உலகம்

அமெரிக்கா நாடு கடத்தும் எந்த நாட்டவராக இருந்தாலும் எல் சால்வடோர் ஏற்றுக்கொள்ளும்.. ஆனால் ஒரு ட்விஸ்ட்

Published On 2025-02-05 17:41 IST   |   Update On 2025-02-05 17:55:00 IST
  • அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல் சந்திப்பு நிகழ்ந்தது.
  • ஆவணங்களின்றி தங்கியுள்ளவரை தேடும் பணியில் அந்நாட்டு குடிவரவு (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வருபவர்களை நாடு கடத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.

குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்றும் அவர்களால் அமெரிக்கவில் பல்வேறு குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன என்றும் நாடுகடத்தலை டிரம்ப் நியாயப்படுத்தி வருகிறார். பிரேசில், கொலம்பியா, இந்தியா ஆகிய நாட்டினர் நூற்றுக்கணக்கானோர் ஏற்கனவே நாடுகடத்தப்பட்டனர்.

அமெரிக்காவில் ஆவணங்களின்றி தங்கியுள்ளவரை தேடும் பணியில் அந்நாட்டு குடிவரவு (கஸ்டம்ஸ்) அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து நாடுகடத்தப்படும் எந்த நாட்டு குடிமக்களையும் வரவேற்பதாக லத்தீன் அமெரிக்க நாடான எல்- சால்வடோர் தெரிவித்துள்ளது. ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது.

கடந்த திங்கள்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, எல் சால்வடோர் அதிபர் நயீப் புக்கேல் (Nayib bukele) சந்திப்பு நிகழ்ந்தது.

இதன்பின் பேசிய மார்கோ ரூபியோ அமெரிக்காவில் உள்ள எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினரையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகவும் அமெரிக்காவை சேர்ந்த ஆபத்தான கைதிகளையும் தாங்கள் ஏற்றுக்கொள்வதாக நயீப் புக்கேல் உறுதி அளித்துள்ளார்.

அவர்களை தங்கள் நாட்டு சிறையில் அடைத்து வைக்கும் திட்டத்தை புக்கேல் முன்வைத்துள்ளார் . அவ்வாறு எல் சால்வடோருக்கு நாடு கடத்தப்படுபவர்கள் CECOT எனப்படும் மிகப்பெரிய அதி பாதுகாப்பு வாய்ந்த சிறையில் அடைக்கும் திட்டத்தை புக்கேல் டிரம்பிடம் முன்மொழித்துள்ளார் என்று தெரிவித்தார்.

இங்கு கைதிகள் ஜன்னல்கள் இல்லாத அறைகளில் அடைக்கப்படுவர். மெத்தை இல்லாமல் இரும்புப் படுக்கைகளில்தான் தூங்க வேண்டும். உறவினர்கள், நண்பர்கள் என யார் வந்து பார்ப்பதற்கும் தடை விதிக்கப்படும். அவர்கள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படுவர்.

 

இந்த திட்டம் குறித்து தனது ஓவல் அலுவலகத்தில் பேட்டியளித்த டொனால்டு டிரம்ப், "அதைச் செய்ய எங்களுக்கு சட்டப்பூர்வ உரிமை இருந்தால், நான் அதை மனப்பூர்வமாக செய்வேன். இது நமது சிறைச்சாலை முறையை விட வேறுபட்டதல்ல, மேலும் இது மிகவும் மலிவானதாக இருக்கும்.

குற்றவாளிகளை எல் சால்வடாருக்கு அனுப்புவது தனியார் சிறைகளுக்கு நாம் செலுத்தும் கட்டணத்துடன் ஒப்பிடும்போது மிகக் குறைந்த கட்டணமாக இருக்கும். இந்த மக்கள் ஒருபோதும் நல்லவர்களாக இருக்கப் போவதில்லை, எனவே அவர்களை அங்குள்ள சிறைக்கு அனுப்புவது சிறந்தது. இந்த திட்டத்தை பரிசீலித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News