என் மலர்
இந்தியா

பிரான்ஸ், அமெரிக்க சுற்றுப்பயணம் முடிந்து டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி

- அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி தலைநகர் பாரீசில் நடந்த சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானையும் பிரதமர் மோடி சந்தித்தார். இச்சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு 2 நாள் பயணமாக சென்றடைந்தார். அங்கு கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி நேற்று அதிகாலையில் சந்தித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக டிரம்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதிபர் டிரம்பை சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்களை குறித்து விவாதித்தார்.
டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உள்ளிட்ட தொழிலதிபர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசித்தார்.
இந்நிலையில், அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி நேற்று நள்ளிரவு தலைநகர் டெல்லி திரும்பினார். அவரை அதிகாரிகள் வரவேற்றனர்.