என் மலர்
வழிபாடு

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா

- 8-ம் திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவில் ஒவ்வொரு நாளும் காலை, மாலையில் சுவாமி பல்வேறு வாகனங்கள் மற்றும் சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 5-ம்திருவிழாவில் குடைவருவாயில் தீபாராதனையும், 7-ம்திருவிழாவான நேற்று காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
8-ம்திருவிழாவான இன்று கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. 5.30மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.
இன்று காலை வெள்ளி சப்பரத்தில் சுவாமி சண்முகர் பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது. மதியம் 12மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்ச மாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம்திருவிழா தேரோட்டம் நாளை மறுநாள் (12-ந்தேதி) நடக்கிறது. அன்று காலை 7மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது .
(13-ந்தேதி) தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
(14-ந் தேதி) மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவுபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.