என் மலர்
கிரிக்கெட் (Cricket)

பாகிஸ்தான் அணியை விமர்சித்த கவாஸ்கருக்கு பதிலடி கொடுத்த கில்லஸ்பி

- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் மோசமாக விளையாடியது.
- கவாஸ்கர் பாகிஸ்தான் அணியை விமர்சனம் செய்திருந்தார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் இந்த தொடரை நடத்துகிறது. "ஏ" பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றிருந்தன.
பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக ஆறு விக்கெட் வித்தியாசத்திலும், நியூசிலாந்துக்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது. இதனால் ஒரு போட்டியில் கூட வெற்றிபெற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியது.
மோசமான தோல்வியால் பாகிஸ்தான் அணி கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் என்பது போல் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரது கருத்துக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், பாகிஸ்தான் அணி முன்னாள் பயிற்சியாளருமான ஜேசன் கில்லஸ்பி கண்டனம் தெரிவித்தள்ளார்.
இது தொடர்பாக கில்லஸ்பி கூறுகையில் "நான் கவாஸ்கரின் வார்த்தை ஜாலங்களை ஏற்கவில்லை. சுனில் கவாஸ்கர் இந்தியா "பி" அணி அல்லது இந்தியா "சி" அணி கூட தற்போதைய பாாகிஸ்தான் அணியை வீழ்த்திவிடும் எனக் கூறியதை நான் பார்த்தேன். இது முட்டாள் தனமானது. முற்றிலும் முட்டாள்தனமானது" என்றார்.