என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொத்தனூர் மகா பகவதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா
- பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும்.
- அதன்படி இந்த வருடம் மகாபகவதி அம்மன் கோவில் திரு விழா, கடந்த 23-ந் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் மகா பகவதி அம்மன் கோவில் திருவிழா, ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் நடைபெறும். அதன்படி இந்த வருடம் மகாபகவதி அம்மன் கோவில் திரு விழா, கடந்த 23-ந்
தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
24-ந் தேதி காலை நஞ்சை இடையாறு ராஜா சுவாமி கோவிலில் இருந்து மணிவேல் எடுத்து வரும் நிகழ்ச்சியும், மாலை சுவாமி வெள்ளாளர் தெரு, வெங்கமேடு, பாலாஜி நகர், காவிரி நகர், நாவல் நகர் மற்றும் காமராஜர் நகர் பகுதிகளில் ஊர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 25-ந் தேதி ஜேடர்பாளையம் ரோடு, மேற்கு வண்ணத்துறை ரோடு, காலேஜ் ரோடு, மகா லட்சுமி நகர், வெங்கமேடு, சக்கரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாமி ஊர் விளையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
26-ந் தேதி மாலை பக்தர்கள் மற்றும் பொது மக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று அம்மனுக்கு அலங்காரம் செய்து மேளதாளங்கள் முழங்க, அம்மனை ஊர்வலமாக எடுத்து வந்தனர். அதை தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மகாபகவதிஅம்மன் பக்தர்க ளுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 27-ந் தேதி மாலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பூஜையும், அதனை தொடர்ந்து ஊர்வலமாக மாவிளக்கை கொண்டு வந்து மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வான வேடிக்கை நடைபெற்றது. நையாண்டி மேளம் மற்றும் கரகாட்டம் நடைபெற்றது.
இரவு ஒயிலாட்டமும் நடைபெற்றது. நேற்று காலை கிடா வெட்டும் நிகழ்ச்சியும், மாலை மஞ்சள் நீராட நிகழ்ச்சியும் நடைபெற்றது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பொத்தனூர் பகவதி அம்மன் கோவில் ஊர் பொதுமக்கள் மற்றும் திருவிழா குழுவினர் செய்திருந்தனர்.