என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.
    • மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினவயல் உள்ளிட்ட பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வேதாரண்யத்தில் கடந்த 2 நாட்களாக திடீரென்று பெய்த மழையால் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி உப்பு உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் உப்பு பாத்திகள் கரைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது.

    உப்பளங்களில் சேமித்து வைத்துள்ள உப்பு மழையில் கரைந்து விடாமல் பாதுகாக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். மழையால் உப்பளங்கள் பாதிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான உப்பு தொழிலாளர்களுக்கு வேலை இழந்துள்ளனர்.

    இந்த திடீர் மழையால் உப்பு உற்பத்தி மீண்டும் தொடங்க ஒரு வார காலமாகும் என உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    • தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் தொடருவோம்.
    • எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேற்று இரவு முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள அவருடைய வீட்டில் திடீரென சந்தித்து பேசினார். அரைமணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பின்னர் வெளியே வந்த டி.டி.வி.தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்ததாகவும் வேறு ஏதும் காரணம் இல்லை. தமிழ்நாடு மக்கள் குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் என்ன கூறினார் என்பது எனக்கு தெரியாது. அவர் என்ன பேசி உள்ளார் என்பதை அறிந்த பிறகு அது குறித்து கருத்து தெரிவிக்கிறேன்.

    எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை உள்ளதால் ஜெயலலிதாவின் கட்சி பலவீனம் ஆகி கொண்டுள்ளது. ஜெயலலிதாவின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை, அமைப்பார்கள். எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்களும், நிர்வாகிகளும் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தேர்தலுக்குப் பிறகு கட்சியை மீட்கும் பொறுப்பு எங்களிடம் வரும். தேசிய ஜனநாய கூட்டணியில் நாங்கள் உள்ளோம். அதில் தான் தொடருவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது வைத்திலிங்கம், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ரெங்கசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி.
    • அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

    ஒரத்தநாடு:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கம் தனது சொந்த ஊரான தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இவர் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

    வைத்திலிங்கத்தை நேற்று இரவு திடீரென, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒவ்வொருவரும் தலா அரைமணி நேரம் சந்தித்து பேசினர். சசிலாவுடன், அவருடைய சகோதரர் திவாகரன் உடன் வந்தார்.

    பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.வினர் அனைவரும் விரைவில் ஒன்று சேர்வார்கள் என சசிகலா கூறி வந்த நிலையில் திடீரென முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இணைப்புக்கான முயற்சியாக இருக்கலாம் எனவும் கட்சியினரிடையே பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் வைத்திலிங்கத்தை சந்தித்து விட்டு வெளியே வந்த சசிகலா நிருபர்களிடம் கூறியதாவது:-

    வைத்திலிங்கத்துடனான இந்த சந்திப்பு என்பது அனைத்தும் கலந்தது. அ.தி.மு.க. என்பது எம்.ஜி.ஆர். ஆரம்பித்தது. மக்களுக்காக ஆரம்பித்தது. தி.மு.க. போல் இல்லை. நல்ல ஆட்சி 2026-ல் கொடுப்போம். அது மக்களாட்சியாக இருக்கும். வெளியில் சில பேர் நினைக்கலாம், அ.தி.மு.க.வை சுக்கு நூறாக உடைத்துவிடலாம் என்று. அது எப்படி என்றால் கடலில் இருக்கும் தண்ணீரை ஒரு பக்கெட்டில் எடுத்து வெளியேற்றிவிடுவேன் என்பது போல தான்.

    அ.தி.மு.க. என்பது பொதுமக்கள் மற்றும் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி. 2026-ல் எல்லோரும் ஒன்றிணைந்து நல்லபடியா ஆட்சி அமைத்து, அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பிடித்த ஆட்சியாக இருக்கும். அனைவரும் ஒன்றினைய வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி கூறி வருவது குறித்து கேட்டதற்கு, இது ஒருத்தர் முடிவு செய்யும் விஷயம் இல்லை. எங்கள் கட்சியின் சட்டதிட்ட விதிகள் படி அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ? அதுதான் இந்த கட்சியின் சட்ட விதிப்படி நடக்கும். அதை நாங்கள் நல்லபடியாக செய்வோம்.

    மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பேசிய கருத்து குறித்து கேட்டதற்கு, தி.மு.க. மத்திய அரசு என்று முதலில் பார்க்க வேண்டும். மத்திய அரசு என்று பார்த்தால் தான் இங்கு ஆட்சி சரிவர நடத்த முடியும். நீங்கள் சண்டை போடுவதற்காக மக்களின் வாக்குகளை வாங்கி போய் பாராளுமன்றத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்றால், வரும் 2026-ல் அதற்கு உண்டான பதிலை தமிழக மக்கள் நிச்சயம் கொடுப்பார்கள். இங்கு அரசாங்கத்தை சரியாக நடத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.

    இதை மாற்று பாதையில் கொண்டு போகும் ஒரே எண்ணத்தில் அவர்கள் செய்யும் தவறை வெளியே போகாமல் மாற்றும் முயற்சியில் இந்த மாதிரி வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசின் ஒரு சில விஷயம் தான் வெளியே வந்து உள்ளது. இன்னும் போகப்போக 2026-தேர்தலுக்கு முன் நிறைய விஷயங்கள் வெளியே வரும். ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த அரசாங்கத்தை சீர்கெடுத்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இது எல்லாத்துக்கும் பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்த மாதம் வருகிற 29-ந்தேதி தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
    • மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்காபங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் மாசிமகத்தையொட்டி நாளை (புதன்கிழமை) மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக இந்த மாதம் வருகிற 29-ந்தேதி (சனிக்கிழமை) தஞ்சை அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் மாவட்ட கருவூலம் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.
    • தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    தஞ்சாவூர்:

    குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி பஞ்சாப்-அரியானா மாநில எல்லையான கணூரி பார்டரில் சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை 2024, நவம்பர் 26-ந்தேதி முதல் மேற்கொண்டு வருகிறார்.

    சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் இன்றுடன் (5-ந்தேதி) 100 நாட்களை எட்டியுள்ளது. இவரது போராட்டத்தை ஆதரித்தும், மத்திய அரசு உடனடியாக நீதி வழங்க கோரியும், சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பு சார்பில் தஞ்சை ரெயிலடியில் இன்று (புதன்கிழமை) காலை உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தை தொடங்கி வைத்து சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தமிழக ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும், விவசாயிகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க வேண்டும், இதனை வலியுறுத்தி சண்டிகரில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக புறப்பட்ட சம்யுத்த கிசான் மோர்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் தலைமையிலான விவசாயிகள் பேரணியை அரியானா மாநில எல்லையில் துணை ராணுவப்படை தடுத்து நிறுத்தியது.

    அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 7 விவசாயிகள் உயிரிழந்தனர். ஆனாலும், தொடர்ந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டரை கொண்டு வந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஜெக்ஜித் சிங் டல்லேவால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகிறார். போராட்டம் இன்று 100-வது நாளை எட்டியுள்ளது.

    இதற்கு ஆதரவாக இந்தியா முழுவதும் 100 இடங்களில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

    அதன்படி, தமிழகத்தில் தஞ்சையில் விவசாயிகள் அனைவரும் திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு தற்போது சிகிச்சையில் இருக்கும் ஜெக்ஜித் சிங் டல்லேவால் உயிருக்கு எதுவும் நேர்ந்தால் இந்தியா முழுவதும் புரட்சி வெடிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.

    விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • நாளை திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார்.
    • 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நாகை வருகை தருகிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மாலை திருச்சி வந்தடைகிறார். பின்னர், அங்கிருந்து சாலை மார்க்கமாக காரில் நாகை செல்கிறார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர், இரவு உணவு அருந்திவிட்டு, அங்குள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை (திங்கட்கிழமை) காலை நடக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளரின் இல்ல திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். தொடர்ந்து, நாகை புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பில் 105 புதிய பஸ்களின் சேவையை தொடங்கி வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஐ.டி.ஐ. மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைப்பதுடன், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

    அதனைத் தொடர்ந்து, நாகை பால்ப ண்ணைச்சேரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'தளபதி அறிவாலயம்' என்ற தி.மு.க. கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள அண்ணா, கலைஞர் வெண்கல சிலைகளையும் திறந்து வைக்கிறார்.

    இதனைத் தொடர்ந்து, விருந்தினர் மாளிகைக்கு சென்று அங்கு மதிய உணவு அருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.

    பின்னர், மாலை 4 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்குகிறார். நிகழ்ச்சிகள் அனைத்தும் முடிந்ததும் முதல்-அமைச்சர் அங்கிருந்து காரில் புறப்பட்டு திருச்சி செல்கிறார். தொடர்ந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

    முதல்-அமைச்சர் வருகையை யொட்டி நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு தமிழகம் தயங்குவது ஏன்?
    • அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் புறவழிச் சாலையில் வன்னியர் சங்கம் சார்பில் சோழமண்டல சமய, சமுதாய நல்லிணக்க மாநாடு நடந்தது.

    மாநாட்டுக்கு வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி தலைமை தாங்கினார். டாக்டர் ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார்.

    இந்த மாநாட்டில் பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:

    அனைத்து சமூகமும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரையும் ஒடுக்கக் கூடாது.

    1982-ம் ஆண்டு இந்தியாவில் ஒரு கணக்கெடுப்பு நடந்தது. ஒவ்வொரு சமூகத்தை பற்றி புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

    இந்தியாவில் 4,694 சாதிகள் இருந்தன. தமிழகத்தில் 364 சாதிகள் உள்ளன. இந்த 364 சாதிகளும் முன்னேறினால் தான் தமிழகம் முன்னேறும். ஒரு சமத்துவமான சமூகத்தை அடைய முடியும். ஆனால், இதில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளது.

    ஏற்றத்தாழ்வுகள் மறைய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என கூறுகிறோம். அனைவரும் முன்னேற அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. 2013-ல் கர்நாடகம், 2023-ல் தெலுங்கானா உள்ளிட்ட 4 மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்துள்ளது. ஆனால், தமிழகம் தயங்குவது ஏன்?

    சமூக நல்லிணக்கத்திற்கு தடை போதை பொருட்கள் தான். சமய பெரியவர்கள் மதுக்கடையை ஒழிக்க வேண்டும் என பிரசாரம் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

    • குத்தகை விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.
    • நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர்.

    மன்னார்குடி:

    தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மன்னார் குடியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு தனி அடையாள அட்டை கொடுப்பதற்காக தமிழ்நாடு வேளாண் துறை மூலம் விளைநிலங்கள் குறித்து கணினி பதிவேற்றம் நடைபெற்று வருகிறது. தமிழக நிலப்பரப்பில் 60 சதவீதம் கோவில் அறக்கட்டளைகளுக்கு சொந்தமான நிலங்களை குத்தகை சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க மறுப்பது ஏற்கத்தக்கது அல்ல.

    குத்தகை விவசாயிகளுக்கும் உரிய அடையாள அட்டை வழங்குவதற்கான கணினி பதிவேற்றம் செய்திட தமிழக அரசு அவசர கால நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் திறந்தவெளி கிடங்குகள் மூலம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இதனை கடந்த சில ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில் தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ளதால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய வளாகங்களில் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளது.

    இதனால் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து, கொள்முதல் செய்வதற்கு காத்துக் கிடக்கின்றனர். எனவே, இதற்கு விரைந்து நடவடிக்கை எடுத்து திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அரவை ஆலைகளுக்கு விரைந்து அனுப்புவதற்கு அரசு முன்வர வேண்டும் என்றார்.

    • பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை.
    • பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் சேர்க்கைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்ட மயிலாடுதுறை எம்.பி. சுதா செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பட்ஜெட் தாக்கலின் போது தமிழகத்துக்கு ஏதாவது ஒரு நிதியை, நிதிஅமைச்சரும், பிரதமரும் ஒதுக்குவார்கள் என்று நம்பிக்கையோடு தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்பார்த்தனர். ஆனால் ஒரு சின்ன அறிவிப்பு கூட கிடையாது. நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். பாராளுமன்றத்தில் பெரிய அளவில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்காதது குறித்து குரல் எழுப்பினோம். தமிழகத்திற்கா? என்ற வெறுப்புணர்வோடு தான் இன்றைக்கு நிதியமைச்சர் தமிழகத்தை பார்க்கிறார்.

    அதைப்போன்று இங்கு இருக்கிற அண்ணாமலை தமிழகத்துக்கு நிதி கேட்க வேண்டியதற்கு பதிலாக மற்ற கதையெல்லாம் பேசுகிறார். தமிழக மக்கள் ஆகட்டும், தமிழ் மண்ணாகட்டும் எல்லாவற்றையும் வெறுப்பது போன்றுதான் பிரதம மந்திரி நடந்து வருகிறார். திருக்குறள், தமிழ் என பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் மோடி மற்றும் நிர்மலா சீதாராமன் பாக்கெட்டில் இருந்து காசு கேட்கவில்லை. நாம் செலுத்தும் வரியை கேட்கிறோம்.

    கல்விக்கு இந்தாண்டு வர வேண்டிய 4,500 கோடி ரூபாய் கேட்டால், மும்மொழி கொள்கையை ஒத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஒரு போதும் தமிழ் மக்களும், தமிழ் மண்ணும், தமிழ் உணர்வாளர்களும் மத்திய அரசின் சர்வாதிகார போக்கிற்கு தலை வணங்க மாட்டோம். தமிழ் மொழியை கற்றவர்கள் உலக அரங்கில் தலைசிறந்தவர்களாக உள்ளனர். இந்தியை நாங்கள் வெறுக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

    பிரதமர் மோடி, தமிழ் மொழியை அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், தமிழக மக்களுக்கு அவர் செய்வது பெரிய துரோகம். கல்விக்கான தொகையை கேட்கிறோம் என்பதற்காக திருப்பரங்குன்றம், திருத்தணிக்கு போய் பிரச்சனை என முருகனை வைத்து திசை திருப்புகிறார்கள். முருகனின் பெயரை வைத்துக்கொண்டு எல்லா வித்தைகளையும் செய்து வருகிறார்கள். முருகனே வந்து திருத்தினாலும், இவர்கள் திருந்த மாட்டார்கள். ஆனால் ஒருநாள் முருக பெருமான் சூரனை எப்படி வதம் செய்தாரோ அதுபோன்று ஆர்.எஸ்.எஸ்.கும்பலை வதம் செய்யப்போகிறார் என்றார்.

    • நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது.
    • பக்தர்கள் பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சுவாமிமலையில் சுவாமிநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடாகும்.

    இக்கோவிலில் பிரபவ முதல் அட்சய முடிய 60 தமிழ் வருட தேவதைகளும் இங்கு திருப்படிகளாக அமையப்பெற்று குறிப்பிடத்தக்கதாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்று வந்தது. நேற்று ரத ரோஹ ரோகணம் என்னும் சப்பர தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் சிகர நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) தைப்பூச விழா கோலாகலமாக நடந்தது.

    முருகப்பெருமானை தரிசிக்க அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காமல் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் சுமார் ஒரு மணி நேரம் வரை காத்திருந்து அர்ச்சனை செய்து, மனமுருகி முருகப்பெருமானை வழிபட்டனர்.

    இன்னும் ஏராளமான பக்தர்கள் காவடி, பால்காவடி சுமந்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அபிஷேகம் மற்றும் பூஜைகளில் கலந்து கொண்டு பிரசாதம் பெற்று சென்றனர்.

    முன்னதாக காலை வெள்ளி மயில் வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வீதி உலா புறப்பட்டார். பின்னர் காவிரி ஆற்றில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று புனிதநீர் ஊற்றி தீர்த்தவாரி நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    பாதுகாப்பு பணியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. விழாவை யொட்டி கும்பகோணம், தஞ்சாவூர், ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் கோவிலுக்கு இயக்கப்பட்டன. 

    • 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.
    • ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கோவிலில் உள்ள கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் ஆனது என்பது தனி சிறப்பு வாய்ந்தது.

    இதனால் கருவறையில் உள்ள அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. அதற்கு பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைலக்காப்பு அபிஷேகம் நடைபெறும்.

    இப்படி பல்வேறு சிறப்புகள் வாய்ந்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் கடந்த 2014-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. அதனை தொடர்ந்து, 21 ஆண்டுகளுக்கு பிறகு பல்வேறு திருப்பணிகளுடன் இன்று (திங்கட்கிழமை) கோலாகலமாக குடமுழுக்கு நடைபெற்றது.

    இந்த குடமுழுக்கு விழாவுக்கான யாகபூஜைகள் செய்வதற்காக 41 யாக குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாக சாலை அமைக்கப்பட்டது. இங்கு கடந்த 3-ந்தேதி விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின.

    கடந்த 7-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடந்து வந்தன.

    இன்று காலை விக்னேஸ்வர பூஜையுடன் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. அதை தொடர்ந்து மஹா பூர்ணாஹூதி, மகா தீபாராதனை, யாத்ராதானம் நடைபெற்றது.

    பின்னர், யாகசாலையில் இருந்து மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மேளவாத்தியங்களுடன் ராஜகோபுரத்திற்கு சிவாச்சாரியார்கள் தலையில் புனிதநீர் சுமந்து வந்தனர்.

    தொடர்ந்து, புனிதநீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் சரியாக 10 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் மற்றும் ராஜ கோபுரங்களில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தப்பட்டது.

    அந்த நேரத்தில் வானில் கருடன் வட்டமிட்டது. பின்னர், மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் எழுப்பிய புன்னைநல்லூர் மாரியம்மா.. ஓம் சக்தி.. பராசக்தி... என்ற பக்தி கோஷங்கள் விண்ணையே முட்டும் அளவுக்கு அதிர்ந்தது. பின்னர், பக்தர்கள் மீது புனிதநீர் ஷவர் மூலம் தெளிக்கப்பட்டது.

    குடமுழுக்கு விழாவை யொட்டி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுப்படி ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவில் இன்று இரவு 7 மணிக்கு மாரியம்மன் திருவீதிஉலா நடைபெற உள்ளது. நாளை முதல் மண்டலாபிஷே பூஜைகள் நடைபெறும். 

    ×