சோளிங்கர் யோக நரசிம்மர் கோவிலில் ரோப் கார் சேவை 4 நாட்கள் நிறுத்தம்
- மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
- பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள பிரசித்த பெற்ற யோக நரசிம்மசாமி கோவில் 108 திவ்ய தேசங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு 1,305 படிகள் கொண்ட பெரிய மலையில் யோக நரசிம்மர் அருள்பாலித்து வருகிறார். கார்த்திகை மாத பெருவிழாவையொட்டி முதியோர் மற்றும் நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக கோவிலில் ரோப் கார் சேவை இயங்கி வருகிறது.
இதனால் பக்தர்களின் வருகை நாளுக்குநாள் அதிகரித்துள்ளது. ரோப் காரில் மலைக்கு செல்ல ரூ.50, மலையிலிருந்து இறங்க ரூ.50 என கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், மாதந்தோறும் ரோப்கார் சேவையை சில நாட்கள் நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
அதன்படி நாளை (ஞாயிற்றுகிழமை) முதல் 12-ந்தேதி (புதன்) வரை 4 நாட்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பணிகள் முடிந்து வருகிற 13-ந்தேதி முதல் வழக்கம் போல் ரோப்கார் சேவை இயங்கும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.