நிறைய ஜீரோக்கள் மிஸ் ஆகுதே.. சீனாவின் DEEPSEEK AI மீது சந்தேகத்தை கிளப்பிய OPEN AI சி.இ.ஓ
அமெரிக்காவை சேர்ந்த ஓபன் ஏஐ நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு உருவாக்கிய சாட்ஜிபிடி ஏஐ உலகளவில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆனால் சமீபத்தில் சீனாவின் ஸ்டார்ட் அப் நிறுவனமான டீப் சீக் புதிய ஏஐ மாடல் ஒன்றை அறிமுகப்டுத்தியது. மற்றவற்றைக்காட்டிலும் இதை உருவாக்க வெறும் 6 மில்லியன் டாலர்கள் மட்டுமே செலவானதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
இதனால் உலகளவில் சாட்ஜிபிடி உள்ளிட்ட அமெரிக்க ஏஐ மாடல்கள் கடும் பின்னடைவை சந்தித்தது. பிரீமியம் முறையில் சாட்ஜிபிடி கொடுத்து வந்த அனைத்து நவீன வசதிகளையும் டீப்சீக் ஏஐ இலவசமாகவே வழங்குகிறது. இதனால் ஏஐ தொழில்துறையில் சர்வதேச அளவில் அமெரிக்க நிறுவனங்களுக்கு டீப்சீக் தலைவலியாக மாறியுள்ளது.
இந்நிலையில் டீப்சீக் ஏஐ குறித்து ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) சாம் ஆல்ட்மேன் சந்தேகங்களை முன்வைத்துள்ளார்.
தற்போது இந்தியா வருகை தந்துள்ள சாம் ஆல்ட்மேன் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், சீன நிறுவனமான டீப்சீக் குறைத்த விலையில் தனது ஏஐ மாடலை உருவாக்கியதாக விளம்பரப்படுத்தியது.
ஆனால் ஏஐ மாடலை 6 மில்லியன் டாலரில் உருவாக்கினார்கள் என்பதில் ஆரம்பத்திலிருந்தே சந்தேகம் உள்ளது. நிச்சயம் அதில் (6 மில்லியன் டாலருடன்) பல சைஃபர்கள் காணாமல் போயுள்ளது (உண்மையான செலவு மறைக்கப்பட்டுள்ளது).
அவர்களின் ஏஐ ஒரு நல்ல மாடல்தான். நாங்கள்(ஓபன் ஏஐ) அதை விட சிறந்த மாடல்களை உருவாக்குவோம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியியாவில் ஓபன் ஏஐ சேவை விரிவாக்கம் பற்றியும் அவர் பேசியுள்ளார்.