என் மலர்
செய்திகள்
கதிராமங்கலம் போராட்டத்துக்கு ஆதரவு: கைதான அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்கு நிபந்தனை ஜாமீன்
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவசண்முகம் தெருவை சேர்ந்தவர் குபேரன் (வயது 32). சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர். இவர் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் ஆகிய இடங்களில் எரிவாயு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கைதான பேராசிரியர் ஜெயராமன், விடுதலைச்சுடர் உள்ளிட்ட நிர்வாகிகளை விடுதலை செய்யக்கோரியும், போராட்டத்துக்கு வருமாறு மாணவர்களை அழைப்பு விடுத்து முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார்.
கடந்த 20-ந்தேதி அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களை வகுப்பு புறக்கணிப்பு செய்ய சொல்லி, போராட்டம் நடத்த மாணவர்களை அழைத்ததாக குபேரன் மீது சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் குபேரனுக்கு ஜாமீன் கேட்டு அவரது சார்பில் வக்கீல் கோபாலகிருஷ்ணன் தலைமையில் சிதம்பரம் 1-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வக்கீல்கள் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஆயிஷாபேகம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை நீதிபதி விசாரித்து குபேரனுக்கு நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மறுஉத்தரவு வரும் வரை தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 5 மணிக்கும் வந்து சிதம்பரம் கோர்ட்டில் குபேரன் கையெழுத்து போட்டு விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.