என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோத்தகிரி அடுத்த பேரகணியில் ஹெத்தையம்மன் கோவில் திருவிழா
- படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையில் வந்து வழிபட்டனர்
- கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகா் இன மக்களின் குலதெய்வமான ஹெத்தை அம்மன் திருவிழா ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நடைபெற்றது.
திருவிழாவையொட்டி, கடந்த ஒரு மாதமாக பக்தா்கள் விரதம் இருந்து வந்தனா். கோத்தகிரியில் பழமை வாய்ந்த பேரகணியில் உள்ள ஹெத்தையம்மன் கோவிலில் நேற்று திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான படுகா் இன மக்கள் கலந்துகொண்டு ஹெத்தையம்மன் திருவிழாவினை கொண்டாடினா்.
படுகர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து இசைக்கருவிகள் முழங்க ஆடல், பாடல்களுடன் வாகனங்களில் ஹெத்தையம்மன் கோவிலுக்கு வந்து காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.
பண்டிகைக்கு வந்த பக்தர்களுக்கு மடியாடா பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஒரே நாளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வாகனங்கள் மூலமாக பேரகணிக்கு சென்றதால் கோத்தகிரியில் இருந்து பேரகணி செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதேபோல, படுகா் இன மக்கள் வாழும் ஜெகதளா, காட்டேரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வரும் நாள்களில் ஹெத்தையம்மன் திருவிழா நடைபெற உள்ளது.