search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்
    X

    மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்ததால் குட்டையாக காட்சியளிக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்

    • கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    சேலம்:

    மேட்டூர் அணை தமிழகத்தின் பல மாவட்டங்களின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்து வருகிறது. மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 12 டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்களில் சம்பா, குறுவை, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

    அதுமட்டுமின்றி மேட்டூர் அணையில் இருந்து பல்வேறு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இங்கிருந்து வேலூர் மாவட்டம் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

    இதைத்தவிர மேட்டூர் அணையின் உபரிநீர் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ராட்சத குழாய் பயன்படுத்தி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு ஏரிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் பல லட்சம் மக்களுக்கு மேட்டூர் அணை கைகொடுத்து வருகிறது. இந்த அணையை நம்பியே அவர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். நடப்பாண்டு மேட்டூர் அணையில் நீர்மட்டம் 103 அடி தண்ணீர் இருந்ததால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் டெல்டாவில் உள்ள 12 மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மும்முரமாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது குறுவை சாகுபடி அறுவடை செய்யும் தருவாயில் உள்ளது.

    இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து போதிய அளவு தண்ணீர் தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்து விடவில்லை. இதனால் கடந்த மாதம் 29-ந்தேதி முதல் 15 நாட்களுக்கு (12-ந்தேதி வரை) தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட பிறகும் உரிய தண்ணீரை தரவில்லை.

    இதனால் மேலும் 15 நாட்களுக்கு தண்ணீர் வழங்க வேண்டும் என பரிந்துரை செய்த பிறகும் அதை கர்நாடக அரசு ஏற்க மறுத்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கூறி விட்டது.

    இதனிடையே பிலிகுண்டு, ஒகேனக்கல், கொளத்தூர், மேட்டூர் உள்ளிட்ட தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தென்மேற்கு பருவமழை கைகொடுக்கவில்லை. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அடியோடு சரிந்து விட்டது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து 800 கன அடிக்கும் குறைவாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    நேற்று முன்தினம் நீர்வரத்து 670 கன அடியாக இருந்த நிலையில் நேற்று 392 கன அடியாக சரிந்தது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 507 கன அடி நீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பாசனத்திற்காக 6,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட திறப்பு அதிகமாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் 45.01 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 44.06 அடியாக சரிந்தது. இன்று நீர்மட்டம் மேலும் குறைந்து 43.11 அடியானது.

    தற்போது அணையில் 13.74 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இதில் 5 டி.எம்.சி.தண்ணீர் குடிநீர் மற்றும் மீன்வளத்துக்கு பயன்படுத்தப்படும். நீர் திறப்பு தொடர்ந்து 6,500 கன அடி அளவில் நீடித்தால் இன்னும் 8 நாட்களுக்கு மட்டுமே அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும் சூழல் உருவாகி உள்ளது.

    மழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணை நிரம்பும். மேட்டூர் அணை சரிவடைந்து வரும் நிலையில் விரைவில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்படும் என தெரிகிறது. குறுவை பயிர்கள் அறுவடை செய்யும் தருணத்தில் போதிய அளவில் தண்ணீர் கிடைக்காததால் குறுவை பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணையை நம்பி பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    Next Story
    ×