search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார்- நியூசிலாந்து பயிற்சியாளர்
    X

    சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி: வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார்- நியூசிலாந்து பயிற்சியாளர்

    • இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள்.
    • வருண் பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள்.

    துபாய்:

    சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் நாளை நியூசிலாந்து அணி மோத உள்ள நிலையில் நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எங்களுக்கு எதிரான கடைசி லீக்கில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் ஒரு தரமான பவுலர் என்பதில் சந்தேகமில்லை. இறுதிப்போட்டியிலும் எங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

    எனவே அவரது பந்து வீச்சை எடுபடாமல் செய்து, எப்படி ரன்கள் குவிப்பது என எங்களது பேட்டர்கள் தீவிரமாக சிந்திக்கிறார்கள். அவர் போன்ற மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் பவுலருக்கு எதிராக பகலில் பேட் செய்வது சற்று எளிதாக இருக்கும் என நினைக்கிறேன்.

    மொத்தத்தில் இந்திய அணியினர் 4 சுழல் வியூகத்துடன் வருவார்கள். அனைவரும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள். இது எப்போதும் சவாலான விஷயம். அவர்களை சமாளிக்க தெளிவான திட்டமிடலுடன் தயாராக வேண்டும். எங்களது பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் பெரிய போட்டிகளில் எழுச்சி பெறக்கூடியவர். பல முறை நியூசிலாந்து அணிக்காக இதை செய்திருக்கிறார். அது மட்டுமின்றி உலகில் உள்ள வெவ்வேறு ஆடுகளங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு ரன் எடுப்பதில் தனித்துவமான ஆட்டக்காரர்களில் ஒருவர். இது அவருக்குரிய நாளாக இருக்கும் என்று நம்புகிறோம்.

    இந்திய அணி துபாயில் மட்டும் ஆடுவது அவர்களுக்கு சாதகமான அம்சமா? என கேட்கிறீர்கள். போட்டி அட்டவணையை உருவாக்குவது எங்களது கையில் இல்லை. இது ஐ.சி.சி.யின் முடிவு. அதனால் அது பற்றி நாங்கள் அதிகமாக கவலைப்பட தேவையில்லை. இந்திய அணி தங்களது அனைத்து ஆட்டங்களையும் துபாயிலேயே விளையாடும் வாய்ப்பை பெற்றிருக்கிறது. நாங்களும் இங்கு ஒரு ஆட்டத்தில் ஆடியுள்ளோம். அதில் கிடைத்த அனுபவத்தில் இருந்து சீக்கிரமாக கற்றுக்கொள்கிறோம்.

    இந்த தொடரின் தற்போதைய நிலையை பார்த்தால், 8 அணிகளில் இருந்து 2 அணியாக இறுதி சுற்றுக்கு வந்துள்ளோம். எங்களது இடத்தில் இருந்து பார்த்தால், இது பரவசமூட்டும் ஒரு சூழல். இன்னும் ஒரு ஆட்டம் தான் எஞ்சியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை இந்திய அணியை நியூசிலாந்து தோற்கடித்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன்.

    பாகிஸ்தானுக்கும், துபாய்க்கும் மாறி மாறி அலைந்தது கொஞ்சம் சோர்வாகத் தான் இருந்தது. லாகூரில் இருந்து துபாய்க்கு வருவதற்கே ஒரு நாள் சரியாகி விட்டது. ஆனாலும் பயணக்களைப்பில் இருந்து மீண்டு இறுதிப்போட்டிக்கு திட்டமிடுவதற்கும், பயிற்சி செய்வதற்கும் இரு நாட்கள் உள்ளது. நிறைய பயிற்சி செய்வதை விட உடலுக்கும், மனதுக்கும் சரியான இணைப்பு இருக்க வேண்டியது முக்கியம். அடுத்த இரு நாட்களில் இதில் தான் கவனம் செலுத்துவோம்.

    இவ்வாறு கேரி ஸ்டீட் கூறினார்.

    Next Story
    ×