என் மலர்
இந்தியா

சொத்துக்காக 103 வயது தந்தையை சூழ்ச்சி செய்து சிறையில் தள்ளிய மகன்கள்.. 18 மாதங்களுக்கு பின் விடுதலை

- இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர்
- சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் வசிக்கும் குர்மீத் சிங்கிற்கு 103 வயது. 2018 ஆம் ஆண்டில் அவர் தனது ஐந்து ஏக்கர் நிலத்தை குருத்வாராவிற்கு நன்கொடையாக வழங்க முடிவெடுத்தார்.
இது அவரது மகன்களான கமல்ஜீத் மற்றும் ஹர்பிரீத் சிங்கிற்குப் பிடிக்கவில்லை. தந்தை குருத்வாராவிற்கு நிலத்தை நான் கொடுப்பதைத் தடுக்க விரும்பினர்.
இதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் முதியவரின் மகன்கள் ஒரு தந்திரமான திட்டத்தை வகுத்தனர்.
நிலம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் முடிந்துவிட்டதாகவும், இனி நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்கள் தனது தந்தையிடம் பொய் கூறினர். முதியவர் தனது மகன்களை நம்பினார். நீதிமன்றத்திற்குச் செல்லவில்லை.
ஆனால் மகன்கள் கமலும் ஹர்ப்ரீத்தும் தொடர்ந்து நீதிமன்றத்திற்குச் சென்று வந்தனர். எனவே விசாரணைகளுக்கு ஆஜராகத் தவறியதற்காக குர்மீத்துக்கு நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்தது. சில நாட்களுக்குப் பிறகு போலீசார் அவரைக் கைது செய்தனர். அதன்படி முதியவர் கைது செய்யப்பட்டு கடந்த 18 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார்.

இதற்கிடையே சிறைக்குச் சென்ற உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் குர்மீத்தைப் பற்றி அறிந்து கொண்டனர். அவருடைய கதையைக் கேட்டு அவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.
குர்மீத்தை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகளை குர்மீத்தின் மகன்கள் முறியடிக்க முயன்றனர். ஜாமீன் கிடைக்காமல் இருக்க அவர்கள் நிறைய முயற்சி செய்தனர்.
இருப்பினும், அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் பின்வாங்கவில்லை. பல மாத முயற்சிக்குப் பிறகு, குர்மீத்துக்கு ஜாமீன் கிடைத்தது.
அவர் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்தார். இதன்மூலம் அவரது கதை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனது மகன்கள் செய்த காரியத்தால் அவர் மிகவும் மனமுடைந்து போயுள்ளார். எந்தத் தந்தைக்கும் தன்னைப் போன்ற ஒரு நிலைமை வரக்கூடாது என்று அவர் கண்ணீர் மல்க கூறுகிறார்.