என் மலர்
இந்தியா

பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டுகிறோம், ஆனால் - டெல்லி பல்கலைகழகம்

- பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான சர்ச்சை தற்போது வரை நீடிக்கிறது.
- பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பாக சர்ச்சை எழுந்ததையடுத்து, இதுதொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு தகவல் ஆணைத்திடம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், விவரம் கேட்டு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கெஜ்ரிவால் கேட்ட விவரங்களை வழங்கும்படி டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகத்திற்கு தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பரில் டெல்லி பல்கலைக்கழகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தகவல் ஆணையரின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு சான்றிதழை நீதிமன்றத்தில் காட்டத் தயாராக உள்ளோம். ஆனால், மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் டெல்லி உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
முன்னதாக 2023 ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த அகமதாபாத் உயர் நீதிமன்றம், "பிரதமர் மோடியின் பட்டப்படிப்பு குறித்த விவரங்களை வழங்க வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. அத்துடன், பிரதமரின் பட்டப்படிப்பு விவரங்களை கேட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.