணவனை அரிவாளால் வெட்டிய விவகாரம்- 5 தனிப்படை அமைப்பு

Published On 2025-03-10 11:51 IST   |   Update On 2025-03-10 11:51:00 IST
  • மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
  • முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்தவர் தங்க கணேஷ். இவரது மகன் தேவேந்திரன் (வயது 17).

இவர் நெல்லையில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு செல்வதற்காக ஊரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ்சில் ஏறி ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார்.

அரியநாயகிபுரத்திற்கு அடுத்த ஊரான கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த 3 பேர் கும்பல் பஸ்சை வழிமறித்து உள்ளே புகுந்தது. அந்த கும்பல் பஸ்சில் இருந்த தேவேந்திரனை இழுத்து வெளியே போட்டுள்ளனர். மேலும் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டியுள்ளது.

இதில் தேவேந்திரனுக்கு தலை மற்றும் கையில் வெட்டுகள் விழுந்து காயம் ஏற்பட்டது. இதனை பஸ்சில் இருந்தவர்கள் பார்த்து சத்தம் போடவே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. இதுகுறித்து பஸ்சில் வந்தவர்கள் ஸ்ரீவைகுண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராம

கிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் பத்மபநாப பிள்ளை மற்றும் போலீசார் வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் கபடி போட்டி விளையாடுவதில் ஏற்பட்ட மோதலால் இந்த கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சியில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் குறித்து விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News