உலகம்
காசாவை இஸ்ரேலுக்கு தாரைவார்க்கும் டிரம்ப்?.. அரபு நாடுகளுக்கு கட்டளை - பரவும் அச்சம்

'காசா'வை இஸ்ரேலுக்கு தாரைவார்க்கும் டிரம்ப்?.. அரபு நாடுகளுக்கு கட்டளை - பரவும் அச்சம்

Published On 2025-01-28 12:02 IST   |   Update On 2025-01-28 12:02:00 IST
  • அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது.
  • 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுத்துவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

போர் நிறுத்தத்தையடுத்து இடப்பெயர்ந்த மக்கள் தங்களது பகுதிகளுக்குத் திரும்பி வருகிறார்கள். எல்லையைத் திறந்தபின் வடக்கு காசாவுக்குள் நெட்சாரிம் பாதை வழியாக லட்சக்கணக்கான மக்கள் நேற்றுமுதல் செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஜோர்டான், எகிப்து மற்றும் பிற அரபு நாடுகள் புகலிடம் வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்னர் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான பயணத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

"அது (காசா) இப்போது ஒரு பாதிக்கப்பட்ட இடமாகவே உள்ளது, கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். நான் அங்கிருந்து வெளியேறும் 15 லட்சம் மக்களின் எதிர்காலம் குறித்து யோசிக்க வேண்டும்.

அதை(காசாவை) நாம் முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். அதுதான் ஒரே வழி. அங்கே அவ்வளவு தான். எல்லாம் முடிந்துவிட்டது. அங்கிருந்து அவர்கள் வெளியேறுவதே சரியாக இருக்கும். எனவே நான் சில அரபு நாடுகளுடன் இணைந்து, அவர்களுக்கு வேறு இடத்தில் வீடுகளை அமைத்துத் தர வேண்டும். அங்கு அவர்கள் நிம்மதியாக வாழலாம்" என்று டிரம்ப் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

 

பாலஸ்தீனிய அகதிகளை ஜோர்டான் இப்போதே ஏற்று வருகிறது. கூடுதலாக இன்னும் அவர்கள் காசா அகதிகளை ஏற்க வேண்டும். இதுதொடர்பாக ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல்-சிசியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதனால் சூழ்நிலையை சாதமாக பயன்படுத்தி டிரம்ப் மறைமுகமாக காசாவை காலி செய்து இஸ்ரேலிடம் கொடுக்க உள்ளாரா என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.

இதனிடையே, ஏற்கனவே அமெரிக்காவுடன் செய்த ஒப்பந்தங்களின்படி 907 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகளை இஸ்ரேலுக்குவுக்கு அனுப்ப டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

காசா மீதான போரில், இஸ்ரேல் கட்டுப்பாடுகளை மீறியதால், முன்னாள் அதிபர் ஜோ பைடன் இந்த வெடிகுண்டுகளை அனுப்பாமல் தாற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. பிற பாலஸ்தீனிய நகரங்களில் இருந்து துண்டிக்கப்பட்டு தனியாக உள்ள காசாவை ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வருகிறது.

Tags:    

Similar News