என் மலர்
உலகம்

அகதிகளை திருப்பி அனுப்பும் விவகாரம்: ராணுவ விமான பயன்பாட்டை நிறுத்தியது அமெரிக்கா

- சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
- ராணுவ விமானத்தைப் பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு என அமெரிக்கா கூறியது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். அதிபராக பதவியேற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார்.
அதன்படி, அந்நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை கைதுசெய்து அந்நாட்டு ராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு இந்தியா, பெரு, கவுதமாலா, ஹோண்டுராஸ், பனாமா, ஈக்வடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். 12க்கும் மேற்பட்ட முறை சி12 விமானமும், 30க்கும் மேற்பட்ட அகதிகளை அழைத்துச் செல்வதற்கு என்றே உள்ள பயணிகள் விமானமும் பயன்படுத்தப்பட்டன.
அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு 3 முறை சி17 விமானம் மூலம் அகதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்காக ஒவ்வொரு முறையும் 30 லட்சம் அமெரிக்க டாலர்( இந்திய மதிப்பில் சுமார் ரூ.26 கோடி) செலவானது. கவுதமாலாவுக்கு சிலரை மட்டும் அழைத்துச் செல்வதற்கு சுமார் 20 ஆயிரம் டாலர் ( இந்திய மதிப்பில் ரூ.17 லட்சம்) செலவு செய்யப்பட்டுள்ளது.
அரசு தகவல்களின்படி அமெரிக்க அகதிகள் மற்றும் சுங்க அமலாக்கத்துறை வசம் உள்ள அகதிகளுக்கு என்றே உள்ள விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 8,500 டாலர் செலாகும் . ஆனால், சி 17 விமானத்தை இயக்க ஒரு மணி நேரத்திற்கு 28,500 டாலர் செலவானது என கூறப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி ராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது. ராணுவ விமானத்தை பயன்படுத்துவதால் அரசுக்கு கூடுதல் செலவு ஆகிறது. எனவே பயணிகள் விமானம் மூலம் அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அதிக செலவு காரணமாக அகதிகளை அனுப்புவதற்கு சி17 விமானத்தை பயன்படுத்துவதை மார்ச் 1 முதல் அமெரிக்க அரசு நிறுத்தி வைத்து உள்ளதாக தகவல் வெளியாகியது.