search icon
என் மலர்tooltip icon

    தென்காசி

    • அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த பாப்பாங்குளம் அருகே உள்ள செல்லபிள்ளையார்குளத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு.

    இவர் நாகர்கோவில் பகுதியில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி உச்சிமகாளி (35). இவர்களுக்கு பழனி சக்தி குமார் (8). இந்திரவேல் (6), பிரேம் ராஜ் (3) என்ற 3 மகன்கள் உள்ளனர். உச்சிமாகாளி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். அவரது மகன்கள் அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் குடும்ப செலவுக்காக உச்சிமாகாளி சுய உதவி குழுவில் பணம் வாங்கி உள்ளார். அதனை திருப்பி செலுத்த முடியாததால் மற்ற குழுக்களிலும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கு பணத்தை திருப்பி செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த உச்சிமாகாளி தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் தனது 3 குழந்தைகளையும் விட்டுவிட்டு செல்ல மனமில்லாமல் இன்று காலை அவர்களுக்கும் விஷத்தை கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதனால் அவர்கள் வாந்தி எடுத்தவாறு மயங்கி விழுந்துள்ளனர்.

    இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் உச்சிமாகாளி மற்றும் அவரது மகன்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 வயது ஆண் குழந்தை பிரேம்ராஜ் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கமாக இந்த கோவில் கொடை விழாக்களில் பொங்கல், புளியோதரை, மதியம் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும்.
    • கடந்த ஆண்டு இதே கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக சப்பாத்தி வழங்கியது குறிப்பிடத்கத்தது.

    ஆலங்குளம்:

    நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆடி மாதத்தில் தொடங்கி வரிசையாக அம்மன் கோவில்களில் கொடை விழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். ஆடுகள் பலியிடுதல், சாமக்கொடை, மதிய கொடை என பல்வேறு வகை நிகழ்ச்சிகள் இந்த கொடை விழாக்களில் நடைபெறும்.

    இன்றளவும் கிராமப்பகுதிகளில் விமரிசையாக நடந்து வரும் இந்த விழாக்களை காண வெளியூர்களில் இருந்தும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள்.

    வழக்கமாக இந்த கோவில் கொடை விழாக்களில் பொங்கல், புளியோதரை, மதியம் சாப்பாடு அன்னதானமாக வழங்கப்படும். இதனை கிராம மக்கள் குடும்பத்துடன் வந்து சாப்பிட்டு செல்வார்கள். ஆனால் சமீப காலமாக சற்று வித்தியாசமாக அரிசி சாதத்திற்கு பதிலாக பக்தர்களுக்கு சப்பாத்தி, பரோட்டா உள்ளிட்டவைகளை அன்னதானமாக வழங்குவது நெல்லை, தென்காசி மாவட்ட கோவில்களில் நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் முக்கூடல் நாராயணசுவாமி கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அந்த ஊர் இளைஞர்கள் முழு பங்களிப்புடன் பரோட்டா தயார் செய்து அன்னதானமாக வழங்கினர்.


    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூரில் சமீபத்தில் நடந்து முடிந்த மாரியம்மன் கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களின் பங்களிப்புடன் பக்தர்களுக்கு இரவு அன்னதானமாக சப்பாத்தி, குருமா வழங்கப்பட்டது.

    இந்நிலையில் ஆலங்குளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பத்திரகாளி அம்மன் கோவிலிலும் தற்போது கோவில் கொடை விழா நடைபெற்று வருகிறது. அந்த கோவிலிலும் வித்தியாசமாக அன்னதானம் வழங்கவேண்டும் என்று முடிவு எடுத்த கோவில் நிர்வாகிகள், பரோட்டா வழங்க திட்டமிட்டனர்.

    இதையடுத்து கொடை விழா நிறைவு நாளன்று 16 பேர் கொண்ட குழு மாஸ்டர் சுந்தர் என்பவர் தலைமையில் பரோட்டா சுட்டனர். சுமார் 750 கிலோ மாவு பயன்படுத்தி கிட்டத்தட்ட 9 ஆயிரத்து 800 பரோட்டாக்கள் போடப்பட்டது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பரோட்டாவையும், அதற்கு வழங்கப்பட்ட சென்னா மசாலாவையும் போட்டி போட்டு வாங்கி ருசித்து சாப்பிட்டனர்.

    கடந்த ஆண்டு இதே கோவிலில் திருவிழாவின்போது பக்தர்களுக்கு அன்னதானமாக சப்பாத்தி வழங்கியது குறிப்பிடத்கத்தது.

    • 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி எந்தவிதமான அச்சமும் இன்றி சாதாரணமாக மீண்டும் வயல்களுக்குள் புகுந்தது.
    • குளத்தில் குளித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும், அந்த வனவிலங்குகளை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபடுவதும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில வாரங்களாக செங்கோட்டையை அடுத்துள்ள மேக்கரை, பண்பொழி, வடகரை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் முகாமிட்டு மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள விவசாய நிலங்களில் கீழே இறங்கி பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

    கடந்த சில நாட்களாக செங்கோட்டையை அடுத்த பண்பொழி பகுதியில் யானை கூட்டம் விவசாய நிலங்களை சேதப்படுத்திக் கொண்டிருந்த நிலையில், அதனை விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று நள்ளிரவில் 2 யானைகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து கீழே இறங்கி எந்தவிதமான அச்சமும் இன்றி சாதாரணமாக மீண்டும் வயல்களுக்குள் புகுந்தது.

    தொடர்ந்து இன்று காலை அந்த 2 யானைகளும் அந்த பகுதியில் உள்ள ஒரு குளத்திற்கு சென்று ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தன. அவை குளத்தில் குளித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    சமீப காலமாக பொதுமக்கள் அதிகம் வசித்து வரும் ஊர் பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அவற்றால் பொதுமக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு முன்னர் தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வனத் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • புலி அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் கூட்டம் அலைமோதியது.
    • மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ள செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்து குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர்.

    தென்காசி:

    குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த நிலையிலும் அருவிகளில் சீராக தண்ணீர் விழுந்து வருவதால் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் காலை முதலே உள்ளூர் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடுவதை முன்னிட்டு ஓணம் விடுமுறை என்பதாலும் அங்கிருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க முகாமிட்டுள்ளனர்.

    புலி அருவி, ஐந்தருவியில் அதிக அளவில் கூட்டம் அலைமோதியது. மெயின் அருவி பகுதியில் அமைந்துள்ள செல்பி பாய்ண்டில் புகைப்படம் எடுத்து குடும்பமாக வந்த சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். அருவிக்கரை பகுதியில் இருக்கும் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. 

    • குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது.
    • மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது.

    தென்காசி:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணைப்பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. சேர்வலாறு அணை பகுதியில் 1 மில்லிமீட்டரும், மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் நகர் பகுதிகளை பொறுத்தவரை செங்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. சில இடங்களில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதோடு குளிர்ந்த காற்று வீசியது. ஒரு சில இடங்களில் இரவில் லேசான சாரல் அடித்தது.

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் அருவிகளில் சீசன் முடிவுற்ற நிலையிலும் அவ்வப்போது பெய்யும் மழையால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. சில நாட்களாக மழை இல்லாததால் நீர் வரத்து படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் நேற்று இரவில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக குற்றாலத்தை அடுத்த ஐந்தருவி பகுதியில் தண்ணீர் மெல்ல மெல்ல அதிகரித்தது. திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நீர்வரத்து அதிகமாக இருந்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டு, மண் மற்றும் கற்கள் அடித்து வரப்பட்டதால் இரவு முழுவதும் மட்டுமின்றி இன்று காலை வரை தடை நீட்டிக்கப்பட்டது.

    அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலையிலும் குற்றாலம் பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது. மற்ற அருவிகளில் குளிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாததால் ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சீராகும் பட்சத்தில் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குண்டாறு மற்றும் அடவிநயினார் அணை பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. குண்டாறில் 6.2 மில்லிமீட்டரும், அடவிநயினார் அணையில் 7 மில்லிமீட்டரும் மழை பெய்தது.

    • குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
    • புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை.

    சிவகிரி:

    மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு சிவகிரி அருகே நெல்கட்டும்செவல் கிராமத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வெள்ளையர்களை எதிர்த்து வீரவாள் சுழற்றி போரிட்ட மாமன்னர் பூலித்தேவரின் வீரமும், திமிரும் தமிழர்களாக எங்களுக்கும் உண்டு. பீரங்கியும், துப்பாக்கியையும் எதிர்த்து வெறும் வாளையும், வேலையும் கொண்டு யுத்தம் செய்த பெரும் பாட்டனார் பூலித்தேவர்.

    திரை உலகத்தில் மட்டுமல்லாது, பாலியல் துன்புறுத்தல்கள் அனைத்து துறைகளிலும் இருக்கிறது. சினிமா துறையை பொறுத்தவரையில் குற்றச்சாட்டு சொல்லியதால் அது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எந்த துறையிலும் இதுபோன்று நிலை ஏற்படக்கூடாது.

    தற்போது கேரவன் போன்ற வாகனங்களில் கூட காமிராக்கள் அமைத்து நடிகைகள் உடை மாற்றுவதை படம் பிடிப்பது அநாகரிகமான செயல். இது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனி நடக்காது என்பதற்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    உலகிற்கே அறிவை கடன் கொடுத்த மக்கள் நாங்கள். புதிய கல்வி கொள்கை முறையில் சிறப்புகள் ஏதும் இல்லை. குல கல்வி முறையை மறுபடியும் ஊக்குவித்து வருகின்றனர். புதிய கல்வி கொள்கை ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அண்ணாமலையின் உருவபொம்மையை அதிமுகவினர் நடுரோட்டில் எரித்தனர்.
    • தடுக்க முயன்ற போது போலீசாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    மானாமதுரை:

    கடந்த இரண்டு நாட்கள் முன்பு அண்ணாமலை எதிர்கட்சியான அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசியதாக கூறியுள்ளார்.

    இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், அதிமுக நிர்வாகிகள் சுமார் 50- க்கும் மேற்பட்டோர் அண்ணாமலையின் உருவபொம்மையை நடு ரோட்டில் வைத்து எரித்தும், காலணிகளால் அடித்தும் அதிமுகவினர் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

    அப்போது இதை தடுக்க முயன்ற போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதேபோல் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அண்ணாமலை உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர்.

    அப்போது போலீசாருக்கு, அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் ராணிப்பேட்டை, அருப்புக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களிலும் அண்ணாமலையை எதிர்த்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.
    • கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தர பாண்டியபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.

    அந்த வகையில், இந்த ஆண்டும் தற்போது சூரியகாந்தி சாகுபடி சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது அவை அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில், செழித்து வளர்ந்துள்ள அந்த சூரியகாந்தி பூவின் அழகு அந்த பகுதியில் கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    ஏற்கனவே கடந்த சில வருடங்களாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூக்களின் அழகை ரசிப்பதற்காக கார்களில் குடும்பத்துடன் தென்காசியில் இருந்து ஆய்க்குடி வழியாக சுரண்டை செல்லும் சாலையில் வந்து சூரியகாந்தி தோட்டத்திற்கு படையெடுப்பார்கள்.

    தொடர்ந்து கண்களை கவரும் சூரியகாந்திக்கு நடுவில் நின்று செல்பி எடுத்து மகிழ்வார்கள்.

    இதனால் குற்றாலம் சீசன் காலத்தில் இந்த பகுதிகளும் சுற்றுலாத் தலமாக மாறிவிடும். அதன்படி இந்த ஆண்டும் சூரியகாந்தி பூக்கள் கம்பளி, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் குடும்பம் குடும்பமாக கார்களில் வந்து தங்கள் குழந்தைகளுடன் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்களுக்கு இடையில் நின்று உற்சாகமாக புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    கேரளாவில் திருமணமான புதுமண தம்பதிகள் பல்வேறு ரக ஆடைகளை அணிந்து கொண்டு சூரியகாந்தி மலர் இருக்கும் பகுதியை சுற்றிலும் போட்டோ சூட் நடத்தி வருகின்றனர். இதனால் வயல் வெளியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.

    • 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
    • இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    சங்கரன்கோவில்:

    தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் புகழ்பெற்றது சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில்.

    இந்த கோவிலில் கடந்த 2008-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின் 2020-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா தொற்று காரணமாக அப்போது நடைபெறவில்லை.

    இதைத்தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று அங்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி தென்காசி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் குடமுழுக்குத் திருவிழாவை யொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இதில் தினமும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோவிலில் குடமுழுக்குத் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    இதற்காக கோவில் உள் பிரகாரத்தில் 66 குண்டங்கள் கொண்ட யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பூர்வாங்க பூஜைகள் கடந்த 16-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் மங்கள வாத்தியம், வேதபாராயணம், திருமுறை பாராயணம் நடைபெற்றது. மேலும் ஆச்சார்ய விஷேச சந்தி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம் ஆகிய வற்றுடன் 2-ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது.

    பின்னர் மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆச்சார்ய விஷேத சந்தி விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம் பூஜைகளுடன் 3-ம் மற்றும் 4-ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

    நேற்று காலை பரிவார யாகசாலையில் மகாபூர்ணா குதி, தீபாராதனை முடிந்ததும் கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதான யாக சாலையில் மஹாபூர்ணாகுதி, உபச்சாரங்கள் நடைபெற்றது.

    சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகத்தையொட்டி இன்று காலை 5 மணிக்கு மேல் மங்கள வாத்தியம், 5.30 மணிக்கு வேத பாராயணம், காலை 6 மணிக்கு திருமுறை பாராயணம், 6:30 மணி முதல் விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது.

     

    காலை 8 மணிக்கு கலசங்கள் புறப்பாடும், 9 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி, சங்கர நாராயணசாமி விமானம் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகமும், 9.20 மணிக்கு கோமதி அம்பிகை, சமேத சங்கரலிங்க சுவாமி மற்றும் சங்கரநாராயணசாமி மூலஸ்தான மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் மூர்த்தி, தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், ராணிஸ்ரீ குமார் எம்.பி., ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, அ.தி.மு.க. மாநில கொள்கைபரப்பு துணை செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், அல்லி ராணி அய்யாத்துரை பாண்டியன், அறங்காவல குழு தலைவர் சண்முகையா அறங்காவலர்கள் ராமகிருஷ்ணன், முப்பிடாதி, வெள்ளைச்சாமி, முத்துலட்சுமி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிகள் ஈடுபட்டிருந்தனர்.

    • குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் அருவிகளில் குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்பட்டது.
    • தற்போது தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமானதால் அருவிகளில் குளிக்க அடிக்கடி தடை விதிக்கப்பட்டது. இதனால் குற்றாலம் அருவியில் குளிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில் சில நாட்களாக தண்ணீர் வரத்து சீராக இருப்பதால் அருவியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

    பழைய குற்றாலம், மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சீராக விழும் தண்ணீரில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்து வந்தனர்.

    இந்நிலையில், குற்றாலம் மெயின் அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென பாறை கற்கள் உருண்டு விழுந்ததால் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

    சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி, குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி.
    • செப்டம்பர் 1-ந்தேதி பூலித்தேவன் 309-வது பிறந்தநாள் நிகழ்ச்சி நடக்கிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டம், பச்சேரி கிராமத்தில் வருகிற 20-ந்தேதி ஒண்டிவீரன் 253-வது வீரவணக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் செப்டம்பர் 1-ந்தேதி நெல்கட்டும்செவல் கிராமத்தில் வீரவணக்க நிகழ்ச்சி நிகழ்ச்சி நடக்கிறது.

    இந்த 2 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்த உள்ளூர் மற்றும் தென்காசி மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டத்தில் இருந்தும் வருவார்கள்.

    இந்நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் 18-ந்தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 21-ந்தேதி காலை 10 மணி வரைக்கும், 30-ந்தேதி மாலை 6 மணி முதல் செப்டம்பர் 2-ந்தேதி காலை 10 மணிவரை ஊரடங்கு தடை உத்தரவு அமலில் இருக்கும்.

    இந்தநாளில் அனைவரும் கூட்டமாக செல்லாமல், 4 பேர் வீதம் சென்று மரியாதை செலுத்திட முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப் படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சாரல் திருவிழா களைகட்டி உள்ளது.
    • குற்றாலத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இந்த ஆண்டிற்கான சாரல் திருவிழா கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

    குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம்,புலி அருவி,சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான அளவில் தண்ணீர் விழுந்து வரும் நிலையில், சாரல் திருவிழாவும் நடைபெறுவதால் விழா களைகட்டி உள்ளது.

    சாரல் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெற்று வருவதால் அதில் கலந்து கொள்வதற்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் குற்றாலத்தில் குவிந்து வருவதால் குற்றாலத்தில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

    இன்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே குற்றால அருவிகளில் குளிப்பதற்கு கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக ஐந்தருவி. மெயின் அருவி.

    பழைய குற்றால அருவிகளில் குளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

    குற்றாலம் சாரல் திருவிழாவில் இன்று காலையில் பெண்களுக்கான கோலப் போட்டியும் ஆண்களுக்கான ஆணழகன் போட்டியும் நடை பெற்றது.

    மாலையில் கலை பண்பாட்டு துறையின் சார்பில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருப்பதால் சுற்றுலா பயணிகள் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்து குற்றாலத்தில் குவிந்துள்ளனர்.

    சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

    ×