என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு இன்று முதல் படகு போக்குவரத்து தொடக்கம் - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர் கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு இன்று முதல் படகு போக்குவரத்து தொடக்கம் - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்](https://media.maalaimalar.com/h-upload/2023/03/06/1845538-3.webp)
கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு இன்று முதல் படகு போக்குவரத்து தொடக்கம் - சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி
- இன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி :
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியா குமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கடந்த 2000-ம்ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.
கடல் நடுவில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ளதால் அடிக்கடி உப்பு காற்றினால் சேதம் அடைந்து வருகிறது. இதனால் கடல் உப்பு காற்றின் பாதிப்பில் இருந்து இந்த திருவள்ளு வர் சிலை சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசும் பணி நடைபெறுவது வழக்கம்.
அதன்படி 4 ஆண்டு களுக்கு பிறகு இந்த முறை திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணியானது ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் 6-ந்தேதி தொடங்கப்பட்டது. 133 அடி உயரம் கொண்ட சிலையை சுற்றி சுமார் 60 டன் எடை கொண்ட ராட்சத இரும்பு பைப்புகள் கொண்டு சாரம் அமைக்கப்பட்டு முதலில் சிலையை தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும்பணி நடைபெற்றது.
அதன்பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பினை அகற்றும் பணி நடை பெற்று முடிந்தது. அதைத்தொடர்ந்து தண்ணீர் கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் ஜெர்மன்நாட்டில்இருந்து இறக்குமதி செய்யப்பட்ட "வாக்கர்"எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது.
தற்போது இந்த பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் இந்த பணிக்காக 60 டன் எடை கொண்ட இரும்பு பைப்புகள் மூலம் சிலையை சுற்றி அமைக்கப்பட்ட சாரத்தினை பிரிக்கும் பணி நடைபெற்று முடிந்துள்ளது. ரசாயன கலவை பூசும்பணி நிறைவடைந்து உள்ளதை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.
இதைத்தொடர்ந்து 6 மாதங்களுக்கு பிறகு இன்று முதல் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு படகுபோக்குவரத்து இயக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று முதல் மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனு மதிக்கப்பட்டனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக சென்று பார்வையிட்டனர்.