எழும்பூர்-திருச்செந்தூர் இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
- எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பராமரிப்பு பணி காரணமாக சில எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, திருச்செந்தூரில் இருந்து நாளை (சனிக்கிழமை) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-20606) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து 9-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் பயணிகள் ரெயில் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் வந்தே பாரத் ரெயில் (20666) மாம்பலம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. மதுரையில் இருந்து 9-ந்தேதி காலை 6.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (12636) தாம்பரம்-எழும்பூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
எழும்பூரில் இருந்து வருகிற 9-ந்தேதி குருவாயூர் செல்லும் ரெயில் (16127) எழும்பூருக்கு பதில் தாம்பரத்தில் இருந்து காலை 10.50 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து காரைக்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.10 மணிக்கு புறப்படும். எழும்பூரில் இருந்து 9-ந்தேதி திருச்செந்தூர் செல்லும் ரெயில் (20605) எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும்.
எழும்பூரில் இருந்து மதுரைக்கு செல்லும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22671) 9-ந்தேதி 30 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும். அதே தேதியில், எழும்பூரில் இருந்து மண்டபம் செல்லும் ரெயில் (22661) எழும்பூரில் இருந்து 30 நிமிடம் தாமதமாக மாலை 6.15 மணிக்கு புறப்படும்.
இதேபோல, ஏற்கனவே பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்ட வந்தே பாரத் (20665), சார்மினார் (12759) பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருகிற 9-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.