செய்திகள்

இலங்கை போர்க்குற்றம் பற்றிய விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும்: ஐ.நா.மனித உரிமை ஆணையர் வலியுறுத்தல்

Published On 2016-06-29 05:38 IST   |   Update On 2016-06-29 05:38:00 IST
இலங்கை போர்க்குற்றம் பற்றிய விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் வலியுறுத்தினார்.
ஜெனீவா :

இலங்கை போர்க்குற்றம் பற்றிய விசாரணையில், சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையர் வலியுறுத்தினார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் ஐ.நா. மனித உரிமை ஆணைய கூட்டம் நடந்து வருகிறது. அதில், இலங்கை விவகாரம் குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையர் சையது ராத் அல் உசேன், நேற்று ஆண்டறிக்கை வாசித்தார். அவர் கூறி இருப்பதாவது:-

இலங்கையில், தன்னிச்சையான கைதுகள், சித்ரவதைகள், பாலியல் வன்முறைகள், ராணுவ கண்காணிப்பு, தொந்தரவு என்று தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த வழக்கத்துக்கு காரணமான கலாசாரத்தை கைவிட வேண்டும்.

போர்க்குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சாட்சிகள் பாதுகாக்கப்பட வேண்டும். சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணை நடைபெற சர்வதேச நீதிபதிகள் மற்றும் சர்வதேச வக்கீல்களின் பங்களிப்பு அவசியம். ஏனென்றால், இலங்கை நீதிபதிகள் மீது நம்பகத்தன்மை குறைவாக உள்ளது.

சிறுபான்மையினரான தமிழர்களிடையே நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளில் இலங்கை அரசு வேகமாக செயல்படவில்லை. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ், புதிதாக கைது நடவடிக்கைகள் எடுப்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த அறிக்கை குறித்து ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இன்று விவாதம் நடைபெறுகிறது. அப்போது, போர்க்குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசுக்கு நிர்ப்பந்தம் அளிக்கப்படும் என்று தெரிகிறது
இந்த அறிக்கை பற்றி இலங்கை வெளியுறவு மந்திரி இன்று தனது விளக்கத்தை அளிப்பார் என்று இலங்கை துணை வெளியுறவு மந்திரி ஹர்ஷா டி சில்வா தெரிவித்தார்.

Similar News