என் மலர்
இந்தியா

வயிற்றில் விஷ ஊசி செலுத்தி பாஜக தலைவர் நூதன கொலை.. உ.பி.யில் பதறவைக்கும் சம்பவம்

- அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர்
- குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் வயிற்றில் விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பல் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட பாஜக தலைவரான 60 வயதான குல்பாம் சிங் யாதவ், நேற்று (திங்கள்கிழமை), ஜுனாவாய் அருகே தப்தாரா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். தகவலின்படி, நேற்று மதியம் ஒரு பைக்கில் மூன்று பேர் குல்ஃபாம் சிங் யாதவை சந்திக்க அடைந்தனர்.
அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர். அப்போது மூவரில் ஒருவன் குல்பாம் சிங் எதிர்பாராத நேரத்தில் அவரது வயிற்றில் ஊசி ஒன்றை செலுத்தியுள்ளான். அதன்பின் உடனே அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.
குடும்பத்தினர் அவரை குன்னூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால், அலிகார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அலிகார் செல்லும் வழியிலேயே குல்பாம் சிங் யாதவ் உயிர் பிரிந்தது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து குல்பாமுக்கு போடப்பட்ட ஊசி கைப்பற்றப்பட்டது.
ஊசியில் இருந்தது எந்த மாதிரியான மருந்து என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
2004 குன்னூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் குல்பாம் சிங் யாதவ் போட்டியிட்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட செயல்பாட்டாளராகவும், பாஜக மாவட்ட பொதுச் செயலாளராகவும், மேற்கு உ.பி.யின் பாஜக துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.