மொரிஷியஸ் சென்றடைந்த பிரதமர் மோடி - விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
- அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.
- இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
மொரிஷியஸ் நாட்டின் 57-வது தேசிய தின விழா நாளை (மார்ச் 12ம் தேதி ) நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு மொரிஷியஸ் பிரதமர் நவீன் ராம்கூலம் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக தனி விமானம் மூலம் மொரிஷியஸ் புறப்பட்டு சென்றார்.
அந்நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸ் விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை தூதரக அதிகாரிகள் மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் கையில் இந்திய கொடியுடன் திரண்டு வந்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனர்.
மொரிஷியஸ் நாட்டில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இன்று மாலை அந்நாட்டு பிரதமர் நவீன் ராம்கூலத்தை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் அந்நாட்டு தலைவர்களையும் சந்தக்க இருக்கிறார்.
நாளை நடைபெறும் தேசிய தின விழாவில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொள்கிறார். இதில் இந்திய பாதுகாப்பு படையினரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். மேலும் இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலும் தேசிய தின விழாவில் பங்கேற்கிறது.