என் மலர்
லைஃப்ஸ்டைல்
- தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது.
- பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும்.
உடலில் ஏற்பட்ட ஒரு காயத்தை, ஒரு புண்ணை திறந்து விட்டு மருந்து போட்டுக் கொண்டிருப்பது சரியா அல்லது மருந்து தடவி கட்டு கட்டி மூடி வைத்திருப்பது சரியா?

காயம் ,சாதாரண புண், அடிபட்டு தையல் போட்ட இடத்தில் ரணம் இவை எல்லாமே நமது உடலின் ஏதாவதொரு இடத்திலுள்ள தோலில் தான் ஏற்பட்டிருக்கும். தோல் நமது மொத்த உடலையும் மூடியிருக்கும் ஒரு மிகப்பெரிய உறுப்பு ஆகும். தோல் மூன்று அடுக்காக நமக்கு இருக்கிறது. மேல்தோல், நடுத்தோல் மற்றும் அடித்தோல் ஆகும்.
மேலோட்டமான காயம் அதாவது வெறும் மேல்தோலில் மட்டும் தோல் கிழிந்து காயம் ஆகியிருக்கிறது, உதாரணத்திற்கு- சுடுதண்ணீர் உடம்பில் கொட்டி அதனால் ஏற்பட்ட காயம் என்றால் அதை திறந்து விடுவது தான் நல்லது. அதே நேரம் ஒரு ஆழமான காயம் என்றால் மருந்து வைத்து கட்டுகட்டி மூடி வைப்பதுதான் நல்லது.

சில புண்களிலிருந்து சீழ், ரத்தம், நீர் போன்றவை வடிவதுண்டு. இம்மாதிரி ரணங்களை மூடி வைப்பதுதான் சிறந்தது. சிறிய காயங்கள், கீறல்கள், சிராய்ப்புகள் போன்றவற்றுக்கு தினமும் மருந்து தடவி மூடாமல் விட்டுவிட்டால் சீக்கிரம் ஆறிவிடும்.
ஆனால் அந்த காயம் அழுக்கு, தூசி படாமல், துணி உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். விபத்தினால் ஏற்பட்ட மேலோட்டமான காயங்கள், செல்லப்பிராணிகள், காட்டு விலங்குகள் கடித்ததினால் ஏற்பட்ட காயங்களை திறந்து வைத்து சிகிச்சை அளித்தால் சீக்கிரம் ஆறிவிடும்.

கடுமையான தீப்புண் முதலியவைகளை கிருமிகள் சுத்தமாக நீக்கப்பட்ட பேண்டேஜ் கொண்டு மூடிவைப்பது நல்லது. ஆழமான காயங்களை கிருமிநாசினி சேர்க்கப்பட்ட வெதுவெதுப்பான நீரில் நன்கு பலமுறை கழுவி பின் பாக்டீரியா எதிர்ப்பு ஆயின்ட்மென்டை தடவி சுத்தமான பேண்டேஜ் வைத்து கட்டு கட்டி விடுவதுதான் மிகவும் நல்லது.
மருந்து தடவி பேண்டேஜ் போடுவதால் புதுத்தோல், புது செல்கள் உயிரோடு இருக்க உதவும். தூசி அழுக்கு படாது. கிருமிகள் உள்ளே நுழையாது.
காயம் மேல்தோல், நடுத்தோல், அடித்தோல் தாண்டி மிக ஆழமாக தசைகளுக்கு போய்விட்டிருந்தால் கட்டு கட்டி மூடி வைப்பதுதான் சிறந்தது.
- புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
- எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
ருமட்டாய்டு ஆர்தரைடிஸ் நோய் என்பது சித்த மருத்துவத்தில் 'வளி அழல் கீஸ் வாயு' என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு தன்னுடல் எதிர்ப்பு நோய்.
நம் உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு, மூட்டுகள் மற்றும் இணைப்புத் திசுக்களை சேதப்படுத்துவதால் வருவதாகும். கை, கால், மணிக்கட்டு, கணுக்கால், விரல்கள் ஆகிய இடங்களில் நாள்பட்ட அழற்சியுடன் வீக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் அவ்விடங்களில் வெப்பம், சிவப்பு நிறம், எரிச்சல் அல்லது வலியையும் உண்டாக்கும். இந்நோய் எளிதில் மருத்துவத்திற்கு அடங்காமலும், மருத்துவத்திற்கு அடங்கினும் மீண்டும் திரும்பி வருவதுமாயிருந்து, பாதிக்கப்பட்ட கீல்கள் கரடு கட்டினது போல நீட்டவும், நன்றாய் மடக்கவும், முடியாத வண்ணம் நிலைத்து விடச் செய்வதுண்டு.

இந்நோயில் தூக்கமின்மை, சிறு சுரம், காலையில் எழுந்தவுடன் கை விரல்கள், மூட்டுகளில் விறைப்புத்தன்மை, விரல்களை மடக்க இயலாத நிலை, நடப்பதற்கு சிரமம், உடல் பலவீனம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.

இந்நோயை ஆர்.ஏ மற்றும் 'சைக்ளிக் சிட்ருலினேடட் பெப்டைடு' (சி.சி.பி), 'நியூக்ளியர்' (ஏ.என்.ஏ) போன்ற ரத்த பரிசோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்.
இந்த நோய் பாதிப்பு உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் குளிப்பது, புளிப்பான உணவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். இவர்களது உடலில் வாதமும், பித்தமும் அதிகரித்திருக்கும். எளிதில் செரிமானமாகும் உணவுகளை உண்ண வேண்டும்.
- ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.
- உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும்.
மெட்டபாலிக் சிண்ட்ரோம்' என்பது தமிழில் 'வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்று அழைக்கப்படு கிறது. இதற்கு சிண்ட்ரோம் எக்ஸ், இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் சிண்ட்ரோம், டிஸ்மெட்டபாலிக் சிண்ட்ரோம் போன்ற வேறு பெயர்களும் உண்டு.
வளர்சிதை மாற்றம் நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டசத்துக்களை உறிஞ்சி, அதனை ஆற்றலாக மாற்றி உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்கிறது.

இந்தியாவில் கிட்டத்தட்ட 40 சதவிகிதம் பேர் வளர்சிதை மாற்ற நோய் பிரச்சினையால் (குறிப்பாக இளம் வயதினர்) பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் கீழ்குறிப்பிட்டுள்ள ஐந்து நிலைகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கிறது.
உடல் பருமன் (குறிப்பாக தொப்பையை சுற்றிகொழுப்பு படிதல்), உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக டிரைகிளசரைடு அளவு, இன்சுலின் எதிர்மறை நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) ரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு, ரத்தத்தில் குறைவான அளவு நல்ல கொலஸ்ட்ரால்(எச்.டி.எல்).
வளர்சிதை மாற்ற நோய்க்குறி ரத்த நாளங்களில் கொலஸ்ட்ரால் பிளேக் படிதலை உண்டாக்கி பக்கவாதம், நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்படக்கூடிய அபாயத்தை அதிகரிப்பதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வளர்சிதை மாற்ற நோய்க்குறி மீள்மாற்றம் சாத்தியம் உள்ள ஒரு நிலையாகும். இந்நோய்க்குறி வராமல் தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள், முழுதானியங்கள், காய்கறிகள், கீரைகள், புரதங்கள் நிறைந்த கோழி இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை அதிகம் உண வில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எண்ணெய்யில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை குளிர் பானங்கள், பேஸ்ட்ரி, சாக்லெட் போன்ற அதிக சர்க்கரை நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உணவில் சேர்க்கப்படும் உப்பின் அளவை குறைக்கவும். தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும். குறிப்பாக இடுப்பின் சுற்றளவை ஆண்கள் 94 சென்டிமீட்டருக்கு மிகாமலும், பெண்கள் 80 சென்டி மீட்டருக்கு மிகாமலும் பார்த்து கொள்ள வேண்டும்.
யோகா, சுவாசப்பயிற்சி, தியானம் போன்றவையும் நல்ல பலனளிக்கும். ரத்தத்தில் குளுக்கோஸ், டிரைகிளசரைடு மற்றும் எச்.டி.எல் அளவையும் ரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
புகைப்பழக்கம் மற்றும் மதுப்பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைத்து கொள்ள வேண்டும். தினமும் குறைந்த பட்சம் 7 மணி நேரமாவது தூங்க வேண்டும்.
- ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும்.
- 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.
ஒவ்வொரு மனிதனும் 100 ஆண்டுகள் முழுமையாக வாழ விரும்புகிறான். ஆனால் பலர் பல்வேறு நோய்களால் 70 வயதிற்கு முன்பே இறக்கின்றனர். சுகாதார அமைப்பான லான்செட் கமிஷன் தனது உலக சுகாதாரம்-2050 அறிக்கையில், தற்போதைய அகால மரணங்களின் எண்ணிக்கையை 2050-ம் ஆண்டுக்குள் பாதியாகக் குறைக்க முடியும் என்று வெளிப்படுத்தியுள்ளது.
இது சாத்தியமாக, அந்தந்த நாடுகள் சுகாதாரப் பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
அனைவரையும் சுகாதார விழிப்புணர்வுடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் பல முறையான மாற்றங்களைச் செய்வதன் மூலமும் அகால மரணங்களைக் கணிசமாகக் குறைக்க அரசாங்கங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரிவாகக் கோடிட்டுக் காட்டியுள்ளது.

2001 முதல் 2018 வரை இந்தியாவில் சுமார் 37 மில்லியன் மக்கள் அகால மரணமடைந்துள்ளனர். இந்த இறப்புகளுக்கு 4 தொற்றா நோய்கள் முக்கிய காரணமாகும்.
அதிக எண்ணிக்கை யிலான இறப்புகள் இதய நோய் (58.3 சதவீதம்), புற்றுநோய் (18.6 சதவீதம்), நாள்பட்ட சுவாச நோய்கள் (15.5 சதவீதம்) மற்றும் நீரிழிவு நோய் (5.6 சதவீதம்) ஆகியவற்றால் ஏற்பட்டுள்ளன.
காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை ஆகியவை இதற்குக் காரணங்களாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இவற்றுடன் சாலை விபத்துகளும் நாட்டில் அகால மரணங்களுக்கு வழிவகுக்கும். தற்கொலைகளும் அதிக அளவில் உள்ளன.
எச்.ஐ.வி., காசநோய் நீரிழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் சாலை விபத்துகள் கடுமையான சுவாச நோய்கள் மற்றும் குழந்தை இறப்பு போன்ற 15 காரணிகள் சராசரி ஆயுட்காலத்தைக் குறைக்கின்றன.
8 வகையான தொற்றுகள் தாய்வழி சிக்கல்கள் மற்றும் 7 தொற்றாத நோய்கள் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இவற்றை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக நிதி செலவிடப்பட வேண்டும்.
புகைபிடித்தல் மற்றும் மது பழக்கங்களை விட்டுவிடுங்கள்.
நீங்கள் ஒவ்வொரு நாளும் 15,000 அடிகள் நடக்க வேண்டும். உங்கள் உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும் மன அழுத்தத்தைக் குறைக்கவும். குறைந்தது 5 முதல் 7 மணி நேரம் நல்ல தூக்கம் அவசியம்.

கார்போஹைட்ரே ட்டுகள் அதிகமாகவும் புரதம் அதிகமாகவும் உள்ள உணவை உண்ணுங்கள் பருவகால பழங்கள். கீரைகள் மற்றும் காய்கறிகள் உணவில் அதிகமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை தொடர்ந்து பரிசோதிக்க வேண்டும்
பெண்கள் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான பரிசோதனையைப் பெற வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.
- இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கோடை காலத்துக்கு முன்பே வெயில் சுட்டெரிக்க தொடங்கி இருக்கும் நிலையில் சருமத்தை பாதுகாப்பதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள். சன்ஸ்கிரீன், பேஷியல், மாய்ச்சுரைசரிங் கிரீம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துகிறார்கள். இதில் சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் விஷயத்தில் நிறைய கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அவை பற்றியும் அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

கட்டுக்கதை:
மேகமூட்டமாக இருக்கும் நாட்களில் சன்ஸ்கிரீன் பயன்படுத்த தேவையில்லை.
உண்மை:
சூரியன் உமிழும் புற ஊதாக்கதிர்கள் மேகங்கள் வழியாகவும் ஊருடுவும் அபாரசக்தி படைத்தவை. அதனால் சூரியனே தெரியாத அளவுக்கு வெயிலே இல்லாமல் இருள் சூழ்ந்த காலநிலை நிலவினாலும் கூட சருமத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தாவிட்டால் பாதிப்புதான் ஏற்படும்.
முன்கூட்டியே வயதாகும் தோற்றம் எட்டிப்பார்ப்பதற்கும் வழிவகுத்துவிடும். அதனால் மேகமூட்டமான நாட்களிலும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள மறக்காதீர்கள்.
கட்டுக்கதை:
கருமையான சரும நிறம் கொண்டவர்கள் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க தேவையில்லை.
உண்மை:
மெலனின் என்னும் நிறமி கருமையான சருமத்திற்கு இயற்கையாகவே பாதுகாப்பு அளிக்கும் என்றாலும் சூரியனிடம் இருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது. எந்த நிற சருமம் கொண்டவர்களாக இருந்தாலும் சரும பராமரிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அதிலும் கருமை நிற சருமம் கொண்டவர்கள் போதிய சரும பராமரிப்பை மேற்கொள்ளாவிட்டால் சரும எரிச்சல், கரும்புள்ளிகள் தோன்றுதல், சரும புற்றுநோய் போன்ற பாதிப்புகளை எதிர்கொள்ளக்கூடும். எனவே ஒவ்வொருவரும் சரும நிறத்தை பொருட்படுத்தாமல் சருமத்தை பாதுகாக்க சன்ஸ்கிரீனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

கட்டுக்கதை:
அதிக எஸ்.பி.எப் கொண்ட சன்ஸ்கிரீன் பயன்படுத்தினால் நீண்ட நேரம் வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ளலாம்.
உண்மை:
எஸ்.பி.எப் 50 கொண்ட சன்ஸ்கிரீன் 'சூப்பர் பவர்' போல் செயல்பட்டு சருமத்திற்கு பாதுகாப்பு அளிக்கும்தான். ஆனால் நாள் முழுவதும் வெயிலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. அதிக வியர்வை வெளிப்பட்டாலோ, நீச்சல் பயிற்சி மேற்கொண்டாலோ மீண்டும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்வது அவசியமானது.
குறிப்பாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலகட்டங்களில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சன்ஸ்கிரீன் உபயோகிப்பது நல்லது.
கட்டுக்கதை:
முகத்தில் மட்டும் சன்ஸ்கிரீன் உபயோகித்தால் போதும். மற்ற சரும பகுதிகளுக்கு சன்ஸ்கிரீன் தேவையில்லை.
உண்மை:
சன்ஸ்கிரீன் என்பது முகத்திற்கு மட்டுமே உபயோகிக்கக்கூடிய கிரீம் அல்ல. கழுத்து, காது, கை, கால்கள் என எல்லா பகுதிகளிலும் சன்ஸ்கிரீனை பூசிக்கொள்ள வேண்டும். ஏனெனில் தீங்கு விளைவிக்கும் புற ஊதாக்கதிர்கள் சருமத்தின் எந்த பகுதிக்கும் பாகுபாடு காண்பிக்காது. ஆடை அணிந்த பிறகு மறைக்காத உடல் பாகங்கள் அனைத்திற்கும் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும்.
கட்டுக்கதை:
எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீன் உடன் ஒப்பனை அணிவது போதுமானது.
உண்மை:
மேக்கப்புடன் எஸ்.பி.எப் அதிகம் கொண்ட சன்ஸ்கிரீனை பூசினால் மட்டும் போதாது. பெரும்பாலானோர் போதுமான அளவுக்கு ஒப்பனை மேற்கொள்வதில்லை. மேக்கப் செய்வதற்கு முன்பாக முதலில் பிராட் ஸ்பெக்ட்ரம் சன்ஸ்கிரீன் பூசிக்கொள்ள வேண்டும். அதன்பின்பு மேக்கப் செய்து கொள்வது நல்லது.

கட்டுக்கதை:
சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் மட்டுமே போதுமானது.
உண்மை:
சன்ஸ்கிரீன் சிறந்ததுதான். ஆனால் அதுமட்டுமே சூரியனிடம் இருந்து பாதுகாப்பு தருவதற்கு ஏற்றதல்ல. சிறந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்திய பிறகு சன்கிளாஸ் அணிந்து கொள்ள வேண்டும்.
அதுபோல் அகலமான தொப்பி அணிந்து கொள்வதும், பருத்தி ஆடை உடுத்துவதும் அவசியமானது. சூரியனின் ஆதிக்கம் உச்சத்தில் இருக்கும் நேரமான காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெளியே செல்வதை தவிர்ப்பது நல்லது.
கோடை கால மாதங்களில் மட்டுமல்லாமல் ஆண்டு முழுவதும் சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
- வைட்டமின் ‘ஏ’ குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும்.
- சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும்.
சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழல்கள், சிறுநீர்ப்பை இவைகளில் தாதுக்கள், உப்புக்கள் போன்றவை படிந்து கடினமாக உருவாவதைத் தான் பொதுவாக சிறுநீரகக் கற்கள் என்கின்றோம்.
சிறுநீரக கற்கள் கீழ்க்கண்ட வகைப்படும், அவை: 1. கால்சியம் ஆக்சலேட் வகைக் கற்கள், 2. யூரிக் அமிலக் கற்கள், 3. ஸ்டுரைட் கற்கள், 4. கால்சியம் பாஸ்பேட் வகைக்கற்கள், 5. சிஸ்டீன் கற்கள், 6. ஷேந்தீன் கற்கள்.

நோயின் அறிகுறிகள்
கடுமையான முதுகு வலி மற்றும் விலாப்பக்கம் வலி பரவுதல், அடி வயிற்றில் இருந்து வலி பரவி, அடித்தொடை பகுதி வரை காணப்படல், சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல், வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு, வலியானது அலை அலையாக முதுகு, விலா, அடிவயிறு போன்ற இடங்களில் பரவுதல் மற்றும் சிறுநீர் அடர் நிறத்தில் வெளியேறுதல்.

தடுப்புமுறைகள்
விட்டமின் 'ஏ' குறைபாடு சிறுநீரக கற்களை உருவாக்கும். ஆகவே, கேரட், பப்பாளி, முருங்கைக்காய் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பொட்டாசியம் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதாலும், சிறுநீரக கற்களை கரைப்பதாலும் பொட்டாசியம் சத்து நிறைந்த இளநீர், பீன்ஸ், கொய்யா, வாழைப்பழம், தர்பூசணி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சிட்ரிக் அமிலம் சிறுநீரக கல்லை கரைப்பதுடன் கல் உருவாவதையும் தடுக்கும். ஆகவே, எலுமிச்சைச்சாறு, சாத்துக்குடி, ஆரஞ்சு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும். கால்சியம், வைட்டமின் 'டி' சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.

இறைச்சி வகைகள், எலும்பு சூப், முட்டைக்கோஸ், காலிபிளவர், தக்காளி விதைகள், பீட்ரூட், உப்பில் ஊறிய பொருட்கள் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்ப்பதை கட்டுப்படுத்த வேண்டும். நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை தோல் நீக்கி சாறாக குடிக்கலாம். இவைகளின் தோலில் அதிகளவு ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட்டுகள் உள்ளதால், தோலை நீக்கி உணவில் சேர்க்க வேண்டும்.
வெண்பூசணி, கோவைக்காய், முள்ளங்கிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, பீன்ஸ் இவைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பார்லி தண்ணீர் காலை, இரவு வேளைகளில் குடிப்பது நல்லது. தினமும் மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சிறுநீரை அடக்காமல் அவ்வப்போது கழிக்க வேண்டும். உடல் வெப்பத்தை நீக்க, வாரம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்க வேண்டும்.
- ஆட்டிசம் என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும்.
- அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.
உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
உலக ஆட்டிசம் குறைபாடு விழிப்புணர்வு தினம் இன்று (ஏப்ரல் 2) கடைபிடிக்கப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு முதல், ஐ.நா. சபை ஏப்ரல் 2 -ந் தேதியை உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினமாக அறிவித்தபோது இருந்ததை விட தற்போது ஆட்டிசம் தொடர்பாக மக்கள் மத்தியில் அதிக புரிதல் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரியாவை சேர்த்த லியோ கன்னர் என்பவர்தான் முதன் முதலாக ஆட்டிசம் என்பதை தெரியப்படுத்தியவர். இவர் 1943-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையில், ஆட்டிசம் பாதிப்பு கொண்ட குழந்தைகளின் பிரச்சினைகளை பற்றி கூறியிருந்தார்.
ஆட்டிசம் (Autism spectrum disorder) என்பது மூளை வளர்ச்சி குறைபாட்டால் குழந்தைகளுக்கு உண்டாகும் புற உலகச் சிந்தனை குறைபாடு ஆகும். மதியிறுக்கம் அல்லது புற உலகச் சிந்தனைக் குறைபாடு என்றும் கூறலாம்.
இது ஒரு மூளை நரம்பியல் தொடர்பான வளர்ச்சிக் குறைபாடாக இருந்தாலும், மனஅளவில் பல சிக்கல்களால் இக்குழந்தைகள் இடர்படுகிறார்கள். உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது.
இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டீன் உள்ளிட்ட பிரபல விஞ்ஞானிகள் முதல் கலைஞர்கள் உள்ளிட்ட உலகப் பிரபலங்கள் பலருக்கும் ஆட்டிசம் குறைபாடு இருந்துள்ளது.

ஆட்டிசம் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் என்ன?
குழந்தை பிறந்து மூன்று வயது நிறைவடைவதற்கு முன் இக்குறைபாடு ஏற்படும். இக்குறைபாடுடையக் குழந்தைகளின் உடலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது. அவர்களின் நடத்தையிலேயே குறைபாடுகள் காணப்படும்.
இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மற்றவர்களுடன் பேசும் மற்றும் பழகும் திறனில் வேறுபாடு இருக்கும். ஒரே மாதிரியான செயலைத் திரும்பத் திரும்பச் செய்வார்கள்.
தனது உணவுர்களை அழுகை, முனுமுனுத்தல், கூக்குரல்கள் மூலம் வெளிப்படுத்துதல் வாய்மொழியற்ற பிற உணர்வுகள் மூலம் வெளிப்படுத்துதல், இயந்திரக் குரலில் பேசுதல், சமூக தொடர்புகளில் பிரச்சினை மற்றும் மொழித் தொடர்பில் பிரச்சினை, கண்களைப் பார்த்து பேச முடியாதது போன்றவை ஆட்டிசத்துக்கான அறிகுறிகள்.
இதைதவிர்த்து ஆட்டிசத்தைக் கண்டறிய இதற்கென்று தனிப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் ஏதும் இல்லை. பெற்றோர், ஆசிரியர், உறவினர், குழந்தைகள் நலமருத்துவர், மூளை நரம்பியல் நிபுணர், மனநல மருத்துவர் போன்றவர்களே இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல முடியும். நரம்பியல் தொடர்பான ஆட்டிசக் குறைபாடுகளை சி.டி ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் என்ன குறைபாட்டினால் ஆட்டிசம் ஏற்பட்டது என்பதைக் கண்டறியலாம்.
இது ஒரு நோய் கிடையாது. குறைபாடு மட்டுமே. சாதாரண குழந்தைகளுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்பதை, கூடுதலாக இரண்டு மூன்று முறை சொல்லிக்கொடுக்கும்போது, ஆட்டிசம் பாதித்த குழந்தைகளும் அதைக் கற்றுக்கொள்வார்கள்.

ஆட்டிசம் குறைபாடு ஏற்பட காரணங்கள் என்ன?
ஆட்டிசம் வருவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் கிடையாது. மரபு ரீதியாக வரலாம். மதுப்பழக்கம், கருவில் குழந்தையை சுமக்கும்போது ஆரோக்கியமான உணவுகள் சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றாலும் ஆட்டிசம் குறைபாடு ஏற்படலாம்.
கருவுற்று இருக்கும் காலத்தில் பெண்களிடம் மன அழுத்தம் அதிகமாக இருந்தால், அது ஆட்டிச குறைபாடு கொண்ட குழந்தைகள் உருவாவதற்கு வித்திடும் என்று சொல்லப்படுகிறது.
அதேபோல் தைராய்டு பிரச்சினை உள்ள பெண்கள், வலிப்பு நோய்க்கு மாத்திரை எடுத்து கொள்ளும் பெண்கள், போலிக் அமிலம் குறைவாக இருக்கும் பெண்களுக்கும், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்க வாய்ப்பிருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆட்டிசம் குறைபாட்டுக்கான தீர்வு என்ன?
ஆட்டிசம் ஒரு நோய் அல்ல என்பதால் அதற்கான முழுமையான குணப்படுத்தும் முறை கிடையாது. மாறாக பயிற்சிகள் மற்றும் அதிக கவனம் செலுத்தி வளர்ப்பதே ஆட்டிசத்தின் பின்விளைவுகளை குறைப்பதற்கான வழிமுறைகள்
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மன இறுக்கத்தை புரிந்து கொண்டு அவர்களை பராமரிப்பு செய்வது நமது கடமை. சமூகத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ள குழந்தைகளின் பெற்றோர் சமூக அழுத்தங்களை பொருட்படுத்தாமல் தங்கள் குழந்தைகள் மேல் கவனம் செலுத்துதல் வேண்டும்.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் குறைபாட்டின் விரைவுத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே, அவர்களுக்கு உள்ள குறைபாடு என்ன? என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு சிகிச்சை மற்றும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.
அவர்களின் அதிகப்படியான துறுதுறுப்புத் தன்மையைக் குறைப்பதற்கான மாத்திரைகள் உள்ளன. அதேபோல் அவர்களுக்கென்று சில பயிற்சி முறைகளும் உள்ளன.
பயிற்சி முறைகள்:
ஆக்குபேஷனல் தெரபி: பல் தேய்த்தல், குளித்தல், சாப்பிடுதல், தூக்கம் போன்ற தினசரிப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தப் பயிற்சிகள் தர வேண்டும். இவைகளைச் சிறு வயதிலேயே குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் மற்றவர்களைப் போல் தாமாக இயங்க முடியும்.
பேச்சுப் பயிற்சி: மொழி மற்றும் பேச்சுப் பயிற்சிகளைச் சிறுவயதிலேயே தொடங்கிவிட வேண்டும். பெற்றோர்கள் குழந்தைக்குப் புரியும் விதமாக நிறையவே பேச வேண்டும்.
ஆட்டிசத்தில் பேச்சுப் பயிற்சியாளின் பங்கு: பயிற்சியின் மூலம் தொடர்புத் திறனை மேம்படுத்துதல், சரளமாக தடையின்றி பேச பயிற்சி அளித்தல், ஒரு வார்த்தை பேசுவதற்கு நாக்கு, மேல்வாய், தாடை மற்றும் உதடுக்கான தொடர்புகளை புரிய வைத்தல் (Aritculaction Skills), உடல் மொழியையும் முக பாவனையும் மேம்படுத்துதல், செய்யும் வேலைகளை குவிந்த கவனத்துடன் செய்யவைப்பது, சமூக தொடர்புகளை மேம்படுத்துவது ஆகியவை அடங்கும்.
உளவியல் சார்ந்த பயிற்சிகள்: குழந்தைகளுக்கு உடலளவில் மட்டுமல்லாமல், மனத்தளவிலும் நெகிழ்வுத்தன்மை, மற்றவர்களோடு பழகும்முறை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
கல்விக்கான பயிற்சிகள்: ஐ.ஈ.பி முறை ஆட்டிசக் குழந்தைகளுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். அதாவது, கல்வித் திட்டத்தை, ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் திறன், அதை வெளிப்படுத்தும் திறன் உட்பட, பலவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொடுப்பதே ஐ.ஈ.பி ஆகும். இதற்கென்று சிறப்புப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் சேர்த்துக் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும்.

பெற்றோரின் பங்கு
ஆட்டிச பாதிப்பு கொண்ட ஒவ்வொரு குழந்தையும் வெவ்வேறுவிதமான சவால்களைச் சந்திக்கிறது என்பதால், பெற்றோரும் நிபுணர்களும் சேர்ந்து விவாதித்து, அந்தக் குழந்தைக்குச் சிறந்த, பலன்தரக்கூடிய சிகிச்சை எது என்று தீர்மானிக்கிறார்கள், அதனைத் தொடர்ந்து செயல்படுத்துகிறார்கள்.
இங்கே கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு விஷயம், ஒரு குழந்தைக்கு நல்ல பலனைத் தரும் ஒரு சிகிச்சை இன்னொரு குழந்தைக்குப் பலன் தராமல் இருக்கலாம், இதற்குக் காரணம் ஆட்டிசம் வெவ்வேறு குழந்தைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது.
பள்ளியோ, பயிற்சி வகுப்புகளோ குழந்தைகளுக்குத் தேவையான அனைத்தையும் முழுமையாகக் கற்றுக் கொடுத்துவிட முடியாது. பெற்றோரின் பங்கே முதன்மையானது என்பதை, ஆட்டிசக் குழந்தைகளின் பெற்றோர்கள் உணரவேண்டும்.
என்னதான் ஆட்டிசத்திற்கு என்று மாத்திரைகள் பல இருந்தாலும் அன்பும், அரவணைப்புமே இதற்கான மருந்துகள். இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போதுதான், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள்.
எனவே, இவர்களோடு நாம் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்; பூங்கா, கோயில், கடற்கரை, பொருட்காட்சி போன்ற வெளி இடங்களுக்கு அடிக்கடி அழைத்துச் செல்ல வேண்டும். நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல், யோகா, நடனம் போன்ற பயிற்சிகளை ஆட்டிசக் குழந்தைகளுக்கு அளிக்கும்போது அவர்களின் உடல் திறனை அதிகப்படுத்துவதுடன், தத்தம் வேலைகளைத் தாமே செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும் வளர்கிறது.
- எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
- நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
அதிகாலையில் பசித்தால், அவசரத்துக்கு பிஸ்கெட் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அதுவே பழக்கமாகிவிடக் கூடாது. சிலபேர் காலையில் காபியுடன் ஒன்று அல்லது இரண்டு பிஸ்கெட் சாப்பிடுவார்கள். பரவாயில்லை. ஆனால் சிலபேர் ஒரு பாக்கெட் பிஸ்கெட்டையே காலி பண்ணிவிடுவார்கள். அது மிகப்பெரிய தவறு.

பிஸ்கெட்டில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துப் பொருட்கள் பெரும்பாலும் இல்லை என்றே சொல்லலாம். அநேகமாக எல்லா வகை பிஸ்கெட்டுகளிலும் சர்க்கரை அளவு அதிகமாகத் தான் இருக்கும்.
உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கெட்ட கொழுப்பு அதிகமாக இருக்கும். தினமும் தொடர்ந்து பிஸ்கெட் சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலை உண்டுபண்ணிவிடும். நேரம் கெட்ட நேரத்தில் பசியை தூண்டிவிடும்.
பிஸ்கெட்டில் அதிக கலோரி இருப்பதால் தினமும் சாப்பிடுபவர்களுக்கு உடல் எடையை கூட்டிவிடும். பிஸ்கெட்டில் 'ட்ரான்ஸ்ஃபேட்' என்று சொல்லக்கூடிய மாறுபட்ட கொழுப்பு இருக்கும். இந்த மாறுபட்ட கொழுப்பு தீய கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகமாக்கியும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்தும்விடும்.

அதிக கலோரி, அதிக மாவுச்சத்து, அதிக கொழுப்பு, அதிக அளவில் சோடியம் உப்பு, அதிக சர்க்கரை ஆகியவை இருப்பதால் அன்றாடம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன், அஜீரணம், மந்தம், மலச்சிக்கல், சில சமயங்களில் இதயக் கோளாறைக் கூட உண்டுபண்ணிவிடும்.
வைட்டமின் சத்து இல்லாத, சத்துப் பொருட்கள் இல்லாத, நார்ச்சத்து இல்லாத சில பிஸ்கெட்டுகளை தவிர்ப்பது நல்லது. ஆனால் பார்த்தவுடனே சாப்பிடத் தூண்டும் சில அழகழகான, கவர்ச்சியான, ருசியான பிஸ்கெட்டுகளை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?
அனைத்து உலக மக்களும் விரும்பி சாப்பிடும் ஒரே உணவாகிய பிஸ்கெட்டை எப்பொழுதாவது சாப்பிடுங்கள். வழக்கமாக்கிக் கொள்ள வேண்டாம். இரவு நேரங்களில் பசிக்கும் போதும் சரி, ரத்த சர்க்கரை அளவு குறைந்துவிட்ட போதும் சரி பயணங்களின் போதும் சரி சாப்பிட உணவே கிடைக்காத இடத்தில் சிக்கி அவஸ்தைப்படும்போதும் சரி பிஸ்கெட் மாதிரி ஒரு சிறப்பான உணவு வேறெதுவும் இல்லை.
- பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.
- தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும்.
பித்தப்பை என்பது கல்லீரலுக்கு கீழே பித்த நீர் சேமிக்கப்படும் ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். பித்த நீரில் உள்ள கொலஸ்ட்ரால், பிலுருபின் மற்றும் பித்த உப்புகள் கெட்டியாகும் போது பித்தப்பையில் கற்கள் உருவாகின்றன.

பொதுவாக கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளும் போது பித்த நீர் பித்த நாளம் வழியாக குடலுக்குள் சென்று செரிமானத்திற்கு உதவி புரிகிறது. இந்தியாவில் பித்தப்பை கற்கள் நோயினால் 4 முதல் 9 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்களை விட பெண்களுக்கு இது அதிகம் ஏற்படுவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பித்தப்பை கற்களில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் கொழுப்பு கற்கள் ஆகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு பித்தப்பை கற்கள் ஏற்பட கீழ்க்கண்டவை முக்கிய காரணிகளாகும்:
உடல் பருமன், கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரை அளவு, ரத்தத்தில் அதிக அளவு டிரைகிளிசரைட் மற்றும் கொலஸ்ட்ரால், கூடுதலாக உள்ள குடல் மற்றும் கல்லீரல் நோய்கள், தன்னியக்க நரம்பியல் குறைபாடு, குடல் அசைவின்மை, உட்கொள்ளும் சில மருந்துகளின் பக்க விளைவுகள் மற்றும் மரபணு காரணங்கள்.
பித்தப்பை கற்கள் பெரும்பாலும் தற்செயலாகக் கண்டறியப்படுகிறது. இவை அறிகுறிகளை ஏற்படுத்தினால் மட்டுமே அதற்கான சிகிச்சை அவசியம்.
வலியற்ற, பக்கவிளைவுகள் இல்லாத பித்தப்பை கற்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய தேவையில்லை. பித்தப்பை கற்களை கரைக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மாத்திரைகளை பயன்படுத்தலாம். இம்முயற்சி பலன் அளிக்காவிடில் பித்தப்பையை அகற்றஅறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

பித்தப்பை கற்களை தடுக்க கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்:
தினசரி உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும், பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதங்கள், நார்ச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் முழு தானியங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு முறை பழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
கொழுப்பு மற்றும் எண்ணெய்யில் வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அடிக்கடி விரதம் இருத்தல் கூடாது. ஏனெனில் விரதம் இருப்பது பித்தப்பை இயக்கத்தைக் குறைப்பதால், பித்த நீரில் கொழுப்பு அதிகமாக செரிவூட்டப்பட்டு கற்கள் உருவாக வழிவகுக்கிறது. புகை பழக்கம் மற்றும் மது பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். பதப்படுத்தபட்ட உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.
- நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது.
- ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும்.
பெற்றோர் பின்பற்றும் பழக்கவழக்கங்கள், குணாதிசயங்கள், அன்றாட செயல்பாடுகள், பிறரிடம் பழகும் விதம், நட்பு-உறவுகளுடன் பேணும் நெருக்கம் உள்ளிட்ட வாழ்வியல் விஷயங்களை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அதன்படியே செயல்படவும் தங்களை தயார்படுத்திக் கொள்கிறார்கள்.
பெற்றோர்கள் உச்சரிக்கும் வார்த்தைகள், பேசும் தொனி போன்றவற்றையும் கூர்ந்து கவனிக்கிறார்கள். அத்தகைய வார்த்தைகளை கேட்பதோடு மட்டுமல்லாமல் பெற்றோரின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்து, ரகசியமாக பின்பற்றவும் செய்கிறார்கள். அப்படி கவனிக்கும் விஷயங்கள் பற்றியும், பெற்றோரின் அணுகுமுறை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்ப்போம்.
மன அழுத்தத்தை கையாளும் விதம்
மன அழுத்தத்தில் இருக்கும்போது பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கிறார்கள். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் எப்படி பேசுகிறார்கள்? எப்படி நடந்து கொள்கிறார்கள்? என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள். அந்த கடினமாக சூழலில் கத்துவது, பீதி அடைவது, மற்றவர்களை பற்றி புகார் செய்வது, மனக்குழப்பத்தில் இருப்பது என பெற்றோரின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் கண்காணிக்கிறார்கள்.
அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகும் சமயத்தில் பெற்றோர் பின்பற்றிய அணுகுமுறையை செயல்படுத்தி பார்க்கவும் முன் வருவார்கள். அதனால் பெற்றோர் மன அழுத்தத்தில் இருக்கும் சமயத்தில் குழந்தைகளிடத்தில் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும். மன இறுக்கத்துடன் இருப்பது, சத்தமாக பேசுவது உள்ளிட்ட செயல்களை செய்யக்கூடாது. மன அமைதியை தக்கவைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.
உங்கள் உணர்ச்சிகளை குழந்தைகளிடத்தில் வெளிப்படுத்தி, ''நான் இப்போது மன அழுத்தத்தில் இருக்கிறேன். ரொம்பவே விரக்தி அடைந்துவிட்டேன். அதனால் மூச்சை ஆழமாக உள் இழுத்து வெளியிட்டு மனதை அமைதிப்படுத்த முயற்சிக்கப்போகிறேன்'' என்று கூறி அதனை குழந்தைகள் முன்னிலையில் செயல்படுத்தியும் காண்பிக்க வேண்டும். குழந்தைகள் அத்தகைய சூழலுக்கு ஆளாகும்போது மூச்சு பயிற்சியை பின்பற்ற வழிகாட்ட வேண்டும்.
மற்றவர்களிடம் நடந்து கொள்ளும் சுபாவம்
நீங்கள் எத்தகைய குணம் படைத்தவர் என்பது பிறரிடம் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதை பொறுத்துத்தான் தீர்மானிக்கப்படுகிறது. உங்கள் குணத்தை நீங்கள் உச்சரிக்கும் வார்த்தையும் பிரதிபலித்துவிடும். வீட்டு பணியாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், உங்களை விட வயது குறைந்தவர்கள் என உங்கள் கட்டளைப்படி நடப்பவர்களிடம் நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்பதையும் குழந்தைகள் உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்களிடம் நீங்கள் கடுமையாக நடந்து கொண்டாலோ, கடுஞ்சொற்களை உச்சரித்து பேசினாலோ அதை பார்த்து குழந்தைகளும் தாமும் அப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

வேலை, சமூக அந்தஸ்து, பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது அவசியம் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய சமூக கடமை பெற்றோருக்கு இருக்கிறது. குழந்தைகள் அதன்படி நடக்க பெற்றோர் முன்மாதிரியாக திகழ வேண்டும்.
மற்றவர்களிடம் அன்பாக பழக வேண்டும். பிறரை பார்த்ததும் புன்னகைப்பது, கண்களை பார்த்து பேசுவது, பணிவாக நடந்து கொள்வது போன்ற செயல்களை பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். அதனை பின்பற்றுகிறார்களா? என்பதை கண்காணிக்கவும் வேண்டும்.
உணவு - உடல் தோற்றம்
நேர்த்தியாக உடை அணிவதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதை விட உடல் தோற்றத்தை பராமரிப்பதற்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொண்டால் உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் உடனே களமிறங்கி விட வேண்டும். முதலில் உணவுக்கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்.
ஊட்டச்சத்துமிக்க, சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் அதனை பழக்கப்படுத்த வேண்டும். விரும்பிய எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்ற மனோபாவம் கொண்டிருந்தால் அதை பார்த்து குழந்தைகளும் பின்பற்ற தொடங்கிவிடுவார்கள். உண்ணும் உணவுகளில் எது நல்லது? எது கெட்டது? என்று முத்திரை குத்தினால் குழந்தைகளும் ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட பழகிவிடுவார்கள். குழந்தைகள் முன்னிலையில் உடல் தோற்றம் பற்றி எதிர்மறையாக பேசுவதை தவிர்க்க வேண்டும். உடல் தோற்றத்தை பார்த்து மற்றவர்கள் விமர்சித்தாலும் அது பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும். உணவுப்பழக்கம், உடற்பயிற்சி மூலம் உடல் நலனை பராமரிக்க ஊக்குவிக்க வேண்டும்.
குடும்ப நேரம்
அலுவலகம் செல்லும் பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் நேரங்களிலும் செல்போனை உபயோகிப்பது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை பாழ்படுத்திவிடும். அவர்களும் பெற்றோர் தங்களிடம் அன்பாக, அக்கறையாக நடந்துகொள்வதில்லை என்ற மனநிலைக்கு வந்துவிடுவார்கள். பெற்றோர் வீட்டுக்குள் நுழைந்ததும் உற்சாகமாக ஓடோடி வரும் குழந்தைகளாக அவர்கள் வளர வேண்டும்.அதை விடுத்து செல்போனிலோ, டி.வி.யிலோ நேரத்தை செலவிட்டால் அவர்களும் அதே பழக்கத்தைத்தான் பின்பற்றுவார்கள். தினமும் இரவில் 'குடும்ப நேரம்' என்ற ஒன்றை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் செல்போன் உள்ளிட்ட எதிலும் கவனம் செலுத்தாமல் குடும்ப விஷயங்களை மட்டுமே பேச வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளிடம் தங்கள் கடந்த கால வாழ்க்கையை பற்றி பேசலாம். பள்ளியில் நடந்த விஷயங்களை குழந்தைகளிடம் கேட்டறியலாம்.
குடும்ப நிர்வாகம்
குடும்ப பொறுப்புகளை பெற்றோர் எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதையும் குழந்தைகள் கவனித்துக்கொண்டிருப்பார்கள். குழந்தைகள் முன்னிலையில் எந்த வேலையையும் அசட்டையாக செய்தாலோ, 'அந்த வேலையை பிறகு பார்த்துக்கொள்ளலாம்' என்று அலட்சியமாக பதில் அளித்தாலோ குழந்தைகளும் அதனை கருத்தில் கொள்வார்கள். அந்த வேலையை சுமையாக கருதினால் குழந்தைகளும் அவ்வாறே எண்ணுவார்கள்.
அவர்களிடம் ஏதேனும் வேலை கொடுத்தால், அந்த வேலையை செய்ய விரும்பாதபட்சத்தில் பெற்றோரை போன்றே அலட்சியமாக நடந்து கொள்வார்கள். ஒரு வேலையை செய்ய முடியாவிட்டால், 'இன்று நான் பிஸியாக இருக்கிறேன். எப்படியாவது குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடித்துக்கொடுத்து விடுவேன்' என்று கூறுங்கள். அதன்படியே செயல்படவும் செய்யுங்கள். அதை பார்த்து குழந்தைகளும் அவ்வாறே செயல்பட பழகிவிடுவார்கள்.
- தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
- வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* இஞ்சிபூண்டு அரைக்கும் பொழுது சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து அரைத்தால் நீண்ட நாட்கள் கெடாமல் பிரெஷ்ஷாக இருக்கும்.
* வாழைப்பூ நறுக்கும்போது உப்புக்கலந்த தண்ணீரில் வாழைப்பூவை வெட்டிப்போட்டால் வாழைப்பூ கறுத்து போகாமல் இருக்கும்.
* கடல் பாசி காய்ச்சும்போது இறுதியாக சில சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால் கடல் பாசி கண்ணாடி போல தெளிவாக இருக்கும்.
* அசைவ இறைச்சிகள் கழுவும் போது உப்பு, மஞ்சள் தூள் போட்டு சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கழுவினால் வாடை வராமல் இருக்கும்.
* ஸ்வீட் வகைகள் செய்யும்போது ஒரு சிட்டிகை உப்பு சேர்த்துக்கொண்டால் இனிப்பு தூக்கலாக தெரியும்.
* தக்காளி சட்னி செய்யும் போது சிறிது புளி அல்லது எலுமிச்சம் பழச்சாறு சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
* துவரம் பருப்பை வேகவைக்கும் பொழுது தண்ணீரில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வேக வைத்தால் பொங்காது.
* பருப்புக் குழம்பில் இறுதியாக வெங்காயத்தை நெய்யில் தாளித்து ஊற்றினால் சுவை அதிகரிக்கும். நன்கு வாசனையாக இருக்கும்.
* வத்தல் குழம்பு, மீன் குழம்பில் இறுதியாக சிறிது வெல்லம் சேர்த்தால் குழம்பு ருசி அதிகரிக்கும்.
* தேங்காய்ப் பாலில் பொட்டுக்கடலையை பொடி செய்து சேர்த்து உப்பு சேர்த்து தாளித்து இறக்கினால் அவசர சட்னி ரெடி.
* சாதம் மஞ்சளாக இருந்தால் சாதம் வடிக்கும் நேரத்தில் ஒரு துண்டு புளியை சேர்த்து பிறகு வடித்தால் சாதம் வெண்மையாக இருக்கும்.
* மாவில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பதினைந்து நிமிடங்கள் கழித்து தண்ணீர் கொதித்தவுடன் இட்லி ஊற்றினால் இட்லி பஞ்சு போல இருக்கும்.
- உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன.
- ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.
கோடை வெயில் தீவிரமடைந்து வருகிறது. எனவே பகல் வேளைகளில் வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
கோடை வெயிலில் அலைந்தால் சின்னம்மை, உயர் ரத்த அழுத்தம், நீர்ச்சத்து இழப்பு, சரும பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் நீர்க்கடுப்பு எனப்படும் சிறுநீர்ப் பாதை தொற்று அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்படும் என்றும் டாக்டர்கள் கூறியுள்ளனர். பொது நல மருத்துவ நிபுணர் டாக்டர் பரூக் அப்துல்லா கூறியதாவது:-
உடலில் உள்ள ரத்தத்தை சுத்திகரித்து, அதிலுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் பணியை சிறுநீரகங்கள் செய்கின்றன. ஒவ்வொரு சிறுநீரகத்திலும் தலா 10 லட்சம் நெப்ரான்கள் ரத்த நுண் சுத்திகரிப்பான்கள் உள்ளன.
அங்கிருந்து உருவாகும் கழிவுகள் யூரிடர் எனப்படும் குழாய்கள் மூலம் சிறுநீர்ப் பையில் சேருகின்றன. அவை யூரித்ரா எனப்படும் குழாய் வழியே சிறுநீராக வெளியேறுகிறது. இந்தக் கட்டமைப்பைத்தான் சிறுநீர்ப்பாதை என அழைக்கிறோம்.
இதில் ஏதேனும் கிருமித்தொற்று ஏற்படும்போது சிறுநீர் கழிப்பதில் எரிச்சல், வலி, சிரமங்கள் காணப்படும்.
இதை அலட்சியப்படுத்தினால், கிருமிகள் சிறுநீரகங்களைத் தாக்கி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். கோடைக் காலத்தில் உடலில் போதிய நீர்ச்சத்து இல்லாவிடில் சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
சமீப காலமாக அத்தகைய பிரச்சனைகள் பலருக்கு ஏற்படுகிறது. அதிலும், பெண்களில் பலர் புறச்சூழ்நிலை காரணமாக சிறுநீரை உரிய நேரத்தில் வெளியேற்ற இயலாமல் இருப்பதால் அவர்களில் பெரும்பாலானோருக்கு கிருமித் தொற்று ஏற்படுகிறது.
இதைத் தவிர்க்க நாளொன்றுக்கு குறைந்தது 4 லிட்டர் தண்ணீர், இளநீர், மோர், எலுமிச்சை சாறை அருந்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.