ரஷிய அதிபருடன் டெலிபோனில் பேசிய அதிபர் டிரம்ப்: முடிவுக்கு வருகிறதா உக்ரைன் ரஷியா போர்
- ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன்.
- ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது என்றார்.
வாஷிங்டன்:
ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 2 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நாடுகளும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷிய அதிபர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அமெரிக்கா- ரஷியா சிறைக்கைதிகள் பரிமாற்றம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இரு தலைவர்களும் தொலைபேசி வாயிலாக பேசினர்.
இதுதொடர்பாக அதிபர் டிரம்ப் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியதாவது:
ரஷிய அதிபர் புதினுடன் சற்று முன் தொலைபேசி வாயிலாக பேசினேன். ஆக்கப்பூர்வமாகவும் நீண்ட உரையாடலாகவும் இது இருந்தது.
உக்ரைன் விவகாரம், மத்திய கிழக்கு நாடுகள், எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, டாலரின் சக்தி என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தோம்.
இரு நாடுகளின் பலம் மற்றும் பயன்கள் குறித்தும் இருவரும் உரையாடினோம். உக்ரைன் உடனான போரால் பல லட்சக்கணக்கான உயிர்கள் பலியாவதை நிறுத்த வேண்டும் என்பதை இருவரும் முதலில் ஒப்புக்கொண்டுள்ளோம். இருவரும் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளோம்.
அமெரிக்காவுக்கு புதினும், ரஷியாவுக்கு நானும் செல்ல ஒப்புக்கொண்டுள்ளோம். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச உள்ளேன் என பதிவிட்டுள்ளார்.