search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • விஜய் கட்சியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
    • அனைவரும் பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    விஜய் கட்சியால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அச்சப்பட வேண்டிய அவசியமும் இல்லை. மக்கள்தான் எஜமானர்கள். அவர்கள் தான் முடிவு செய்வார்கள். தமிழக கவர்னரின் பதவிக்காலம் முடிவடைந்தும் அது குறித்து இதுவரை தி.மு.க வாய் திறக்காதது ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்.

    தற்போது தி.மு.க. மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்ளதான். அதற்காக எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடுவார்கள். மடியில் கனம் இருந்தால் பயம் இருக்கத்தான் செய்யும்.

    வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் அவரது மத்திய அமைச்சரவையில் அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதி இடம் பிடித்தார். ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்து விட்டு அடுத்த தேர்தலில் பாஜகவை கழற்றி விட்டு காங்கிரசுடன் இணைந்தார். இது குறித்து கேட்டால் ராஜதந்திரம் என்பார்கள்.

    பாலியல் வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகளவில் நடந்து வருகிறது. இதற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம்தான் முக்கிய காரணமாகும். ஆனால் தமிழகத்தில் போதை புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வருங்கால சன்னதியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தி.மு.க அரசு தேர்தல் கால எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. இதனால் தினமும் அரசு ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    2019-ம் ஆண்டு தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை இருந்தது. ஆனால் தற்போது அப்படி ஒன்றுமில்லை. அனைவரும் பாஜகவை ஏற்றுக் கொண்டு விட்டனர். இரட்டை இலை இருக்கிறது என்ற காரணத்தால் எடப்பாடி பழனிச்சாமி ஏதேதோ செய்து வருகிறார். இதனை உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் சகித்துக் கொள்ள முடியாமல் உள்ளனர். உண்மையான அ.தி.மு.க தொண்டர்கள் ஒன்றிணைய எடப்பாடி பழனிச்சாமி தடையாக இருக்கிறார். தி.மு.க.வின் பி டீமாக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வருகிறார். ஏனென்றால் அவர் மீதுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக அப்படி செயல்படுகிறார்.

    எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தான் வாக்குகளை பெறுவதற்காக வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினார். தென் தமிழகத்தில் 106 சமுதாய மக்களுக்கு எதிராக செயல்பட்டார். ஆனால் நீதிமன்றம் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டது. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் அனைத்து சமுதாய மக்களுக்கும் உரிய இட ஒதுக்கீடு கிடைக்கும். சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைப்போம். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்.
    • திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருவனந்தபுரம்- வேளாங்கண்ணி- திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே திருச்சி கோட்டம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06115) நாளை (புதன்கிழமை), 28-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 4-ந்தேதி ஆகிய நாட்களில் பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.55 மணிக்கு வேளாங்கண்ணிக்கு சென்றடையும்.

     இதேபோல் மறு வழித்தடத்தில் வேளாங்கண்ணியில் இருந்து விழாக்கால சிறப்பு ரெயில் (வண்டி எண்.06116) வரும் 22, 29 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதி ஆகிய நாட்களில் இரவு 7.10 மணிக்கு புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ட்ரலை மறுநாள் அதிகாலை 6.55 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில்கள் நெய்யாற்றின்கரை, குழித்துறை, இரணியல், நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மண் காப்போம் ஸ்டார்ட்-அப் திருவிழாவில் உங்கள் கனவுகள் மெய்பட வழி காட்டுகிறார் விஜயா மகாதேவன்.
    • காஸ்மெடிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்திருக்கிறார்.

    விவசாய விளைப்பொருட்கள் உணவாக மட்டுமின்றி பல வகைகளில் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது.

    இந்த நுட்பமான உண்மையை புரிந்து, அதையே வணிக வாய்ப்பாக மாற்றி சாதித்திருக்கிறார் தஞ்சையை சேர்ந்த பெண் விஜயா மகாதேவன்.

    விவசாயம் சார்ந்த காஸ்மெடிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதில் இன்று தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்திருக்கிறார்.

    தனியொரு பெண்ணாக தன் வீட்டில் தொடங்கிய பயணம் இன்று 30-க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் "வசீகரா வேதா" எனும் பெரு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.

    'விவசாயம் சார்ந்த சுய பராமரிப்பு பொருட்கள்' என்கிற புதுமையான சிந்தனை எப்படி வந்தது என்பது குறித்து விஜயா மகாதேவன் பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில்,"எங்கள் நிறுவனத்தை 2017-ல் ஆரம்பித்தேன். இதன் நோக்கம் "க்ரீன் பாத்ரூம்". அதாவது காலையில் தொடங்கி இரவு உறங்க செல்லும் வரை நம் அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பொருட்களான பல் பொடி, டூத் பேஸ்ட் தொடங்கி குளியல் பொடி, ஷாம்பூ, எண்ணெய் உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் ரசாயனத்தால் ஆனவை.

    எனவே இந்த ரசாயன பொருட்களாலும், இதை பயன்படுத்திய பின் வெளியேறும் நீராலும் மனிதர்களுக்கும் , நிலத்திற்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இச்சுழலை நம் பாரம்பரியமான வழிகாட்டுதல்கள் மூலம் மாற்ற நினைத்தோம். எனவே இயற்கையோடு இசைந்து நம் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்களோ அதைப் போலவே நாமும் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானது தான் "வசீகர வேதா" நிறுவனம்.

    அந்த வகையில், நமக்கு முந்தைய தலைமுறையினர் அவர்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வந்த கரிசலாங்கண்ணி, ஆவாரம்பூ, செம்பருத்தி, குப்பை மேனி போன்ற பொருட்களையே எங்கள் தயாரிப்புகளின் மூலப் பொருட்களாக வைத்திருக்கிறோம். இந்த பொருட்கள் அனைத்தையும் நாங்களே தரமான முறையில் எங்கள் விவசாய நிலத்தில் உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகிறோம்.

    ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இருக்கவில்லை என்றாலும், பிறகு தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அதிகரித்தார்கள். இன்று 13,000-த்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுடன் வெற்றிகரமாக இயங்கி வருகிறோம்.

    கொரோனோ காலத்தில் தொடங்கிய தொழில் என்பதால் சமூக வலைதளத்தில் எங்கள் நிறுவனத்திற்கான வரவேற்பு அதிகமாக இருந்தது. ஒரு கடையை தொடங்கினால் கூட ஒரே நாளில் 100 வாடிக்கையாளர்கள் வருவது அரிது தான், ஆனால் சமூக வலைதளத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்தியதால் இன்று ஒரே நேரத்தில் பல்லாயிரம் பேரை சென்றடைய முடிந்திருக்கிறது." என்றார்.

    இவருடைய வெற்றிக்கு இவர் பின்பற்றிய உத்திகளை தன் யூடியூப் சேனல் வாயிலாக தொடர்ந்து சொல்லி வருகிறார். இந்த வழிகாட்டுதல்கள் மேலும் பல விவசாயிகளை, பெண்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் கோவையில் வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் "அக்ரி ஸ்டார்ட்-அப் திருவிழா"வில் பங்கேற்று பேச இருக்கிறார்.

    இத்திருவிழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் 83000 93777 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது.
    • சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    தஞ்சாவூர்:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திருவிழா வருகிற 29-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மராட்டிய மாநிலம், மும்பையில் இருந்து வருகிற 26-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.01161) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளா ங்கண்ணி வந்தடையும்.

    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து வருகிற 28-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01162) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    இதேபோல், மும்பையில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி மதியம் 1 மணிக்கு புறப்பட்டு வேளாங்கண்ணி வரும் சிறப்பு ரெயில் (01163) மறுநாள் இரவு 11.50 மணிக்கு வேளாங்கண்ணி வந்தடையும்.


    மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி காலை 3 மணிக்கு புறப்பட்டு மும்பை செல்லும் சிறப்பு ரெயில் (01164) மறுநாள் மாலை 4.20 மணிக்கு மும்பை சென்றடையும்.

    மேற்கண்ட சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்வேறு வழக்குகளில் சுமார் 1145 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது
    • தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களை தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.

    தஞ்சாவூர்:

    போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, வெளிமாநிலங்களில் இருந்து கடத்தி வரப்பட்டு பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பல ஆயிரம் கிலோ கஞ்சாவை அழிக்கும் நிகழ்ச்சி தமிழகத்தில் 5 மண்டலங்களில் நடைபெற்றது.

    அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அடுத்த அயோத்திப்பட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கஞ்சா அழிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட திருச்சி, பெரம்பலூர், திருவாரூர், கரூர், அரியலூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 1145 கிலோ கஞ்சாவை, அந்தந்த மாவட்ட போலீசார் மூட்டைகளாக கட்டி வாகனங்கள் மூலம் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தனர். தொடர்ந்து, அங்குள்ள ராட்சத கொதிகலன்களில் கஞ்சாவை போட்டு போலீசார் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்தவாறு பணியாளர்கள் அழித்தனர். தஞ்சை சரக டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கஞ்சா பொட்டலங்களை தீயில் போட்டு அழிக்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.இன்று முதல்கட்டமாக 1145 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.

    பின்னர் போதை பொருளுக்கு எதிரான உறுதி மொழியை காவல் உயர் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

    • பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பழங்கால சிலையை கடத்தி செல்ல முயல்வதாக சிலைகடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தஞ்சாவூர் சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே மேலதிருவிழாபட்டியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு கார், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சந்தேகத்திற்கிடமாக நின்றுக்கொண்டு இருந்தது. இதனை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர். அதில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பழங்கால 2.5 அடி உயர உலோகப் பெருமாள் சிலையை கைப்பற்றினர்.

    இது குறித்து கார், மோட்டார் சைக்கிளில் இருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை அரும்பாக்கம், ஜெகநாதன் நகரை ராஜேந்திரன் (வயது 52), தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அலமங்குறிச்சியை சேர்ந்த ராஜ்குமார்(36), திருவாரூர் மாவட்டம் இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் (28), ஜெய்சங்கர் (58), கடலுார் மாவட்டம் நாட்டார்மங்கலத்தை சேர்ந்த விஜய் (28) என்பது தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்திய விசாரணையில், இனாம்கிளியூரை சேர்ந்த தினேஷ் என்பவரது தந்தை 12 ஆண்டுகளுக்கு முன் தொழுவூர் ஆற்றில் துார்வாரும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிலை கிடைத்துள்ளது. இது குறித்து அவர் தாசில்தார், வருவாய்துறை, கிராம நிர்வாக அலுவலர் என யாரிடமும் தகவல் அளிக்காமல், தனது மாட்டு கொட்டகையில் மறைத்து வைத்து இருந்துள்ளார்.


    இதையடுத்து தினேஷ் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு மாட்டுகொட்டகையில் மறைத்து வைத்து இருந்த சிலையை கண்டெடுத்தார். அவரும், யாரிடமும் தகவல் தெரிவிக்காமல், சிலையை ரூ.2 கோடிக்கு வெளிநாட்டுக்கு விற்பனை செய்ய வேண்டும் என முயன்றுள்ளார்.

    இதற்காக தனது நண்பர்கள் மூலம் சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் உதவியை நாடினார். பின்னர் தினேஷ் தனது நண்பர்களான ராஜ்குமார், ஜெயசங்கர், விஜய் ஆகியோர் மூலம் சென்னைக்கு கடத்தி செல்ல, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுாரை சேர்ந்த ஹாரிஸ் (26), காட்டுமன்னார்குடி அருகே கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (26) ஆகியோர் பாதுகாப்புக்கு அழைத்துக்கொண்டு விற்பனைக்காக கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து தினேஷ் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்து சிலை மற்றும் கார், மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களை கும்பகோணம் கூடுதல் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

    இந்த பழங்கால சிலையானது 15 முதல் 16-ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர்கள் காலத்தை சேர்ந்தது என தெரியவந்துள்ளது.இவற்றின் மதிப்பு ரூ.2 கோடிக்கும் மேல் இருக்கும் என்றும், சிலையானது தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
    • அறம் வளர்த்த நாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவையாறு:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம்வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், மாலை வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அறம் வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. ஓம் சக்தி... என பக்தி கோஷம் முழக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. தேரானது 4 ரதவீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.

    விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • பஞ்சமூர்த்திகள் காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.
    • திடீரென கனமழை பெய்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயாறப்பர் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று அப்பர் கயிலை காட்சி நடைபெறுவது வழக்கம்.

    அதாவது அப்பருக்கு சிவபெருமான் கயிலை காட்சி அளித்ததை நினைவு கூறும் வகையில் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான கயிலை காட்சி நேற்று இரவு ஆடி அமாவாசையையொட்டி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று மதியம் கோவிலில் இருந்து பஞ்சமூர்த்திகள் புறப்பட்டு திருவையாறு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது.

    தொடர்ந்து, இரவில் ஐயாறப்பர் கோவிலில் உள்ள அப்பர் சன்னதியில் அப்பருக்கு சிவபெருமான் காட்சி கொடுக்கும் ஆடி அமாவாசை அப்பர் கயிலை காட்சி விழா நடைபெற்றது.

    இதற்காக ஐயாறப்பர் அறம் வளர்த்த நாயகி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அப்பருக்கு காட்சி கொடுத்தார். அப்போது திடீரென கனமழை பெய்தது.

    இருந்தாலும் கொட்டு மழையையும் பக்தர்கள் பொருட்படுத்தாமல் பக்தி கோஷங்கள் எழுப்பி சாமி தரிசனம் செய்து தேவார பாடல்களை பாடி உற்சாகமடைந்தனர். கொட்டும் மழையிலும் குடைப்பிடித்தபடி தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரியார் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீன மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆலோசனைபடி கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.
    • ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நேற்று மாலை அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டம் முடிந்த பிறகு கவுன்சிலர்கள் வெளியேறினர். பின்னர், நகராட்சி அதிகாரிகளை வைத்து ஆணையர் குமரன் கூட்டம் நடத்தியுள்ளார்.

    அப்போது திடீரென பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. நந்தகோபால் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் அருண் பிரசாத், சரவணன், பத்மாவதி மற்றும் லஞ்ச ஒழிப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமை காவலர்கள் அடங்கிய குழுவானது டெபுட்டி இன்ஸ்பெக்சன் செல் ஆபீஸர் ஐயம்பெருமாள் மற்றும் குணசேகரன் ஆகியோர் சென்று அதிகாரிகளிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகம், ஆணையர் அறையில் சோதனை செய்தனர்.

    நேற்றிரவு 8 மணிக்கு தொடங்கிய சோதனை இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. சோதனை முடிவில் கணக்கில் வராத கையூட்டு தொகைகளை வைத்திருந்த நகராட்சி ஆணையர் குமரனிடமிருந்து ரூ.5 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதேப்போல் உதவி பொறியாளர் மனோகரனிடம் ரூ.80 ஆயிரம், ஒப்பந்ததாரர் எடிசனிடம் ரூ.66 ஆயிரம், டிரைவர் வெங்கடேசனிடம் ரூ.8 ஆயிரம் என மொத்தம் ரூ.6 லட்சத்து 54 ஆயிரம் கணக்கில் வராத கையூட்டு பணம் சோதனையில் கைப்பற்றப்பட்டது. மேலும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் சிக்கியது.

    பட்டுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த அதிரடி சோதனையில் ஆணையர் முதல் டிரைவர் வரை பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
    • கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    கும்பகோணம், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. தடை செய்யப்பட்ட PFI அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் இல்லங்களிலும் சோதனை தகவல் வெளியாகியுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம் பேட்டையைச் சேர்ந்த பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான ராமலிங்கம் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரனை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை.

    தஞ்சாவூா்:

    கல்லணையில் இருந்து இன்று டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :-

    டெல்டா மாவட்ட பாசனத்திற்கு இன்று கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் இன்னும் ஒரு வாரத்திற்குள் கடைமடை வரை சென்றுவிடும். 7 லட்சத்து 95 ஆயிரத்து 453 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது.

    சாகுபடிக்கு தேவையான அனைத்து உரங்கள், விதை நெல்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு தேவைக்கு ஏற்ப பயிர் கடன் வழங்கப்படும். காவிரித் தண்ணீரை பயன்படுத்தி ஏரி, குளங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட அனுமதி அளிக்கவில்லை என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. நாங்களும் ஒருபோதும் மேகதாதுவில் அணைக்கட்ட விடமாட்டோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின.
    • கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூா், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணை நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந் தேதி அல்லது அதற்கு முன்னரோ, பின்னரோ திறக்கப்படும். இந்த ஆண்டு கர்நாடக அரசு உரிய நீரை வழங்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கணிசமாக குறைந்தது. போதிய அளவில் தண்ணீர் இல்லாததால் டெல்டா மாவட்ட குறுவை பாசனத்திற்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்படவில்லை. இதனால் மாவட்டங்களில் பம்பு செட் ஆழ்துளைக்கிணறு பயன்படுத்தி மட்டுமே குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடகா காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பின. தொடர்ந்து மேட்டூர் அணைக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. நாளுக்கு நாள் அதிக கன அடியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.

    இதையடுத்து கடந்த 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி அமைச்சர் கே.என்.நேரு மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக தண்ணீரை திறந்து வைத்தார். அந்த தண்ணீர் நேற்று மாலை திருச்சி மாவட்டம் முக்கொம்பிற்கு வந்தடைந்தது. அங்கு விவசாயிகள் பூக்கள் தூவி வரவேற்றனர். தொடர்ந்து காவிரி தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணைக்கு வந்தடைந்தது. கல்லணைக்கு வந்த தண்ணீரை காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, கல்லணைக் கால்வாய் ஆகிய ஆறுகளில் பிரித்து வழங்குவதற்கான நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

    இதற்காக ஏற்கனவே கல்லணையில் உள்ள தலைப்பு பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இதையடுத்து கல்லணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனத்திற்காக காவிரியில் வினாடிக்கு 1500 கன அடி, வெண்ணாற்றில் வினாடிக்கு 1000 கன அடி, கொள்ளிடத்தில் 400 கன அடி, கல்லணை கால்வாயில் வினாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீரை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் பொத்தானை அழுத்தி திறந்து வைத்து சாகுபடி அனைத்தும் நல்ல முறையில் நடைபெற வேண்டும் என ஆறுகளில் பூக்கள், நவதானிங்களைத் தூவி வணங்கினர்.

    தொடர்ந்து விவசாயிகள் காவிரி நீரை பயன்படுத்தி நல்ல முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கொடுக்க வேண்டும் என்று ஆற்றில் பூக்கள் தூவி வழிப்பட்டனர். கல்லணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் டெல்டா மாவட்டங்களில் 7.95 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட உள்ளது. 

    ×