என் மலர்
கிரிக்கெட் (Cricket)

மகளிர் டி20 கிரிக்கெட்: நியூசிலாந்து - இலங்கை அணிகள் இடையிலான தொடர் டிரா

- ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடியது.
- நியூசிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அந்நாட்டு மகளிர் அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது.
இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இலங்கை அணியும், இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து அணியும் வெற்றி பெற்று தொடரில் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தன.
இதையடுத்து இரு அணிகள் இடையிலான மூன்றாவது டி20 போட்டி டுனெடினில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணி 14.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் அடித்திருந்தபோது மழை குறுக்கிட்டது.
அதன் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. ஜார்ஜியா பிம்மர் 46 ரன்களுடனும், இஸ்ஸி ஷார்ப் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். மழை நீண்ட நேரமாகியும் நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.