என் மலர்
இந்தியா

உறுப்பு தானம் மூலம் 2 பேருக்கு புத்துயிர் கொடுத்த 16 மாதக் குழந்தை

- கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
- குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
ஒரு காலக்கட்டத்தில் உடல் உறுப்பு தானம் என்பது அரிதான நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வால் பல பேர் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய தொடர்ந்து பலரும் முன் வருகின்றனர்.
இந்த நிலையில், 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 16 மாத பெண் குழந்தையான ஜன்மேஷ் லென்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததையடுத்து மீளாதுயரத்தில் இருந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவ குழு உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது.
இதனைத்தொடர்ந்து, மிகுந்த மன வலிமையுடனும், இரக்கத்துடனும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு கல்லீரலை அகற்றி டெல்லியில் உள்ள ILBS-க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அபாய கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அதேபோன்று குழந்தையின் சிறுநீரகங்கள் புவனேஸ்வரியில் உள்ள AIIMS-BBS-ல் ஒரு நோயாளிக்கு என்-பிளாக் முறையில் பொருத்தப்பட்டன.
இதன்மூலம் 2 பேருக்கு புதிய வாழ்க்கையை ஒடிசாவின் இளைய உறுப்பு தானம் செய்பவரான 16 மாத குழந்தை ஜன்மேஷ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.