என் மலர்
கிரிக்கெட் (Cricket)

காலில் விழாததால் வாய்ப்பு கொடுக்கல.. உண்மையை உடைத்த கம்பீர்

- அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்.
- அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் இந்தியாவின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் 75 ரன்கள் அடித்த அவர் டோனி தலைமையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வெல்ல உதவினார். அதே போல 2011 உலகக் கோப்பை இறுதி போட்டியில் சுயநலமின்றி 97 ரன்கள் அடித்த அவர் 28 வருடங்கள் கழித்து இந்தியா கோப்பை முத்தமிட உதவினார்.
மேலும் கொல்கத்தா அணிக்காக 2012, 2014 வருடங்களில் கோப்பையை வென்ற அவர் 3-வது வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்துள்ளார். ஓய்வுக்கு பின் அதிரடியான கருத்துக்களை தைரியமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ள அவர் தற்போது ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் வெற்றிகரமான பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தனது இளம் வயதில் அண்டர்-14 அணியில் விளையாடுவதற்காக தேர்வாளரின் காலில் விழ சொன்னதாக கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியதாவது:-
நான் வளரும் போது 12, 13 வயதில் என்னுடைய முதல் அண்டர்-14 தொடர் வந்தது நினைவிருக்கிறது. அந்தத் தொடரில் தேர்வாளரின் காலை நான் தொடாததால் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. அன்றிலிருந்து யாருடைய காலையும் எப்போதும் தொடுவதில்லை என்று நான் எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன். அதே போல வேறு யாரும் என்னுடைய காலை தொட விடக்கூடாது என்று முடிவெடுத்தேன்.
அண்டர்-16, அண்டர்-19, ரஞ்சிக் கோப்பை அல்லது என்னுடைய சர்வதேச கேரியரின் ஆரம்பத்தில் ஒவ்வொரு முறையும் நான் தோல்வியடையும் போது கிரிக்கெட் விளையாடுவதற்கு தேவையற்ற குடும்பத்திலிருந்து நீங்கள் வந்துள்ளீர்கள் என்று பலரும் விமர்சித்தார்கள். அத்துடன் நீங்கள் உங்களுடைய அப்பாவின் தொழிலுக்கு சென்று விடுங்கள் என்று சொன்னார்கள். அது தான் என் தலை மீது தொங்கிய மிகப்பெரிய கருத்து.
ஆனால் நான் அவர்களை விட அதிகமாக விரும்புகிறேன் என்பதை மக்கள் உணரவில்லை. நான் அந்த உணர்வை வெல்ல விரும்பினேன். அதை என்னால் செய்ய முடிந்த போது வேறு எந்த பார்வையும் என்னை தொந்தரவு செய்யவில்லை. என் வாழ்க்கையில் வெல்ல மிகவும் கடினமான கருத்து என்னவென்றால் அதை நான் கடினமாக விரும்பவில்லை. நான் அவர்களை விட கடினமாக இருக்க விரும்பினேன்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.