search icon
என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.
    • ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்டவற்றின் நிறுவனரும் உலக பணக்காரருமாக எலான் மஸ்க் அமெரிக்காவில் புதிதாக அமைந்த டிரம்ப் அரசின் கீழ் அரசு செயல்திறன் துறை [DODGE] தலைவராக உள்ளார்.

    அரசின் தேவையற்ற செலவுகளை கண்டுபிடித்து அதை நிறுத்தும் பணியை இத்துறை செய்து வருகிறது. பிந்தங்கிய நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கும் யுஸ் - எய்ட் அமைப்பின் நிதியை DODGE ஆலோசனையின் பேரில் டிரம்ப் நிறுத்தினார்.

    இதற்கிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு பிரபல சமூக ஊடாகமான ட்விட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றி மஸ்க் நடத்திக்கொண்டிருக்கிறார்.

    இந்நிலையில் வளர்ந்து வரும் செயற்கை தொழில்நுட்பத் துறையில் கோலோச்சி வரும் ஓபன் ஏஐ நிறுவனத்தின் மீது எலான் மஸ்கின் கண்கள் விழுந்துள்ளது.  சாட்ஜிபிடி உள்ளிட்ட ஏஐ சேவைகளை இந்நிறுவனம் வழங்கி வருகிறது.

    இதன் தலைமை நிர்வாக அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் உள்ளார். 2015 இல் ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கியவர்களில் எலான் மஸ்க்கும் ஒருவர்.

    ஆனால் 2018 கருத்து வேறுபாடு காரணமான அதிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பின் எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழுவினர், ஓபன் ஏஐ நிறுவனத்தை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

     

    ஓபன்ஏஐ நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலர் கொடுத்த வாங்க எலான் மஸ்க் மற்றும் அவரது முதலீட்டாளர் குழு நேற்று அந்நிறுவனத்திடம் ப்ரொபோஸ் செய்துள்ளது.

    ஆனால் இதற்கு சாம் ஆல்ட்மேன் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட சாம் ஆல்ட்மேன், "வேண்டாம்.. நன்றி.. வேண்டுமானால் எக்ஸ் தளத்தை 9.74 பில்லியன் டாலருக்கு நாங்கள் வாங்க தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 

     

    • பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை
    • எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கடந்த ஜனவரி 19 இல் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை வரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கவில்லை என்றால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.

    ஏற்க்கனவே காசாவை வாங்கி அமெரிக்காவுக்கு சொந்தமாக்குவேன் என்று டிரம்ப் கூறியிருந்தார். காசா அமெரிக்கா கட்டுப்பாட்டில் வந்த பிறகு அங்கிருக்கும் 20 லட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களுக்குத் காசாவுக்குள் திரும்பிச் செல்லும் உரிமை இல்லை என்றும் டிரம்ப் பரபரப்பை கிளப்பினார். எதிர்காலத்திற்கான சிறந்த ரியல் எஸ்டேட் தளம் என்று காசாவை அவர் வர்ணித்தார்.

    சனிகிழமைக்குள் அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால் போர்நிறுத்தத்தை ரத்து செய்ய நேரிடும் என்று தெரிவித்தார். இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும் அதனால் அடுத்த கட்ட பயண கைதிகள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாகவும் ஹமாஸ் அறிவித்ததை அடுத்து டிரம்ப் இவ்வாறு கூறியுள்ளார்.

    டிரம்ப் பேசியதாவது, என்னைப் பொறுத்தவரை, சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் அனைத்து பணயக்கைதிகளும் திருப்பி அனுப்பப்படாவிட்டால் போர் நிறுத்தத்தை ரத்து ரத்து செய்யச் சொல்வேன். சிறிது சிறிதாக அல்ல, இரண்டு, மூன்று என்று அல்ல, மொத்தமாக அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். இல்லையெனில் எல்லாம் கைமீறி போகும். நான் என்ன சொல்கிறேன் என்பதை ஹமாஸ் பிறகு தெரிந்துகொள்ளும் என்று கூறினார்.

    அமெரிக்கா காசாவை கையகப்படுத்தும் திட்டத்தின் கீழ் பாலஸ்தீனியர்களை ஏற்றுக்கொள்ள மறுத்தால், நட்பு நாடுகளான ஜோர்டான் மற்றும் எகிப்துக்கு பில்லியன் கணக்கான டாலர் அமெரிக்க நிதியுதவியை நிறுத்துவதாகவும் டிரம்ப் அச்சறுத்தியுள்ளார்.

    • லஞ்சம் கொடுத்து 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
    • பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ளார்.

    அமெரிக்காவில்  ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் இந்தியாவின் பிரபல தொழில் அதிபர் அதானிக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. 

    மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள்  நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் அதானிக்கு பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது.

    FCPA என்பது வெளிநாட்டு ஊழல் நடைமுறைகள் சட்டம் எனப்படுகிறது. இந்த சட்டம் அமெரிக்க நிறுவனங்களுக்கே பாதகமாக இருப்பதாக கூறியுள்ள டிரம்ப், புதிய சட்டத்தை உருவாக்க அமெரிக்க அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    தற்போது பிரான்சில் இருக்கும் பிரதமர் மோடி நாளை மறுநாள் அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்திக்க உள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மற்ற நாடுகளில் வணிகத்தைப் பெறுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான பல வழக்குகளும் இந்த FCPA சட்டத்தின்கீழ் பதிவாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

    • பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.
    • போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும்

    இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 15 மாதங்களுக்குப் பிறகு போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,700 பேரும், பாலஸ்தீன தரப்பில் சுமார் 47,000 பேரும் கொல்லப்பட்டனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் அமைப்பினர் தங்களிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவித்து வருகின்றனர். அதற்கு ஈடாக பாலஸ்தீனிய கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்து வருகிறது.

    இந்நிலையில் காசாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக டிரம்ப் தெரித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிரம்ப், "காசாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .

    அவர்கள் [காசா மக்கள்] காசாவுக்குத் திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காசாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்" என்று டிரம்ப் தெரிவித்தார்.

    இந்நிலையில், காசாவை ரியல் எஸ்டேட் தளம் ஆக்குவோம் என்று டிரம்ப் அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "47000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 111,000 பாலஸ்தீன மக்கள் காயமடைந்துள்ளனர். வலுக்கட்டாயமாக பாலஸ்தீன மக்களை வெளியேற்றி காசாவை ரியல் எஸ்டேட் தளமாக உருவாக்குவோம் என்று டிரம்ப் பேசுகிறார்.

    போரினால் பாதிக்கப்பட்ட காசா பகுதியானது பாலஸ்தீன மக்களுக்காக மீண்டும் கட்டப்பட வேண்டும் மாறாக 'கோடீஸ்வர சுற்றுலாப் பயணிகளுக்காக' அல்ல" என்று தெரிவித்துள்ளார்.

    • அமெரிக்காவில் மீண்டும் ஓர் விமான விபத்து அரங்கேறியது.
    • விமானத்தின் லேண்டிங் கியர் செயலிழந்ததாக தகவல்.

    அமெரிக்காவின் அரிசோனாவில் உள்ள ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தில் தனியார் ஜெட் விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் பலர் காயமடைந்தனர்.

    ஸ்காட்ஸ்டேல் விமான நிலையத்தின் விமான திட்டமிடல் மற்றும் அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் கெல்லி குஸ்டர் கூறும் போது, "நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு தனியார் வணிக ஜெட் விமானத்தின் மீது மற்றொரு வணிக ஜெட் விமானம் மோதியது. டெக்சாஸின் ஆஸ்டினில் இருந்து வந்த வந்த ஜெட் விமானத்தின் தரையிறங்கும் கியர் செயலிழந்ததாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே மோதல் ஏற்பட்டது," என்று அவர் கூறினார்.

    காயமடைந்தவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் உள்ளார் என்று ஸ்காட்ஸ்டேல் தீயணைப்புத் துறையை சேர்ந்த டேவ் ஃபோலியோ தெரிவித்தார். மோதலில் உயிரிழந்த நபரின் உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

    "இந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உரித்தாகட்டும்" என்று ஃபோலியோ கூறினார். விபத்தைத் தொடர்ந்து ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. 



    • பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுசரிப்பு.

    மத்திய அமெரிக்காவில் உள்ள குவாத்தமாலா என்கிற நாட்டின் புறநகர்ப் பகுதியில் நடந்த பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்துள்ளனர்.

    குவாத்தமாலா நகரில் பேருந்து ஒன்று நெடுஞ்சாலை பாலத்தில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில், 30 பேர் உயிரிழந்தனர். மேலும், உயிர் பிழைத்தவர்கள் பலர் பேருந்தில் சிக்கிக்கொண்டதாக தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

    விபத்து குறித்து குவாத்தமாலா ஜனாதிபதி பெர்னார்டோ அரேவலோ மூன்று நாட்கள் தேசிய துக்கத்தை அறிவித்து, மீட்பு முயற்சிகளுக்கு உதவ நாட்டின் ராணுவம் மற்றும் பேரிடர் நிறுவனத்தை நியமித்தார்.

    மேலும், "இதயத்தை உடைக்கும் செய்திகளைக் கேட்டு விழித்தெழுந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அவர்களின் வலி எனது வலி," என்று அரேவலோ குறிப்பிட்டிருந்தார்.

    • சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க் நியமிக்க முடிவு.
    • பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனுக்கு பட்ஜெட்டில் ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு அதிபராக இருந்த ஜோபைடன் 895 பில்லியன் டாலரை ஒதுக்கியிருந்தார்.

    இந்தநிலையில் பென்டகனுக்கு நிதி ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

    இதையடுத்து அதிபர் டிரம்ப் பென்டகனில் நடந்துள்ள நிதி முறைகேட்டை கண்டறிவதற்காக, சிறப்பு அரசு பிரதிநிதியாக எலான் மஸ்க்கை நியமிக்க முடிவு செய்துள்ளார்.

    கல்வித்துறையை ஆய்வு செய்யுமாறு எலான் மஸ்க்கிடம் கூறுவேன். அதன்பிறகு, ராணுவத்தில் ஆய்வு செய்ய சொல்வேன். பென்டகனில் நடந்த பல நூறு மில்லியன் டாலர் முறைகேடுகளை விரைவில் கண்டுபிடிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே எதிர்க்கட்சியினர், அரசின் ரகசியங்களை எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கும் முடிவு ஆபத்தானது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். பல்வேறு தரப்பினரும் டிரம்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

    பென்டகனுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள பல்வேறு நிறுவனங்களில், எலான் மஸ்க்கின் நிறுவனங்களும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது.
    • பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க அண்டை நாடுகளான மெக்சிகோ, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதித்து வருகிறார்.

    இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதியாகும் எக்கு, அலுமினியம் போன்றவற்றுக்கு 25 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.

    கனடா, பிரேசில், மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து அமெரிக்கா கடந்த ஆண்டு அதிகமான எக்கையும் அலுமினியத்தையும் இறக்குமதி செய்தது. இதனால் அந்த நாடுகள் இறக்குமதி செய்யும் எக்கு அலுமினியம் பொருட்களுக்கு இந்த கூடுதல் வரி விதிப்பால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

    மெக்சிகோ, கனடாவில் இருந்து வரும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகச் அறிவித்திருந்த டிரம்ப் சில நாட்களுக்கு முன்பு அந்த அறிவிப்பை நிறுத்தி வைத்தார். தற்போது இந்த புதிய வரிகளை அவர் அறிவித்திருக்கிறார்.

    கூடுதல் வரி விதிப்பு குறித்து டிரம்ப் கூறும் போது, அவர்கள் எங்களிடம் வரி வசூலித்ததால், நாங்கள் அவர்களிடம் வரி வசூலிக்கிறோம் என்று தெரிவித்தார்.

    கடந்த 2016 முதல் 2020 வரையிலான தனது முதல் பதவிக்காலத்தில், டிரம்ப் எக்கு மீது 25 சதவீத வரியையும், அலுமினியத்தின் மீது 10 சதவீதத்தையும் விதித்தார். ஆனால் பின்னர் கனடா, மெக்சிகோ மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல வர்த்தக நாடுகளுக்கு வரியில்லா ஒதுக்கீட்டை அறிவித்தார்.

    முன்னாள் அதிபர் ஜோபைடன் தனது ஆட்சிக்காலத்தில் இந்த ஒதுக்கீட்டை இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நீட்டித்தார்.

    இதனால் சமீப ஆண்டுகளில் அமெரிக்க எக்கு ஆலை திறன் பயன்பாடு குறைந்துள்ளது. அரசின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுசெய்ய கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மோசமான விஷயத்தை நான் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
    • புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    வாஷிங்டன்:

    ரஷியா-உக்ரைன் இடை யேயான போர் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் ஏராளமான ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

    இதற்கிடையே அமெரிக்க அதிபராக சமீபத்தில் பதவி யேற்ற டிரம்ப், ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார். இதற்காக ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

    மேலும் போரை முடி வுக்குக் கொண்டுவருவது குறித்து அமெரிக்க, ரஷிய அதிகாரிகள் பேசி வரு கின்றனர் என்று தெரி வித்தார். அதேபோல் டிரம்பின் முயற்சியை புதின் பாராட்டி இருந்தார்.

    இந்த நிலையில் புதினுடன் தொலைபேசியில் பேசியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் பயணம் செய்தபோது தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் பேசினேன்.

    போர்க்களத்தில் ஏற்படும் உயிரிழப்பு குறித்து புதின் கவலைப்படுகிறார். மக்கள் இறப்பதை நிறுத்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

    இறந்த அனைவரும் இளைஞர்கள், அழகான வர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகளைப் போன்றவர்கள்.

    போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உறுதியான திட்டம் என்னிடம் இருக்கிறது. இது வேகமாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த போர் உக்ரைனில் மிகவும் மோசமாக உள்ளது. இந்த மோசமான விஷயத்தை நான் முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அதிபர் டிரம்ப் பேட்டியில் தெளிவுபடுத்தி உள்ளார்.
    • மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன.

    டியூக் ஆஃப் சசெக்ஸ் இளவரசர் ஹாரியின் குடியேற்ற நிலையை கேள்விக்கு உட்படுத்தும் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், இளவரசர் ஹாரியை அமெரிக்காவில் இருந்து நாடு கடத்துவதை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிராகரித்து இருப்பதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

    தி நியூயார்க் போஸ்ட்டுக்கு அதிபர் டிரம்ப் அளித்த பேட்டியில், ஹாரி மீது நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்று டிரம்ப் தெளிவுபடுத்தி உள்ளார்.

    "நான் அதைச் செய்ய விரும்பவில்லை. நான் அவரை தனியாக விட்டுவிடுகிறேன். ஏற்கனவே அவரது மனைவியுடன் அவருக்கு போதுமான பிரச்சினைகள் உள்ளன. அவரது மனைவி மோசமானவர்," என்று டிரம்ப் நியூயார்க் போஸ்ட்டிடம் பேசும்போது கூறினார்.

    ஹாரியின் விசா விவகாரம் தொடர்பான சட்ட சிக்கல்கள், குறிப்பாக போதைப் பொருள் பயன்பாடு குறித்து விசா நடைமுறைகளின் போதே ஹாரி தகவல் தெரிவிக்க மறுத்தது தொடர்பாக ஹெரிடேஜ் பவுன்டேஷன் சட்டப் போராட்டம் நடத்தி வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது.

    • லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DOGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

    விவேக் ராமசாமி தலைவர் பதவியிலிருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DOGE முழுமையாகச் சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DOGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

    டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார். இதனையடுத்து "சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்தார்.

    இதனால் டிரம்ப் அமெரிக்க அதிபரா அல்லது எலான் மஸ்க் அதிபரா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. உலக பணக்காரர் ஒருவர் நினைத்தால் வல்லரசு நாட்டையே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பது மஸ்க்- டிரம்ப் விஷயத்தில் புலனாவதைப் பலர் தெரிவித்து வருகின்றனர்.

    ஏகபோக அதிகாரங்களை மஸ்க் பெற்றிருந்தாலும் தனது அனுமதி இன்றி மஸ்க் எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் ஒரு சிறப்பு அரசு ஊழியர் மட்டுமே என்றும் டிரம்ப் தெரிவித்தார். ஆனால் நாளுக்கு நாள் அமெரிக்க அரசில் மஸ்க்கின் பிடி இறுகிக்கொண்டே வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இதை பிரதிபலிக்கும் விதமாக அமெரிக்காவின் பிரபல 'டைம்' இதழ் தனது அட்டைப்படத்தில் ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.

    அதில் அமெரிக்க அதிபர் இருக்கையில் எலான் மஸ்க் அமர்ந்திருக்கிறார். மேலும் வாஷிங்க்டன் (தலைநகர்) மீது எலான் மஸ்க் தொடுத்துள்ள போர் என்று தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. இந்த அட்டைப்படம் வைரலான நிலையில் இதற்கு டிரம்ப் பதிலளித்துள்ளார். ஆதாவது, டைம்ஸ் இதழ் இன்னும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதே தனது தெரியாது என்று கேலியாக கூறியுள்ளார்.  

    • மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார்.
    • குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்திய-அமெரிக்க அரசியல்வாதி ஷாமா சாவந்த் விசா வழங்க மறுத்த மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

    பெங்களூருவில் உள்ள தனது நோய்வாய்ப்பட்ட 82 வயதான தாயாரைப் பார்க்க 3 ஆவது முறையாக இந்திய விசா மறுக்கப்படுவதாக சாவந்த் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மோடி அரசாங்கத்தின் 'நிராகரிப்பு பட்டியலில்' [ரிஜெக்ட் லிஸ்ட்டில்] தான் இருப்பதாக தனக்குச் சொல்லப்பட்டதாக சாவந்த் கூறுகிறார்.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் பிறந்த சாவந்த் அமெரிக்க அரசியலில், குறிப்பாக சியாட்டில் நகர அரசியலில் பல ஆண்டுகளாகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

    மும்பை பல்கலைக்கழகத்தில் பயின்று 1994 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் பட்டம் பெற்றார். பட்டப்படிப்புக்குப் பிறகு, சாவந்த் அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தார். 2003 ஆம் ஆண்டு வட கரோலினா மாநில பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

    2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வரை பொருளாதாரப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

     அமெரிக்காவில் சோசலிஸ்ட் ஆல்டர்நேட்டிவ் என்ற இடதுசாரி அரசியல் கட்சியில் சேர்ந்தார். அவர் 2014 முதல் 2024 வரை சியாட்டில் நகர சபையில் பணியாற்றினார்.

    பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தை சாவந்த் கடுமையாக விமர்சித்து வருகிறார். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை அவர் கடுமையாக விமர்சித்தார்.

    இந்நிலையில் தனது பெயரை மோடி அரசின் ரிஜெக்ட் லிஸ்டில் உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றும் நோய்வாய்ப்பட்ட தனது தாயை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் இதை கண்டித்து சியாட்டிலில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சாவந்த் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி உள்ளது. 

    ×