என் மலர்
இந்தியா

ஆதார் பூனாவாலா
சீனாவில் தொற்று அதிகரித்தாலும் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை - ஆதார் பூனாவாலா

- டெல்லியில் சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
- மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டது.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சுகாதாரத் துறை செயலாளர்கள், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் ராஜிவ் பல், நிதி ஆயோக் (சுகாதாரம்) உறுப்பினர் வி.கே.பால், தொற்றுநோய்களுக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.எல்.அரோரா, உயிரி தொழில்நுட்பத்துறை செயலாளர் ராஜேஷ் கோகலே, சீரம் நிறுவன தலைமை செயல் இயக்குனர் ஆதார் பூனாவாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில், மாநில அரசுகளை உஷார்படுத்தியுள்ள மத்திய அரசு, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது பரவிவரும் கொரோனா குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என சீரம் தடுப்பூசி நிறுவன சி.இ.ஓ. ஆதார் பூனாவாலா தெரிவித்தார்.
இதுதொடர்பாக ஆதார் பூனாவாலா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. எனினும் நாம் அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், நாம் சிறப்பான முறையில் தடுப்பூசி பாதுகாப்பை பெற்றிருக்கிறோம். மத்திய அரசும் சுகாதாரத் துறையும் வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என பதிவிட்டுள்ளார்.