மெட்ரோ ரெயில் திட்டம்- மின் கம்பி அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் பாதிப்பு
- பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
- ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
சென்னை மெட்ரோ ரெயிலில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 63,246 கோடி மதிப்பில், மூன்று வழிதடங்களில், 118.9 கிலோமீட்டர் தொலைவிற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டுமொத்தமாக 128 ரயில் நிலையங்கள் அமைய உள்ளது.
மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்டத்திட்டத்தில் 4-ம் வழித்தடமான பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 26.1 கிலோமீட்டர் தொலைவின் ஒரு பகுதியான பூந்தமல்லி முதல் போரூர் வரையில் முதற்கட்டமாக இந்த ஆண்டு டிசம்பரில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி பணிமனையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரெயில் இன்று முதன் முறையாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையில் 2.5 கிலோமீட்டர் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.
அதிகபட்சமாக 90 கி.மீ வேகத்தில் இயங்கும் இந்த ரெயிலில் தற்போது 20 முதல் 30 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை போரூர் - பூந்தமல்லி இடையே 2.5 கி.மீ தூரத்திற்கு ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் இன்று மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறால் தாமதம் என தகவல் வெளியானது.
தொடர்ந்து, மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் சோதனை ஓட்டம் இன்று நடப்பதில் சிக்கல் எனக் கூறப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அடுத்த 3 மணி நேரத்திற்குள் சோதனை ஓட்டம் நடத்தப்படும் என மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.