என் மலர்tooltip icon

    செய்திகள்

    • 2025-26ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
    • மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது.

    தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கியது. நாளை வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் சட்டசபை கூட்டத் தொடர் நிறைவடைந்தது. இதனைத் தொடரந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

    தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மாதம் 14ஆம் தேதி தாக்கல் செய்தார். அதனைத்தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் ஏப்ரல் 30 வரை நடைபெறும் என சபாநாயகர் அறிவித்திருந்தார்.

    மார்ச் 17-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதமும், மார்ச் 21-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் எனவும் சபாநாயகர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடைசி நாளான இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பிரதிநிதித்துவம் சட்ட முன்வடிவு, கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டன. கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    • இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்.
    • அவரது இந்த பேச்சு யாருக்கும் ஆச்சரியம் கொடுக்கவில்லை.

    ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, அட்டாரி - வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் விசா ரத்து என உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது.

    சிம்லா ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் வான்பரப்பை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை பாஸ்கிதான் மேற்கொண்டது.

    மேலும் இரு நாடுகளுக்கிடையே சண்டை மூளுவதற்கான பதற்றமும் எல்லையில் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருக்கிறார்.

    மேலும் கவாஜா ஆசிப் பேட்டி ஒன்றில், பல தசாப்தங்களாக பயங்கரவாத குழுக்களுக்கு நிதியளித்து ஆதரவு அளிப்பதாக அண்மையில் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தை ஐக்கிய நாடுகள் அவையில் இந்தியா எழுப்பியுள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில், இந்தியாவின் துணை நிரந்தரப் பிரதிநிதி யோஜ்னா படேல் பேசியதாவது,

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிப் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து ஆதரித்ததாக வாக்குமூலம் அளித்து இருக்கிறார். அவரது இந்த பேச்சு யாருக்கும் ஆச்சரியம் கொடுக்கவில்லை. உலகளாவிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு மோசமான நாடு பாகிஸ்தான் என்பதை அது அம்பலப்படுத்தி உள்ளது.

    பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு, பயிற்சி மற்றும் நிதியுதவி அளித்ததை ஒப்புக்கொண்டதை உலகம் முழுவதும் மக்கள் கேட்டனர்.

    2008 ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலுக்குப் பிறகு, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதம் எல்லா வகையிலும் கண்டிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்று தெரிவித்தார்.

    • சிவப்பிரகாசர் எந்த அளவுக்கு தமிழ் மீது புலமை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பினார்.
    • இருவரும் உதடு ஒட்டாமல் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு காஞ்சீபுரத்தில் குமாரசுவாமி தேசிகர் என்பவர் வசித்து வந்தார். சிவன் மீதும், முருகன் மீதும் இவருக்கும், இவரது குடும்பத்தினருக்கும் அளவில்லாத பக்தியும், பற்றும் இருந்தது. இதனால் குமாரசுவாமி தேசிகருக்கு பிறந்த குழந்தைகளும் ஆன்மீக பாதையில் தங்களை ஈடுபடுத்தி இருந்தனர்.

    குமாரசுவாமி தேசிகருக்கு மொத்தம் 4 மகன்கள் பிறந்தனர். அவர்களில் முதல் மகன் சிவப்பிரகாசர். இவர் தமிழ் இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் மிகுந்த புலமைப் பெற்று திகழ்ந்தார். இதன் காரணமாக இளம் வயதிலேயே பக்தி பாடல்கள் பாடுவதில் வல்லவராக இருந்தார்.

    கல்வியில் ஓரளவு புலமை பெற்று இருந்தாலும் அவருக்கு தமிழில் உள்ள அனைத்து வகையான இலக்கண நுட்பங்களையும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்பதில் மிகுந்த ஆசை ஏற்பட்டது. தமிழகத்தில் எங்கு சென்றால் இலக்கண நுட்பங்களை கற்றுக்கொள்ள முடியும் என்று ஆய்வு செய்தார்.

    அப்போது அவருக்கு திருநெல்வேலி பகுதியில் உள்ள பல்வேறு இந்து சமய மடங்கள் தமிழ் இலக்கண அடிப்படையில் இறைவன் மீது பாடல் இயற்ற பயிற்சிகள் அளிப்பது தெரிய வந்தது. குறிப்பாக நெல்லை சிந்துபூந்துறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான மடம் இத்தகைய பயிற்சியை சிறப்பாக அளிப்பது அவரது கவனத்தை ஈர்த்தது.

    எனவே பெற்றோரிடம் ஆசி பெற்று விட்டு தமிழ் இலக்கணத்தை மேலும் கற்றுக் கொள்வதற்காக அவர் திருநெல்வேலிக்கு புறப்பட்டு வந்தார். அப்போது நெல்லை தருமபுரம் ஆதீனத்தின் அதிபராக வெள்ளியம்பலவாண சுவாமிகள் இருந்தார்.

    இவர் முத்தமிழிலும் தேர்ச்சிப் பெற்றவர். இயல், இசை, நாடகம் தொடர்பாக தமிழில் அவர் பெற்ற மேன்மை அவரோடு இருந்தவர் களையும் மேன்மை பெற செய்தது. இதை சிவப்பிரகாசர் ஏற்கனவே அறிந்து இருந்தார்.

    தருமபுரம் ஆதீனத்துக்குள் நுழைந்ததும் அவர் வெள்ளியம்பலவாண சுவாமிகள் காலில் விழுந்து வணங்கினார். தமிழ் இலக்கணத்தில் நுட்பங்களை தெரிந்துக் கொள்வதற்காக காஞ்சீபுரத்தில் இருந்து வந்திருக்கும் தகவலை கூறினார். அதை கேட்டதும் வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.

    சிவப்பிரகாசர் எந்த அளவுக்கு தமிழ் மீது புலமை பெற்றிருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ள விரும்பினார். அதற்காக அவர் ஒரு சோதனையையும் நடத்தினார். அந்த சோதனை மிக மிக வித்தியாசமானது.

    முதலிலும் "கு", முடிவிலும் "கு", இடையில் ஊருடையான் என்ற வகையில் அமையும்படி அருமையான ஒரு வெண்பா பாடு பார்க்கலாம் என்று வெள்ளியம்பலவாண சுவாமிகள் அதிரடியாக சிவப்பிரகாசருக்கு உத்தரவிட்டார். இதை கேட்டதும் சிவப்பிரகாசர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அடுத்த நிமிடமே அவர் ஒரு வெண்பாவை பாடினார்.

    குடக்கோடு வானெயிறு

    கொண்டார்க்குக் கேழல்

    முடக்கோடு முன்னமணி வார்க்கு -

    வடக்கோடு தேருடையான் தெவ்வுக்குத்

    தில்லைத்தோல் மேற்கொள்ளல்

    ஊருடையான் என்னு முலகு- என்று சிவப்பிரகாசர் பாடினார்.

    இந்தப் பாடலை கேட்டதும் வெள்ளியம்பல வாண சுவாமிகள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. சிவப்பிரகாசர் உண்மையிலேயே தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தமிழில் அவருக்கு ஆழ்ந்த புலமையும் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டார். அவருக்கு இலக்கண நுட்பங்களை சொல்லிக் கொடுக்க சம்மதித்தார்.

    அதன்படி தமிழில் உள்ள ஐந்து இலக்கண நுட்பங்கள் அனைத்தையும் சிவப்பிரகாசருக்கு வெள்ளியம்பலவாண சுவாமிகள் ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுத்தார். பல மாதங்கள் வெள்ளியம்பலவாண சுவாமிகள் பாதங்களை தொழுது சிவப்பிரகாசர் தமிழ் இலக்கணத்தில் முழுமையாக மேன்மை பெற்றார்.

    நெல்லையில் தங்கியிருந்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபடுவதை சிவப்பிரகாசர் வழக்கத்தில் வைத்திருந்தார். குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு தருமபுரம் ஆதீன மடத்தில் பெற்று வந்த பயிற்சிகள் நிறைவு பெற்றன.

    இதனால் அந்த மடத்தில் இருந்து விடைபெற சிவப்பிரகாசர் தீர்மானித்தார். அதற்கு முன்னதாக தனது குரு வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு உரிய தட்சணை கொடுத்து கவுரவிக்க முன்வந்தார்.

    ஆனால் சிவப்பிரகாசரிடம் எந்த தட்சணையோ, அன்பளிப்பையோ வெள்ளியம் பலவாண சுவாமிகள் எதிர்பார்க்க வில்லை. என்றாலும் அவர் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்தார்.

    வெள்ளியம்பலவாண சுவாமிகளுக்கு எந்த அளவுக்கு ஆதரவாளர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு பொறாமை பிடித்த எதிர்ப்பாளர்களும் இருந்தனர். வெள்ளியம்பலவாண சுவாமிகளை எப்போதும் மட்டம் தட்டுவதையே அவர்கள் வழக்கத்தில் வைத்திருந்தனர்.

    அந்த வகையில் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்த ஒரு புலவர் வேண்டும் என்றே வெள்ளியம்பலவாண சுவாமிகளை தரக்குறைவாக பேசிக் கொண்டே இருந்தார். இதுபற்றி அறிந்ததும் வெள்ளியம்பலவாண சுவாமிகள் மிகவும் வருத்தம் அடைந்தார்.

    அந்த திருச்செந்தூர் புலவருக்கு தமிழ் இலக்கணம் வாயிலாக தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தார். அந்த பதிலடி கொடுக்கக் கூடிய சரியான நபர் சிவப்பிரகாசர்தான் என்று நினைத்தார்.

    எனவே அவர் சிவப்பிரகாசரிடம் திருச்செந்தூர் புலவர் பற்றி சொல்லி அவரை திருத்துமாறு கேட்டுக் கொண்டார். இதுதான் குருவுக்கு தரும் உண்மையான தட்சணை என்றும் அறிவுறுத்தினார்.

    குருவின் இந்த வேண்டுகோளை சிவப்பிரகாசர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அன்றே அவர் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு புறப்பட்டு சென்றார். திருச்செந்தூர் ஆலயத்தில் முருகனை வழிபட்டு விட்டு பிரகாரத்தை வலம் வந்து கொண்டிருந்தார்.

    அப்போது ஆணவம் பிடித்த அந்த திருச்செந்தூர் புலவர் அந்த பிரகாரத்தில் உட்கார்ந்து இருந்தார். அவர் சிவப்பிரகாசரை பார்த்து நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு சிவப்பிரகாசர், "நான் வெள்ளியம்பலவாண சுவாமிகளின் கால் தூசியில் இருப்பவன்" என்று பதில் அளித்தார். இதை கேட்டதும் அந்த ஆணவம் பிடித்த திருச்செந்தூர் புலவருக்கு கோபம் வந்தது.

    அவர் சிவப்பிரகாசரை பார்த்து, "அந்த வெள்ளியம்பலவாண சுவாமிகளே ஒரு தூசிதான். நீ எம்மாத்திரம்?" என்று கிண்டலாக பேசினார். அதற்கு சிவப்பிரகாசர், "உங்களால் நேர்மையாக பாடல் இயற்றி வெற்றி பெற முடியுமா?" என்று சவால் விட்டார். இதைக் கேட்டதும் திருச்செந்தூர் புலவருக்கு கோபம் வந்தது.

    "என்னோடு போட்டி போட வருகிறாயா?" என்று சவால் விட்டார். அந்த சவாலை சிவப்பிரகாசர் ஏற்றுக் கொண்டார். இருவரும் உதடு ஒட்டாமல் பாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அதாவது யார் ஒருவர் முதலில் நிரோட்டக யமக அந்தாதி ஒன்றை முதலில் பாடுகிறாரோ அவரே போட்டியில் வென்றவர் என்று முடிவு செய்யப்பட்டது.

    "நிரோட்டக யமக அந்தாதி" என்றால் என்ன தெரியுமா? தமிழில் உள்ள பல சிறப்புக்களில் நிரோட்டக யமக அந்தாதி வகை பாடல்களும் ஒன்றாகும். நிரோட்டகம் என்றால் நிர் + ஒட்டகம் என்று பிரித்து பொருள் அறிய வேண்டும். அதாவது நிரோட்டகம் என்றால் உதடு ஒட்டாமல் இருப்பது என்று அர்த்தமாகும்.

    உதடு ஒட்டாத எழுத்துக்கள் கொண்ட சொற்களை பொருள் வருமாறு இணைத்துப் பாடுவது நிரோட்டகச் செய்யுள் ஆகும்.

    திருக்குறளில் பல குறட்பாக்கள் நிரோட்டகமாக உள்ளன. நிரோட்டகச் செய்யுளுடன் யமக வடிவைச் சேர்ப்பது நிரோட்டக யமகம் ஆகும். யமகம் என்றால் செய்யுளின் ஒவ்வொரு அடியிலும் முதல் சில எழுத்துக்கள் அல்லது சொற்றொடர் திருப்பித் திருப்பி வரவேண்டும், ஆனால் வெவ்வேறு பொருளில் வர வேண்டும். இப்படி வந்தால் யமகம் ஆகும்.

    அந்தாதி என்றால் ஒரு செய்யுளின் இறுதி அடியில் வரும் இறுதிச் சொல்லோ அல்லது எழுத்தோ அடுத்த செய்யுளின் முதல் அடியின் முதல் சொல்லாக அமைந்து பாடல்களைத் தொடுக்க வேண்டும்.

    இப்படி நிரோட்டகமாகவும் யமகமாகவும் அந்தாதியாகவும் அமைந்திருக்கும் ஒன்றையே நிரோட்டக யமக அந்தாதி என்று நம் மூதாதை யர்கள் தமிழில் வரையறுத்து வைத்துள்ளனர். இத்தகைய நிரோட்டக யமக அந்தாதி வகையில் போட்டியிடுவது என்று திருச்செந்தூர் புலவரும், சிவப்பிரகாசரும் போட்டியில் குதித்தனர்.

    முருகனை வணங்கிய சிவப்பிரகாச சுவாமிகள் உடனே 100 பாடல்கள் அடங்கிய திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதியைப் பாடி முடித்தார். போட்டிக்கு அழைத்த திருச்செந்தூர் புலவரோ ஒரு பாடலும் பாட முடியாமல் திணறியபடி இருந்தார். சிவப்பிரகாசர் 100 பாடல்கள் பாடியதும் அவர் தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.

    போட்டியில் தோற்ற அவர், சிவப்பிரகாச சுவாமிகளுக்கு அடிமை ஆனார். அவரை வெள்ளியம்பல சுவாமிகளிடம் அழைத்துச் சென்று சிவப்பிரகாச சுவாமிகள் ஒப்படைத்தார். ஆனால் வெள்ளியம்பலவாண சுவாமிகள் பெருந்தன்மையுடன் மன்னித்து அறிவுரைகள் கூறி திருச்செந்தூர் புலவரை அனுப்பி வைத்தார்.

    திருச்செந்தூர் முருகன் மீது சிவப்பிரகாச சுவாமிகள் பாடிய நிரோட்டக யமக அந்தாதி பாடல்கள் அபூர்வமானது. எல்லோராலும் பாட இயலாது. 100 பாடல்கள் திருச்செந்தூர் முருகன் மீது இயற்றிய அந்த தொகுப்பு திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி என்று அழைக்கப்படு கிறது.

    இந்த 100 பாடல்களில் 30 பாடல்கள்தான் கிடைத்தன. அந்த 30 பாடல்களும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிரோட்டகத்தில் ப, ம, வ, உ, ஒ ஆகிய எழுத்துக்கள் வராமல் செய்யுள்களை அமைக்க வேண்டும். கட்டளைக் கலித்துறையில் அமைக்கப்பட்ட நூல் இது.

    இந்நூலில் திருச்செந்தூர் முருகப்பெருமானின் சிறப்பும், வீரமும் அருளும், தந்தையான சிவபெருமானின் திருவிளையாடல்களும், மாமனான திருமாலின் பெருமையும் பாடப்படுகின்றன. முதலையுண்ட சிறுவனைப் பதிகம் பாடி சுந்தரர் எழுப்பியது போன்ற புராணச் செய்திக் குறிப்புகளும் காணப்படுகின்றன.

    திருச்செந்தூர் முருகன் மீது பாடப்பட்ட பாடல்களில் இது தனித்துவம் நிறைந்தது. திருச்செந்தூர் முருகனே இதை பாட வைத்ததாகவும் சொல்வார்கள். திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய இதே போன்று மற்றொரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.

    • தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.
    • உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்.

    கனடாவில் 2015-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.

    கடந்த மாதம் 14-ந்தேதி பிரதமராக பதவியேற்றார். இதற்கிடையே அக்டோபர் மாதம் வரை பதவிகாலம் உள்ள நிலையில் பாராளுமன்றத்தை முன்கூட்டியே கலைப்பதாக மார்க் கார்னி அறிவித்தார்.

    மேலும் ஏப்ரல் 28-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் லிபரல் கட்சி சார்பில் பிரதமர் வேட்பாளராக மார்க் கார்னியும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் பெர்ரி பொய்லிவ்வும் களமிறங்கினர்.

    இதற்கிடையே 343 தொகுதிகளை கொண்ட கனடா பாராளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வாக்குப்பதிவு முடிந்ததும் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே முன்னிலை பெற்ற லிபரல் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.

    இந்நிலையில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகியுள்ள மார்க் கார்னிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கனடாவின் பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும், வெற்றி பெற்ற லிபரல் கட்சிக்கும் வாழ்த்துக்கள்.

    இந்தியாவும் கனடாவும் பகிரப்பட்ட ஜனநாயக விழுமியங்கள், சட்டத்தின் ஆட்சிக்கு உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் துடிப்பான இரு நாட்டின் மக்கள் உறவுகளால் பிணைக்கப்பட்டுள்ளன. எங்கள் கூட்டாண்மையை வலுப்படுத்தவும், எங்கள் மக்களுக்கு அதிக வாய்ப்புகளைத் உருவாக்கவும் உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    முன்னதாக ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தின் கீழ் இந்தியா-கனடா உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.    

    • அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி வருகிறார்கள்.
    • இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது.

    தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரசில் தற்போது 18 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விடம் கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற வேண்டும் என்று காங்கிரசில் பலர் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கீழ்மட்டத்தில் காங்கிரசுக்கு அந்த அளவுக்கு பலம் இருக்கிறதா என்ற கேள்வியும் உள்ளது. இதை சரி கட்ட கிராம கமிட்டிகள் அமைக்கும் புதிய முயற்சியை தமிழகத்தில் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. அதன்படி கிராமங்கள், கிராம பஞ்சாயத்துக்கள், வார்டுகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று அனைத்து பகுதிகளிலும் 10 முதல் 15 பேர் கொண்ட ஒரு கமிட்டியை உருவாக்கி வருகிறார்கள்.

    இதுவரை 50 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளது. அதற்கு கிராம கமிட்டி அமைத்து முடிக்கும் போது 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கிடைப்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரின் முகவரி, செல்போன் எண்கள், எந்த ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற அனைத்து விவரங்களும் கட்சி தலைமையிடம் இருக்கும். தேர்தல் நேரத்தில் இவர்கள் மூலம் ஆதரவு திரட்டவும், எளிதாக இருக்கும். சமீபத்தில் சென்னையில் நடந்த காங்கிரஸ் செயற்குழுவில் மேலிட பொறுப்பாளர் சோடங்கர் பேசும் போது, கூடுதல் தொகுதிகள் கேட்கலாம். அதற்கு ஏற்ப முதலில் நமது கட்சியை பலப்படுத்துவோம் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இன்னும் 2 மாதத்துக்குள் அப்பணியை முடிக்க திட்டமிட்டு உள்ளார்கள். இதைத் தொடர்ந்து வருகிற ஆகஸ்டு மாதம் திருச்சியில் ராகுல்காந்தியை அழைத்து பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    இதில் மல்லிகார்ஜூன கார்கேவும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்கு தற்போது அமைக்கப்படும் கிராம கமிட்டிகள் மூலம் ஆட்களை திரட்டவும் திட்டமிட்டு உள்ளார்கள். இது வருகிற தேர்தலில் காங்கிரசின் எழுச்சிக்கும் அந்த கூட்டணியில் கூடுதல் இடம் கேட்பதற்கு அடிப்படையாக அமையும் என்கிறார்கள்.

    • 27 பந்தில் அரைசதமும், 35 பந்தில் சதமும் விளாசினார்.
    • 7 பவுண்டரிகள், 11 சிக்சர்கள் என 94 ரன்கள் ஓடாமலேயே எடுத்தார்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் 209 ரன்கள் குவித்தது. பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் களம் இறங்கியது.

    அந்த அணியின் தொடக்க வீரரான 14 வயதேயான வைபவ் சூர்யவன்ஷி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 38 பந்தில் 7 பவுண்டரி, 11 சிக்சர் விளாசினார். 94 ரன்கள் பவுண்டரி மற்றும் சிக்கர் மூலமாகவே கிடைத்தன. இவரது ஆட்டத்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் 15.5 ஓவரில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

    17 பந்தில் அரைசதம் அடித்த சூர்யவன்ஷி, 35 பந்தில் சதம் விளாசினார். இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயதில் சதம், குறைந்த பந்தில் சதம் அடித்த இந்திய வீரர் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்தார்.

    14 வயதில் பயமறியாமல் அதிரடியாக விளையாடிய அவரை கிரிக்கெட் உலகம் பாராட்டி வருகிறது. சூர்யவன்ஷி பீகார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த நிலையில் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், சூர்யவன்ஷியின் திறமையை பாராட்டி 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக நிதிஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நான் கடந்த வருடம் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அவரது தந்தையை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அபாரமான ஆட்டத்திற்குப் பிறகு போன் மூலம் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மாநில அரசு அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கும். எதிர்காலத்தில் இந்திய அணிக்காக விளையாடி புதிய சாதனைகள் படைக்க வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது.
    • புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது.

    கோவை:

    பொள்ளாச்சியில் நடந்த கூட்டு பாலியல் வழக்கு தமிழகத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்று. கல்லூரி மாணவி மற்றும் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாச வீடியோ எடுத்து துன்புறுத்தப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது.

    முதலில் இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் விசாரித்தனர். பின்னர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்த நிலையில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டு திருநாவுக்கரசு (வயது 25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27), மணிவண்ணன் (28), ஹெரன்பால் (29), பாபு (27), அருளானந்தம் (34) மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    இவர்கள் மீது 2019 மே 21-ந் தேதி கோவை மகளிர் கோர்ட்டில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பிறகு வழக்கு விசாரணை தாமதம் ஆனது. அதைத்தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கோவை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் தனியாக அறை ஒதுக்கி விசாரணை தொடங்கப்பட்டது.

    மகளிர் கோர்ட்டு நீதிபதி நந்தினிதேவி முன்னிலையில் கடந்த 2023 பிப்ரவரி 24-ந் தேதி சாட்சி விசாரணை தொடங்கியது. அறைக்கதவுகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக சாட்சியம் பெறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர். இந்த வழக்கில் சாட்சி விசாரணை, அரசு மற்றும் எதிர் தரப்பு இறுதிவாதம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கின் தீர்ப்பு மே 13-ந் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.

    இந்தநிலையில் நேற்று தமிழகம் முழுவதும் 77 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களில் பொள்ளாச்சி வழக்கை விசாரித்து வரும் நீதிபதி நந்தினிதேவியும் ஒருவர். அவர் கரூர் மாவட்ட குடும்ப நீதிமன்ற நீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார்.

    நீதிபதி நந்தினிதேவி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அறிவித்த தேதியில் தீர்ப்பு வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    வழக்கமான நடைமுறைப்படி தீர்ப்பை தள்ளிவைத்த நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டால் அவர் தீர்ப்பை எழுதி கையெழுத்திட்டு சென்றால் அந்த தீர்ப்பை புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி அறிவிக்கலாம். அவ்வாறு தீர்ப்பு எழுதப்படவில்லை என்றால் புதிதாக பொறுப்பேற்கும் நீதிபதி மீண்டும் அரசு தரப்பு மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பு வக்கீல்களின் வாதங்களை கேட்டு தீர்ப்பை அறிவிக்கலாம் என மூத்த வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து கோவையைச் சேர்ந்த மூத்த வக்கீல் ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    இந்த வழக்கு மிக முக்கியமான வழக்கு. மாவட்ட நீதிமன்றங்களில் நடக்கும் விசாரணை தீர்ப்பை அதுவரை விசாரித்த நீதிபதியே அறிவித்தால் தான் சரியானதாக இருக்கும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது. மேல்முறையீட்டு வழக்குகளில் இதுபோன்ற கருத்துக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

    எனவே பொள்ளாச்சி வழக்கு விசாரணையை விசாரித்த நீதிபதியே தீர்ப்பு வழங்கும் வரை தொடர வேண்டும் என்று வழக்கில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் அல்லது வழக்கை தொடுத்த பாதிக்கப்பட்ட புகார்தாரர்கள் மனு செய்ய வாய்ப்பு உள்ளது. இதற்கு சட்டத்தில் டேமணர் என்று கூறுவார்கள்.

    அல்லது புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதி அறிவிக்கப்பட்ட நாட்களுக்குள் வழக்கு விசாரணையை படித்து பார்த்து தீர்ப்பு கூறவும் வாய்ப்பு உள்ளது. அதேசமயம் விசாரணையை முழுவதுமாக படித்து சாட்சியங்கள் குறித்து ஆராய வேண்டியிருந்தால் தீர்ப்பின் தேதி தள்ளி போகலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே மறுஉத்தரவு வரும் வரை நீதிபதி நந்தினிதேவி அதேகோர்ட்டில் பணிபுரிவார் என்று சென்னை ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகத்தில் இருந்து மகளிர் கோர்ட்டிற்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே நீதிபதி நந்தினிதேவி, பொள்ளாச்சி வழக்கில் தீர்ப்பு அளித்த பிறகே இடமாறுதலாகி செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.
    • 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.

    ஜம்மு காஷ்மீரில் குட்டி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தானைத் தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பா உடைய கிளை அமைப்பு பொறுப்பேற்றது. இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. 

    இந்நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்பின் X கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் முடக்கப்பட்டது.  அமைச்சர் கவாஜா ஆசிப், "இந்திய ராணுவம் விரைவில் ஊடுருவும்; நாங்கள் தயாராக உள்ளோம்" என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்றைய தினம் இந்தியா, அதன் ராணுவம் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் மற்றும் வகுப்புவாத கருத்துக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பியதற்காக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்வதாக அறிவித்தது.

    இதில் பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் உடைய சேனல் மற்றும் பிரபல செய்தி நிறுவனங்களின் சேனல்களும் அடங்கும்.

    • பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.
    • பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.

    சென்னை:

    காஷ்மீரில் உள்ள பஹல்காம் நகரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    எழும்பூர் ரெயில் நிலையத்தில் இன்று ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின் தலைமையில் ரெயில் நிலையத்தின் அனைத்து நுழைவுப் பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். பயணிகள் எடுத்து வருகின்ற உடமைகளை ஸ்கேனர் கருவி மூலம் தீவிரமாக பரிசோதனை செய்தனர்.

    மேலும் போலீஸ் மோப்ப நாய் மூலம் ரெயில் நிலையத்தின் அனைத்து பிளாட்பாரங்கள், பார்சல் சர்வீஸ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ரெயில் நிலையத்திற்கு வருகின்ற அனைத்து பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டது.

    இதே போல சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள முக்கிய நுழைவு வாசல்களில் பாதுகாப்பு படை போலீசார் குவிக்கப்பட்டு பயணிகள் உடமைகளை சோதனை செய்தனர். பயணிகள் காத்திருக்கும் அறைகள் மற்றும் முக்கிய பகுதிகளில் வெடிகுண்டு சோதனையும் நடத்தப்பட்டது.

    • கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.
    • மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.

    2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு த.வெ.க. தலைவர் விஜய் கட்சியில் அடுத்தடுத்து அதிரடி அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    கட்சியின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்காக இதுவரை கட்சி ரீதியாக 114 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 6 மாவட்ட செயலாளர்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளனர்.

    அடுத்த கட்டமாக 234 தொகுதிகளிலும் பூத் கமிட்டி தேர்வு பணி முடிவடைந்து இதுவரை 69 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

    தமிழகம் முழுவதும் பூத் கமிட்டி 5 மண்டலமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு கட்டமாக பல்வேறு இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. முதற்கட்டமாக கொங்கு மண்டலத்துக்குட்பட்ட 13 மாவட்டங்களுக்கான மாநாடு கடந்த 26, 27-ந்தேதிகளில் கோயம்புத்தூரில் நடந்தது.

    மாநாட்டுக்காக கோவை வந்த விஜய்க்கு வழி நெடுகிலும் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர்.

    வரலாறு காணாத கூட்டத்தால் கோவை மாநகரமே குலுங்கும் அளவிற்கு விஜய் வருகை பொதுமக்கள் மத்தியில் மட்டுமின்றி அரசியல் கட்சிகள் மத்தியிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

    கோவை மாநாடு விஜய்க்கு மட்டுமின்றி தொண்டர்கள் மத்தியிலும் புது உற்சாகத்தை கொடுத்து உள்ளது.

    இதை அடுத்து அடுத்த கட்டமாக மீதி உள்ள மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்துவதற்கு விஜய் திட்டமிட்டு வருகிறார். இது பற்றி கட்சி பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த்துடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. வரும் ஜூன் மாதத்துக்குள் மீதி உள்ள 4 மண்டல பூத் கமிட்டி மாநாட்டையும் நடத்தி முடிக்க விஜய் திட்டமிட்டு உள்ளார்.

    மாநாடு முடிவடைந்ததும் த.வெ.க. தலைவர் விஜய் 234 தொகுதிகளுக்கும் சுற்றுப் பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருக்கிறார்.

    இது ஒருபுறமிருக்க த.வெ.க. மகளிரணியினர் தமிழகம் முழுவதும் காலையிலும் மாலையிலும் வீடு வீடாக சென்று த.வெ.க. கொள்கைகளையும், மக்கள் பணிகளையும் மக்களிடையே கொண்டு சேர்த்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி திராவிட கட்சிகள் மீது மக்களிடையே இருக்கும் எதிர்ப்புகளை த.வெ.க.வுக்கு சாதகமாக்கி கொள்ளும் நடவடிக்கைகளிலும் தொண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
    • இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்?

    சென்னை:

    முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் இன்று பாரதிதாசன் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகம் முழுவதும் மின் தடை நிலவுகிறது. எங்கள் பகுதியில் இரவில் மட்டும் 3 முறை மின்தடை ஏற்பட்டது. முன்பெல்லாம் பகலில் ஓடிய அணில்கள் இப்போது இரவிலும் ஓடுகிறது. மின் துறை, மருத்துவ துறைகளில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. இல்லாத தடைகளை எல்லாம் சொல்லி தாண்டி கொண்டிருப்பது போல் கூறுகிறார்கள். முதலில் மின்தடையை நீக்குங்கள்.

    தி.மு.க. அரசு எல்லா துறைகளிலும் தோற்று வருகிறது. இப்போது மாநில சுயாட்சி பற்றி பேசுகிறார்கள். 1969-லேயே முதலமைச்சரின் அப்பா மரியாதைக்குரிய கலைஞர் முதல்வராக இருந்த போது மாநில சுயாட்சிக்காக ராஜ மன்னார் கமிட்டி அமைத்தார்கள். அந்த பரிந்துரையை தி.மு.க.வே பின்பற்றவில்லை. காரணம் அப்போது காங்கிரசுக்கு தி.மு.க. அடிமையாக இருந்தது. இப்போதும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள்.

    தமிழகத்தை சேர்ந்த 9 அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆட்சிக்கு வருவதே மக்கள் பணத்தை சுரண்டுவதற்கு தான். பா.ஜ.க. பிரிவினையை ஏற்படுத்துவதாக கூறி வருகிறார்கள். உண்மையில் மக்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தி வருவது தி.மு.க. தான். பாரதியை கொண்டாடியவர் பாரதிதாசன். இன்று பாரதிதாசனை கொண்டாடும் நீங்கள் பாரதியை கொண்டாடதது ஏன்? கம்பனை கொண்டாடதது ஏன்? தமிழிலும் வேற்றுமையை விதைத்தீர்கள். இந்துக்கள் விழாவுக்கு கூட வாழ்த்து சொல்லாமல் மதவேற்றுமையை உருவாக்கி வருவது யார்? வக்பு வாரியம் மூலம் அப்பாவி ஏழைகளின் பணம் சுருட்டப்படுகிறது. வக்பு பணம் சாமானியர்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருந்தால் இஸ்லாமியர்கள் அனைவரும் வசதி படைத்தவர்கள் ஆகி இருக்க வேண்டும். ஆனால் அவர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி கொள்கிறார்கள். உண்மையை உணர்ந்த மக்கள் இதை முறியடிப்பார்கள். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியை விமர்சிக்கிறார்கள். உங்கள் கூட்டணி நிலையை பாருங்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்டு, திருமாவளவன் நிலை என்ன என்பதை பாருங்கள். எங்கள் கூட்டணி வலுவாக உள்ளது.

    விஜய் இப்போதான் பூத் கமிட்டி கூட்டத்துக்கு இறங்கி வந்திருக்கிறார். அதன்பிறகு தான் அவரது அரசியல் நகர்வுகள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    பாரதிதாசன் கவிதையில் 'செந்தாமரை காடு பூத்தது' என்று ஒரு வரி உண்டு. அதே போல் தாமரை பூத்த தமிழ்நாடாக மாறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர்.
    • தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    மதுரை:

    மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வந்த தனியார் மழலையர் பள்ளியில் படிக்கும் ஆருத்ரா என்கிற 4 வயது சிறுமி பள்ளி தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார்.

    இதுகுறித்து அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பள்ளி ஆசிரியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அங்கு வந்து பார்த்தபோது தொட்டி ஆழமாக இருந்ததாலும், தண்ணீர் நிரம்பி இருந்ததாலும் சிறுமியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் 30 நிமிட போராட்டத்திற்கு பின் சிறுமியை மீட்டனர். தண்ணீரில் மூழ்கியதால் மயங்கிய நிலையில் இருந்த சிறுமி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிறிது நேரத்திலேயே சிறுமி ஆருத்ரா பரிதாபமாக இறந்தார்.

    இது தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தாளாளர் திவ்யா மற்றும் 4 ஆசிரியைகளை கைது செய்து அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில், தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது சிறுமி பலியான விவகாரத்தில் மதுரை கே.கே. நகர் தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். தனியார் பள்ளிக்கு வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி மற்றும் அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

    பள்ளிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்தனர்.

    ×