search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
    X

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் தெப்பத்திருவிழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது

    • தெப்பத்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடைபெறுகிறது
    • 3-ந்தேதி தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார்.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வருடம் முழுவதும் திருவிழா நடைபெறும். இதில் தெப்பத்திருவிழாவும் ஒன்று. இந்த திருவிழா நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடப்பட்டது.

    அப்போது, முகூர்த்தக்காலின் நுனியில் சந்தனம், மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப்பொருட்கள் அணிவிக்கப்பட்டு, மந்திரங்கள் ஓதி, புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் முகூர்த்தக்காலை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர்.

    தெப்பத்திருவிழாவின் முதல் நாளான இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு ஹம்ச வாகனத்தில், 24-ந்தேதி மாலை 6.30 மணிக்கு ஹனுமந்தவாகனத்தில், 25-ந் தேதி மாலை 6.30 மணிக்கு கற்பகவிருட்ச வாகனத்தில், 26-ந்தேதி மாலை 6 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில், 27-ந்தேதி மாலை 6.30 மணிக்கு இரட்டை பிரபை வாகனத்தில், 28-ந்தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதிகளில் வலம் வருகிறார்.

    தெப்பத்திருவிழாவின் 7-ம் நாளான மார்ச் 1-ந்தேதி மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உள்வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    முக்கிய திருநாளான தெப்பத்திருவிழா 8-ம் நாளான 2-ந்தேதி நடைபெறுகிறது. அன்று மாலை 3 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு மேலவாசலில் உள்ள தெப்பக்குள ஆஸ்தான மண்டபத்திற்கு மாலை 5 மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7.15 மணியளவில் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 7.30 மணி முதல் இரவு 9 மணிவரை தெப்ப உற்சவம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.15 மணிக்கு மூலஸ்தானம் சேருகிறார்.

    9-ம் திருநாளான 3-ந்தேதி காலை 7 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி மதியம் 2 மணியளவில் தெப்பக்குளம் ஆஸ்தான மண்டபம் சேருகிறார். மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிவரை திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் மாலை 7 மணிக்கு மண்டபத்திலிருந்து ஒற்றை பிரபை வாகனத்தில் புறப்பட்டு பந்த காட்சியுடன் சித்திரை வீதிகளில் வலம் வந்து படிப்பு கண்டருளி இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அத்துடன் இந்த ஆண்டுக்கான தெப்பத்திருவிழா நிறைவுபெறுகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×