என் மலர்
உள்ளூர் செய்திகள்

குட்டை போல காட்சியளிக்கும் கரியக்கோவில் அணை.
தென்மேற்கு பருவ மழை பொய்த்து போனதால்கரியக்கோவில் அணை நீர்மட்டம் 18.37 அடியாக குறைந்தது

- கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
- அணையில் 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வந்த 31 கன அடி தண்ணீர் உபரிநீராக கரியக்கோவில் ஆற்றில் திறக்கப்பட்டது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் கரியக்கோவில் ஆற்றின் குறுக்கே 52.49 அடி உயரத்தில் 190 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோவில் அணை அமைந்துள்ளது.
விளை நிலங்கள்
இந்த அணையால் பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி ஆகிய கிராமங்களில் 3,600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன.
ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் 2000 ஏக்கர் ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகிறது.
சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாகவும் விளங்கி வரும் இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்தாண்டு பெய்த பருவ மழையால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ந் தேதி 50.52 அடியை எட்டியது.
அணையில் 175.63 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கியது. அணைக்கு தொடர்ந்து வந்த 31 கன அடி தண்ணீர் உபரிநீராக கரியக்கோவில் ஆற்றில் திறக்கப்பட்டது.
இதையடுத்து வாய்க்கால் பாசன மற்றும் ஆற்றப்படுகை கிராம விவசாயத்திற்காக நடப்பாண்டு மார்ச் மாதத்தில் அணையில் இருந்து பாசனத்திற்கு சுழற்சி முறையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஜூன் மாதம் இறுதியில் அணையின் நீர்மட்டம் 31 அடியாக குறைந்து 68 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே மீதமிருந்தது.
இதனிடையே தென்மேற்கு பருவமழை கைகொடுக்க வில்லை. தொடர்ந்து அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் மாறாக சுட்டெரிக்கும் வெயில் தாக்கத்தால் அணையின் நீர்மட்டம் மேலும் சரிந்தது. தற்போது அணையில் நீர்மட்டம் 18.37 அடி உள்ளது.
காத்திருக்கும் விவசாயிகள்
27.10 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ள நிலையில் குட்டை போல தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் கவலையடைந்துள்ள கரியகோவில் அணை மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.