search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகளுக்கு தொல்லியல்  குறித்த உள்விளக்க பயிற்சி
    X

    மாணவிகளுக்கு தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி

    • முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக் காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
    • தமிழி என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத் தரப்பட்டது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், கடந்த 21-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு, பர்கூர் அரசு மகளிர் கலைக் கல்லூரி பி.ஏ., வரலாறு மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள், காரிமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் மற்றும் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பி.ஏ., தமிழ் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவிகள் என மொத்தம் 50 பேருக்கு, தொல்லியல் குறித்த உள்விளக்க பயிற்சி நடந்து வருகிறது.

    இதன் 5-ம் நாளான நேற்று அருங்காட்சியகத்தில் உள்ள விஜயநகரர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றினை படியெடுத்து, படித்து பொருள் கொள்வது எப்படி என்பது குறித்து செயல் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

    முன்னதாக வரலாற்றுக்கு முற்பட்ட காலம், இடை வரலாற்றுக் காலம் மற்றும் வரலாற்றுக் காலங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழி என்று அழைக்கப்படும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களை எழுதவும் படிக்கவும் கற்றுத் தரப்பட்டது. பின்னர் அந்த எழுத்தில் இருந்து இன்றைய கால தமிழ் வரை எழுத்துக்களின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.

    இனி வரும் நாட்களில் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள் கல்வெட்டுகளில் உள்ள ஆண்டுகளை கணக்கிடும் முறை, கோவில் கட்டடக்கலை சிற்பம் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சியை மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் அளிக்கிறார். இதற்கான ஏற்பாட்டை அருங்காட்சியக பணியாளர்கள் செல்வகுமார் மற்றும் பெருமாள் ஆகியோர் செய்துள்ளனர்.

    Next Story
    ×