என் மலர்
தமிழ்நாடு
இடைத்தேர்தல் வாக்குப்பதிவு - அன்றே கணித்தோம்! : வீடியாவை பகிர்ந்த அ.தி.மு.க.
- எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார்.
- தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை முதல் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். ஈரோடு வளையக்கார வீதியில் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த வாக்குச்சாவடி மையம் பதற்றமான வாக்குச்சாவடி மையம் என்பதால் இங்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பரிதா பேகம் என்பவர் தனது கணவருடன் வாக்கு செலுத்த வந்துள்ளார்.
அவர் வரிசையில் நின்று வாக்களிக்கும் அறைக்குள் சென்றார். அப்போது அவரது ஆவணங்களை அலுவலர்கள் சரி பார்த்தபோது உங்களது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பரிதாபேகம் வாக்குச்சாவடி அலுவலர்களிடம் நான் இப்போதுதான் வருகிறேன்.
எனது வாக்கை எப்படி செலுத்த முடியும் என முறையிட்டார். இருப்பினும் அவரது வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவரது கணவர் மட்டும் வாக்கு செலுத்தினார். இது குறித்து பரிதாமேகம் கூறும்போது, வாக்கு செலுத்த சென்ற போது தனது வாக்கு ஏற்கனவே செலுத்தியதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து கேட்டபோது சரிவர பதிலளிக்கவில்லை. தனது வாக்கை செலுத்தியவரின் கையெழுத்தை காட்ட சொல்லியும் காட்டவில்லை. என்னிடம் பூத் சிலிப் உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. இருப்பினும் எனது ஓட்டு எவ்வாறு செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை என்றார்.
இதுகுறித்து தீவிர விசாரித்து தனது மனைவிக்கு வாக்களிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அவரது கணவர் கோரிக்கை விடுத்தார். பின்னர் பரிதாபேகம் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த சம்பவத்தால் வாக்குச்சாவடி மையத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
இதனிடையே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என அ.தி.மு.க. அன்றே கூறியது.. என்று பரிதாபேகம் அளித்த பேட்டியின் வீடியோவை பகிர்ந்து அ.தி.மு.க. தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலிலும், திமுகவின் ஸ்டாலின் மாடல் அரசின் அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்; பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்; தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் தேர்தலை புறக்கணிப்பதாக அ.தி.மு.க. தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறாது ,மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விட மாட்டார்கள் என @aiadmkofficial அன்றே கூறியது..
— AIADMK IT WING - Say No To Drugs & DMK (@AIADMKITWINGOFL) February 5, 2025
#ErodeEastByElection pic.twitter.com/RVVY1bhXiz