என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் அனுமதியின்றி உண்ணாவிரதம் இருக்க முயன்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் கைது

- டேன் டீ நிர்வாகத்தை மூடி விட்டு அந்த இடத்தை வனப்பகுதிக்கு ஒப்படைக்க போவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
- அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, பொன்.ஜெயசீலன் மற்றும் அ.தி.மு.கவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சின்கோனாவில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட வளர்ச்சி கழகம்(டேன் டீ) உள்ளது.
இந்த நிலையில் டேன் டீ நிர்வாகத்தை மூடி விட்டு அந்த இடத்தை வனப்பகுதிக்கு ஒப்படைக்க போவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
தொழிலாளர்களை பாதுகாக்க கோரியும், டேன் டீ நிர்வாகத்தை மூடும் திட்டத்தை திரும்ப பெற கோரியும் வால்பாறையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அ.தி.மு.க எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி அறிவித்து இருந்தார்.
கார் வெடிப்பு சம்பவத்தை ெதாடர்ந்து கோவையில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கும் போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
அனுமதியையும் மீறி இன்று காலை அமுல்கந்தசாமி எம்.எல்.ஏ. தலைமையில் கூடலூர் எம்.எல்.ஏ பொன் ஜெயசீலன், நகர செயலாளர் மயில் கணேசன் மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் என 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்துவதற்காக வால்பாறை பழைய பஸ் நிலையம் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.
அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், போராட்டத்திற்கு வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமுல் கந்தசாமி, பொன்.ஜெயசீலன் மற்றும் அ.தி.மு.கவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களை வேனில் ஏற்றி அருகே உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.