search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் மந்தம்
    X

    ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு முழுமையாக அமைக்கப்படாமல் உள்ளதை படத்தில் காணலாம்.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கும் பணிகள் மந்தம்

    • மழையில் தேர் நனைவதால் பக்தர்கள் வேதனையடைந்துள்ளனர்.
    • 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலில் ஆழித்தேரோட்டம் உலக புகழ் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.

    அலங்கரிக்கரிக்கப்பட்ட ஆழித்தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 300 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் 'ஹைட்ராலிக் பிரேக்' பொருத்தப்பட்டுள்ளது.

    ஆழித்தேரை இரும்பு தகட்டினால் ஆன மேற்கூரை கொண்டு மூடுவது வழக்கம். இதனால் பிரம்மாண்டான ஆழித்தேரின் அழகிய தோற்றம், மர சிற்பங்கள் என அனைத்தும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பார்க்க முடியாமல் இருந்து வந்தது.

    ஆழித்தேரை எல்லா நேரத்திலும் எல்லோரும் காணும் வகையில் கண்ணாடி கூண்டு அமைத்திட இந்து சமய அறநிலைத்துறை திட்டமிட்டது, அதன்படி கடந்த 2019-ம் ஆண்டு ஆழித்தேருக்கு ரூ.40 லட்சம் மதிப்பில் கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேரோட்ட விழாவையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி ஆழித்தேரின் கூரைகள் பிரிக்கப்பட்டு தேர் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கி, தேரோட்டமானது மார்ச் 15-ந் தேதி நடந்தது.

    இதனையடுத்து ஆடிப்பூர விழாவையொட்டி அம்பாள் தேரோட்டம் நடைபெறும். ஆழித்தேருக்கு பின்னால் நிறுத்தப்பட்டு உள்ள அம்பாள் தேர், ஆழித்தேரை கடந்து செல்ல வேண்டும். இதனால் ஆழித்தேருக்கு கண்ணாடி கூண்டு அமைக்கப்பட்டால் அம்பாள் தேர் வடம் பிடித்து செல்லும்போது இடையூறாக இருக்கும். மேலும் கண்ணாடி கூண்டு என்பதால் ஏதேனும் லேசாக உரசினால் கூட ஆழித்தேரின் கண்ணாடி கூண்டு சேதமடைந்து விடும்.

    இதனால் அம்பாள் தேரோட்டத்திற்கு வசதியாக ஆழித்தேருக்கு தற்காலிக இரும்பு தகடுகளை கொண்டு மூடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 31-ந் தேதி அம்பாள் தேரோட்டமும் நடந்தது.

    இதனையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி தற்காலிக கூரை பிரிக்கப்பட்டு மீண்டும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி தொடங்கியது. பணிகள் தொடங்கி சுமார் 2 மாதங்கள் ஆன நிலையில் இந்த பணிகள் மிகவும் மந்தமாக நடந்து வருகிறது.

    இதில் மேற்பகுதி கூரை மட்டும் போடப்பட்ட நிலையில் நான்கு புறங்களிலும் கண்ணாடி கூண்டு அமைக்கும் பணி நிறைவு பெறாமல் உள்ளது.

    திருவாரூரில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஆழித்தேருக்கு சரிவர கண்ணாடி கூண்டுகள் பொருத்தாததால் தேர் நனைந்து வருகிறது. இதனால் பக்தர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

    ஆழித்தேரை பாதுகாக்கும் நடவடிக்கையாக மந்த கதியில் நடைபெறும் கூண்டு அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். விரைந்து பணிகளை முடித்து மழையில் தேர் நனையாமல் பாதுகாக்க வேண்டும் என்று இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×