என் மலர்
இந்தியா

மொபைல் போன் கட்டணம் 94 சதவீதம் குறைந்துள்ளது: ஜோதிராதித்ய சிந்தியா

- 2014-ம் ஆண்டில் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தினர்.
- தற்போது இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, காங்கிரஸ் உறுப்பினர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அனைத்து செல்போன் நிறுவனங்களும் கடந்த ஆண்டு ஜூலை 3-ம் தேதி கட்டணத்தை உயர்த்தின. அது மத்திய அரசுக்கு தெரியுமா? இதனால் செல்போன் பயன்படுத்துவோருக்கு ரூ.34,000 கோடி கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டண உயர்வை மத்திய அரசால் தடுக்க முடியாதா? என்றார்.
அப்போது, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா பதிலளித்தார். அவர் கூறியதாவது:
செல்போன் கட்டணம் 10 சதவீதம் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 5ஜி சேவையை வேகமாக அறிமுகப்படுத்துவதற்கு போட்ட முதலீடே அதற்கு காரணம்.
ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அந்த முதலீட்டை திரும்ப எடுக்க வேண்டி இருக்கிறது. 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட 22 மாதங்களில் 98 சதவீத மாவட்டங்களில் 82 சதவீதம் பேரை சென்றடைந்துள்ளது.
நம் நாட்டில் 2014-ல் 90 கோடி செல்போன் சந்தாதாரர்கள் இருந்தனர். இன்று 116 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். கடந்த 2014ல் 25 கோடி சந்தாதாரர்கள் மட்டுமே இணையதள சேவையை பயன்படுத்தி வந்தனர். இன்று இணையதள சேவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 97.44 கோடியாக உயர்ந்துள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டில் ஒரு ஜிபி பிராட்பேண்ட் (வேகம்) இணையத்தின் விலை ஒரு ஜி.பி.க்கு ரூ.270 ஆக இருந்தது. இது தற்போது ஒரு ஜிபிக்கு ரூ.9.70 ஆக குறைந்துள்ளது.
நுகர்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கட்டணங்களை கண்காணிப்பது அவசியம். போட்டியை ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகளே இந்தக் கட்டண குறைவுக்கு காரணம். இந்த குறைவு, குறிப்பாக கிராமப்புறங்களில் செல்போன் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.
தொலைதொடர்பு சேவைகள் அனைத்து குடிமக்களுக்கும் மலிவு விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்து வருகிறது. உலகிலேயே இந்தியாவில்தான் அழைப்பு கட்டணமும், டேட்டா கட்டணமும் மலிவாக உள்ளது என தெரிவித்தார்.