சேலத்தில் பகலில் வெயில் - இரவில் கடும் பனி: மக்கள் தவிப்பு
- சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது.
- குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மார்கழி மாதம் பிறந்ததில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் குளிரின் தாக்கம் அதிகரித்தது. பின்னர் தை மாதம் பிறந்ததும் பனிப்பொழிவு சற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.
குறிப்பாக ஏற்காட்டில் ஏற்கனவே குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வந்த நிலையில் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மேலும் அதிகரித்துள்ளதால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் குளிரில் நடுங்கி வருகிறார்கள். குளிரில் இருந்து தப்பிக்க குளிர் தாங்கும் உடைகளை அணிந்து நடமாடுகின்றனர்.
மாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடும் குளிர் நிலவுவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகளும் அதே போல ஸ்வெட்டர், ஜர்கின் போன்ற உடை அணிந்து செல்கின்றனர். ஆனாலும் வழக்கத்தை விட குளிரின் தாக்கம் நடப்பாண்டில் அதிக அளவில் உள்ளதால் ஏற்காட்டில் வசிக்கும் மக்கள் மற்றும் தொழிலாளர்கள், மாணவ-மாணவிகள், சுற்றுலா பயணிகள் என அனைத்து தரப்பினரும் குளிரில் நடுங்கும் நிலையே நீடிக்கிறது.
இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, வீரபாண்டி ஆகிய பகுதிகளிலும் கடந்த 4 நாட்களாக பனிப்பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் வாகனங்களில் காலை நேரங்களில் செல்பவர்கள் குளிரில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகரில் கடந்த வாரம் குளிரின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் பனிப்பொழிவு அதிகரிப்பால் கடந்த 4 நாட்களாக குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்து வாட்டி வதைக்கிறது. இதனால் பெரும்பாலான வீடுகளில் மின் விசிறிகளை நிறுத்திவிட்டு போர்வைகளை போர்த்தியபடியே பொதுமக்கள் தூங்கும் நிலையே ஏற்பட்டது. இந்த குளிர் காலை 9 மணி வரை நீடித்ததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
இதற்கிடையே சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் காலை முதலே அதிகரிக்கிறது. மேலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெயிலின் உஷ்ணம் அதிகமாக இருப்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
மேலும் வானிலை மையமும் இனி வரும் நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்று கூறி உள்ளதால் நேற்று 86 டிகிரி வெயில் பதிவான நிலையில் இனி வரும் நாட்களில் மேலும் வெப்பத்தின் உஷ்ணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இரவில் பனி குளிரும், பகலில் வெப்பத்தின் தாக்கமும் என வித்தியாசமான காலநிலை நிலவுவதால் இரவில் குளிரிலும், பகலில் வெயிலிலும் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.