search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம்  ஓய்வு
    X

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்வு

    • ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

    தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.

    கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன் படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.

    கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    ஒரு பக்கம் அமைச்சர் முத்துசாமி தலைமையில் தி.மு.க.-வினரும், சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடந்த 2 நாட்களாக ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இரு தரப்பினரும் தீவிர இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று மாலை 6 மணிக்கு பிறகு தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூர் கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (பிப்ரவரி 5-ம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 8-ம் தேதி சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்து விடும்.

    Next Story
    ×