என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
இந்தியா
![கோவா-கர்நாடகா-கேரளா-தமிழகத்தை இணைக்கும் நான்குவழி சாலை: மத்திய அரசு விளக்கம் கோவா-கர்நாடகா-கேரளா-தமிழகத்தை இணைக்கும் நான்குவழி சாலை: மத்திய அரசு விளக்கம்](https://media.maalaimalar.com/h-upload/2022/07/04/1723748-nithin-katkari.jpg)
நிதின்கட்கரி
கோவா-கர்நாடகா-கேரளா-தமிழகத்தை இணைக்கும் நான்குவழி சாலை: மத்திய அரசு விளக்கம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- இந்த தேசிய நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும்.
- போக்குவரத்து நேரம் குறைவதுடன், விபத்துக்கள் தடுக்கப்படும்.
நான்கு மாநிலங்களை இணைக்கும் நான்கு வழிச்சாலைத் திட்டம் பணிகள் தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்கரி, தமது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்கிறது. இணைப்பின் வாயிலாக செழிப்பு என்ற யுகத்தை நோக்கி புதிய இந்தியாவை மோடி அரசு வழி நடத்திச் செல்கிறது.
இத்திட்டத்தின் கீழ் கோவா, கர்நாடகா எல்லைப்பகுதியிலிருந்து கர்நாடகாவின் தேசிய நெடுஞ்சாலை எண்17-லில் உள்ள குந்தப்பூர் வரை 173 கிலோ மீட்டர் தொலைவிற்கு அதாவது 92.42 சதவீதம் அளவிற்கு சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் டிசம்பர் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும்.
மொத்தமுள்ள 187 கிலோமீட்டர் தொலைவிலான சாலை பகுதியில் ஒரு புறம் அரபிக்கடல் கடற்கரையோரமும், மறுபுறம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியும் அமைந்துள்ளது.
அற்புதமான காட்சியுடன் அமைந்துள்ள இந்த கடற்கரையோர நெடுஞ்சாலை, மேற்கு பகுதியையும், தென்னிந்திய பகுதியையும் இணைக்கும். இதன் மூலம் போக்குவரத்து நேரம் குறையும், விபத்துக்கள் தடுக்கப்படும், எரி்பொருள் சேமிக்கப்படும்.
தமிழகத்தின் கன்னியாகுமரியுடன் திருவனந்தபுரம், கோழிக்கோடு, கொச்சி, மங்களூர், உடுப்பி, பனாஜி உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைத்து பயணிகளுக்கு உலகத் தரத்திலான சாலை உள்கட்டமைப்பு அனுபவத்தை வழங்குவது இந்தத் திட்டத்தின் நோக்கம்.
புதிய வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு பன்மடங்கு வாய்ப்புகளுடன், திட்டம் அமையவுள்ள பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக்குப் புதிய உத்வேகத்தை வழங்க இந்த நெடுஞ்சாலை மேம்பாட்டு முயற்சி உதவுகிறது. இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை இத்திட்டம் உருவாக்கியிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.