என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஒற்றை யானையை பிடிக்கும் பணி 3-வது நாளாக தீவிரம் ஒற்றை யானையை பிடிக்கும் பணி 3-வது நாளாக தீவிரம்](https://media.maalaimalar.com/h-upload/2023/05/07/1877434-07.webp)
அட்டகாசம் செய்யும் யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட பொம்மன் என்ற கும்கி யானையை படத்தில் காணலாம்.
ஒற்றை யானையை பிடிக்கும் பணி 3-வது நாளாக தீவிரம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
- வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒற்றை ஆண் காட்டு யானை வெளியேறி வரப்பள்ளம் ஆற்றங்கரையோர விவசாய தோட்ட பகுதியில் சுற்றி திரிந்தது.
இதை தொடர்ந்து அடசபாளையம் பகுதியில் விவசாய தோட்டத்தில் புகுந்து விவசாய கூலி வேலை செய்து கொண்டிருந்த துரை என்ற சித்தேஷ்வரன் என்பவரை மிதித்து கொன்றது.
இதனையடுத்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு அறிவுறுத்தலின் பேரில் அந்தியூர் வனச்சரகர் உத்திரசாமி மற்றும் டி.என்.பாளையம் வனச்சரகர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் அந்த ஒற்றை காட்டு யானையை பெருமுகை வனப்பகுதி க்குள் விரட்டி அனுப்பினர்.
அந்த காட்டு யானை மீண்டும் ஊருக்குள் வந்து உயிர் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.
இதையடுத்து அந்த ஒற்றை காட்டு யானையை பிடித்து வேறு வனப்பகுதிக்குள் விடலாம் என்று வனத்துறையினர் முடிவு செய்தனர்.
இதனால் முதுமலை யானைகள் முகாமில் இருந்து நேற்று முன்தினம் லாரிகளில் பொம்மன், சீனிவாசன் என்ற 2 கும்கி யானைகளை பெருமுகை சஞ்சீவிராயன் கோவில் அருகே உள்ள உரம்பு கிணறு மாரியம்மன் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் வனத்துறையினர் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் டிரோன் கேமரா மூலமாக அந்த ஒற்றை காட்டு யானை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் கண்கா ணித்தனர். ஏற்கனவே அங்கு முகாமிட்டு இருக்கும் வன கால்நடை மருத்துவ குழுவினர் மூலமாக மயக்க ஊசி செலுத்தியவுடன்,
தயாராக இருக்கும் 2 கும்கி யானைகளை கொண்டு காட்டு யானையை லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல இருப்பதாக வனத்துறை யினர் தெரிவித்து உள்ளனர்.
இதையடுத்து அட்டகாசம் செய்யும் அந்த ஒற்றை யானையை பிடிக்க கொண்டு வரப்பட்ட 2 கும்கி யானைகளுக்கு தேவையான சோளப்பயிர் உள்ளிட்ட உணவுகளை வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் டிரோன் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-வது நாளாக அந்த ஒற்றை காட்டு யானையை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் பெருமுகை அடுத்த சேத்துக்காட்டு புதூர், கரும்பாறை குளத்துக்காடு, சஞ்சீவிராயன் கோவில் பகுதிகளில் இன்று வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதையடுத்து ஒற்றை யானை சுற்றி திரிவதால் பொதுமக்கள் வனப்பகுதி வழியாகவும், அதையொட்டிய பகுதிகளில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் கேட்டு கொண்டுள்ளனர்.