என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரமோற்சவ விழாவை முன்னிட்டு கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் கொடியேற்றப்பட்டது. (சிறப்பு அலங்காரத்தில் சாரங்கபாணி சமேத ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்.)
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
- கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து வேத மந்திரங்கள் ஓதப்பட்டது.
- கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கும்பகோணம்:
108 வைணவ தலங்களில் 3-வது தலமாக கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் அழைக்கப்படுகிறது. இக்கோவிலில் ஆண்டு தோறும் தைப்பொங்கல் சங்கரமண பிரமோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கொடி மரத்திற்கு விசேஷ பூஜைகள் செய்து, பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழங்க கருடாழ்வார் உருவம் வரையப்பட்ட கொடிக்கு நட்சத்திர ஆர்த்தி செய்யப்பட்டு கொடி ஏற்றப்பட்டது.
கொடியேற்றத்தை முன்னிட்டு உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் கொடிமரம் அருகே எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழா நாட்களான தினமும் சாமி விதி உலா நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி நடைபெறுகிறது.