உக்ரைன் நேட்டோவில் இணைவதை மறந்துவிடலாம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
- உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
- அதிக இடங்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கடினமாக முயற்சிக்கும்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா மற்றும் ரஷியா இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவில் இணைவது தொடர்பான பிரச்சினயே இருநாடுகள் போரில் மோதும் சூழலுக்கு காரணமாக உள்ளது. இந்த நிலையில், உக்ரைன் நேட்டோவில் இணையும் திட்டத்தை மறந்துவிடலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்ப் முதல் அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "போர் நிறுத்த பேச்சுவார்த்தையின் போது உக்ரனைக்கு முடிந்தவரை அதிக இடங்கள் கிடைப்பதற்கு அமெரிக்கா கடினமாக முயற்சிக்கும்," என்று தெரிவித்தார்.
இதேபோல் ரஷியா இழந்த பகுதிகளை மீட்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப், " நீங்கள் முயற்சித்து அதனை திரும்ப பெற்றுக்கொள்வீர்கள், சரிதானே? நம்மால் முடிந்த நல்லதை செய்யப் போகிறோம். எங்களால் முடிந்தவரை சிறப்பான ஒப்பந்தம் எட்டப்படுவதை உறுதி செய்வோம். ஆனால், உக்ரைனை பொருத்தவரை நாங்கள் அவர்களுக்கு முடிந்த அளவுக்கு அதிக இடங்களை மீண்டும் கிடைக்க செய்ய முயற்சிப்போம். நாங்கள் முடிந்தவரை அதிக இடங்களை திரும்ப பெற முயற்சிக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.