என் மலர்
தமிழ்நாடு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- பிரச்சாரம் ஓய்ந்தது
- ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உயிரிழந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நாளை மறுநாள் ( பிப்ரவரி 5-ம் தேதி) இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் 7-ம் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தி.மு.க. சார்பில் சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முக்கிய எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க. கூட்டணி கட்சிகள் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டி நிலவுகிறது.
கடந்த 20-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் வாக்கு வேட்டையை துவங்கின.
கடந்த 2023-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் போன்று எந்த ஒரு ஆர்ப்பாட்டம் இன்றியும், பரபரப்பு இன்றியும் தற்போதைய தேர்தல் களம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.