என் மலர்
உலகம்

உலகத்திற்கு அமைதியை கொண்டு வருவேன்: ஜெலன்ஸ்கியிடம் உறுதியளித்த டிரம்ப்

- குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டார்.
- டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வரும் நவம்பரில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சிக்கான வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு வெளிநாட்டு தலைவர்களிடம் டொனால்டு டிரம்ப் ஆதரவு கேட்டு பேசி வருகிறார்.
இந்நிலையில், அதிபர் வேட்பாளரான டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் தொலைபேசி வழியே பேசினார்.
இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக செய்தியில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும், நானும் தொலைபேசி வழியே பேசிக் கொண்டோம். எங்களுடைய உரையாடல் நன்றாக இருந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சிக்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டதற்காக எனக்கு அவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
என்னை தொடர்பு கொண்டதற்காக அதிபர் ஜெலன்ஸ்கியை பாராட்டுகிறேன். அடுத்த அமெரிக்க அதிபராக உலகத்திற்கு நான் அமைதியை கொண்டு வருவேன்.
பல உயிர்களை பலி வாங்கி, எண்ணற்ற குடும்பத்தினரை துன்பத்தில் ஆழ்த்திய போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என
பதிவிட்டுள்ளார்.
இந்த உரையாடலின்போது டிரம்ப் மீது நடந்த படுகொலை முயற்சிக்கான தாக்குதலுக்கு ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.